Sunday 8 May 2016

உனது சொந்த குரலை கண்டுபிடித்தல- தியான யுக்தி – 1

உனது சொந்த குரலை கண்டுபிடித்தல் OSHO
தியான யுக்தி – 1
நீ உனது சொந்த விருப்பத்தின் மூலமாக செயல்பட முடிந்தால், உனது உள்ளுணர்வு சொல்வதை தேர்ந்தெடுக்கமுடிந்தால். . . . ! உனது உள்ளுணர்வு குழந்தை பருவத்தில் மிகவும் வலிமையானதாக இருக்கும். ஆனால் வளர வளர மெதுமெதுவாக அது
வலிமையிழந்துவிடுகிறது. பெற்றோர்களின், ஆசிரியர்களின், சமுதாயத்தின், குருமார்களின் குரல் வலுத்து
ஒலிக்க ஆரம்பித்துவிடுகிறது. நீ உனது குரலை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் அந்த கூட்டத்தை விட்டு வெளியே வர வேண்டும்.
முதல்படி :
உள்ளே கவனி – இது யாருடைய குரல் ?
சில நேரங்களில் அது உனது தந்தையினுடையதாக சில சமயங்களில் அது உனது தாயினுடையதாக, சில நேரங்களில் தாத்தாவினுடையதாக, சில நேரங்களில் உனது ஆசிரியருடையதாக இருக்கலாம்.
இவையனைத்தும் வேறு வேறு விதமாக இருக்கும். அவ்வளவு சுலபமாக அடையாளம் காண முடியாத ஒரே
விஷயம்- உனது சொந்த குரல். அது எப்போதும் அடக்கி வைக்கபட்டிருக்கும். பெரியவர்கள்
சொல்வதை, குருமார்கள் சொல்வதை, ஆசிரியர்கள் சொல்வதை, கேட்கவேண்டும் என்று உனக்கு
சொல்லப்பட்டிருக்கும். ஆனால் உன்னுடைய சொந்த குரலை கவனி, அது கூறுவதை கேள் என்று உனக்கு சொல்லப்பட்டிருக்காது.
உன்னுடைய சொந்த குரல் மெலிதானதாக, கேட்கப்படாமல், இந்த கூட்ட நெரிசலில் கேட்க
முடியாதபடி அழுந்தி இருக்கும்.
அதை கேட்பது கிட்டதட்ட இயலாத செயல். முதலில் நீ இந்த குரல்களிலிருந்து வெளியேற வேண்டும், ஒரு விதமான அமைதியை, மெளனத்தை, நிசப்த்த்தை அடையவேண்டும். அப்போதுதான் அது கேட்கும், உனக்கே சொந்தமான குரல் உண்டு
என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாக உனக்கு தெரியும். அது அங்கே ஒரு ஆழ்நீரோட்டமாக, அடி நீரோட்டமாக இருந்துகொண்டேயிருக்கும்.
நீ உனது சொந்த விருப்பத்தை காணமுடியாவிடில், உனது வாழ்க்கை கருவறையிலிருந்து கல்லறை வரை மிக
நீண்ட ஒரு சோகமாகத் தான் இருக்கும். தன்மீது பிறர் திணிக்கும் அவர்களது
கருத்துகளை எதிர்த்து புரட்சி செய்து தங்களது விருப்பத்தின்படி வாழும் மக்களே
இந்த உலகில் ஆனந்தமாக வாழும் மக்கள். மற்றவர்களது கருத்துகள் எவ்வளவு சிறப்பானதாக
இருந்தாலும் அவை உன்னுடையதாக இல்லாதபோது அவை பயனற்றவையே. உன்னுள் உதயமாகும், உன்னுள் வளரும், உன்னுள் மலரும் கருத்துகளே அர்த்தமுள்ள கருத்துகளாகும்.
இரண்டாம்படி:
யார் பேசுவது என கவனிப்பது !
நீ என்ன பேசினாலும் செய்தாலும் நினைத்தாலும் முடிவு செய்தாலும் உன்னை நீயே கேட்டுக்கொள் : இது உன்னிடமிருந்து வருகிறதா அல்லது வேறு யாராவது பேசுகிறார்களா ?
உன்னுடைய சொந்த குரலை கண்டுபிடித்துவிட்டால் நீ ஆச்சர்யபடுவாய். உன்னுடைய தாயின் குரலை நீ திரும்பவும் கேட்பாய். தந்தையின் குரலை திரும்பவும் கேட்பாய்- அதை கண்டுபிடிப்பது கடினமானதல்ல. முதன்முறை உனக்கு கொடுக்கப்பட்ட சமயத்தில் எப்படி சொல்லப்பட்டதோ அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கும். அந்த
அறிவுரை, கட்டளை, ஒழுக்கம், ஆகிய எல்லாமும் – நீ குருமார்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், சொந்தகாரர்கள், மற்றும் பக்கத்து வீட்டுகாரர்கள் ஆகிய பலரையும் நீ அங்கே காணலாம். சண்டையிட வேண்டிய அவசியமில்லை. அது உன்னுடைய குரலல்ல, வேறு யாருடையதோ – யாராயிருந்தாலும் சரி, வேறு யாரோ தான்- என்று தெரிந்துகொள், அதுவே போதும். நீ அதை
பின்பற்றமாட்டாய். அதன் விளைவுகள் என்னவாக இருந்தாலும் சரி, நன்மையோ, தீமையோ- நீ இப்போது உன் வழியே
செல்ல முடிவெடுத்துவிடுவாய். நீ
பக்குவப்பட, பண்பட ஆரம்பித்துவிடுவாய்.நீ குழந்தையாக இருந்தது போதும், நீ சார்ந்திருப்பவனாக இருந்தது
போதும். நீ இந்த குரல்களை கேட்டு கேட்டு அதை பின்பற்றுபவனாக இருந்தது
போதும்.அவா உனக்கு கொடுத்தது என்ன ? குழப்பம்தான்.
மூன்றாம் படி :
நன்றி. . . . வணக்கம்.
ஒருமுறை அது யாருடைய குரல் என்பதை நீ கண்டு கொண்டு விட்டால்
அந்த குரலுக்குரியவருக்கு நன்றி சொல், பின் உன்னை விட்டு போகச் சொல், பின் அந்த குரலுக்கு, அந்த குரல் சொல்லும் விஷயத்திற்கு வணக்கம் சொல். உனக்கு அந்த குரலை கொடுத்த
நபர் உனது விரோதியல்ல. அவருடைய குறிக்கோள் தீமை செய்வதல்ல, ஆனால் அவரது குறிக்கோள் என்ன
என்பதல்ல கேள்வி. உனது உள் மையத்திலிருந்து வராத ஏதோ ஒன்றை அவர் உன்னிடம்
பதிய வைக்கிறார் என்பதுதான் பிரச்சனை, மேலும் வெளியிலிருந்து வந்து பதியும்
எதுவுமே உன்னை மனரீதியாக அடிமைப்படுத்தும்.
ஒருமுறை அந்த குரலிடம் என்னை விட்டுவிடு என்று உறுதியாக கூறிவிட்டால், பின் நீ அதனுடன் கொண்டுள்ள தொடர்பு, நீ அதனுடன் கொண்டுள்ள அடையாளம் உடைந்துவிடும். அது உன்னுடைய குரல் என்று நீ நினைத்துக்கொண்டிருக்கும்
வரைதான் அது உன்னை கட்டுப்படுத்தும் திறன் பெற்றிருக்கும். அந்த அடையாளம்
தான் முழு பிரச்சனையே. அது உனது எண்ணமல்ல, உனது குரலல்ல, என இப்போது உனக்கு தெரியும். அது
உனது இயல்புக்கு அன்னியமானது. அதை தெரிந்துகொள்வதே போதுமானது. உன்னுள் உள்ள
அந்த குரல்களிலிருந்து நீ விடுபட்டவுடன் நீ இதுவரை கேட்டிராத மெலிதான, சிறிய குரலை கேட்கும்போது
வியப்படைவாய். . . . பின் நீ அதுதான் உனது குரல் என்று தெளிவாக
அறிந்துகொள்வாய்.
அது எப்போதுமே அங்கிருக்கிறது, ஆனால் மெலியதாக, சன்னமாக கேட்கும் ஏனெனில் அது
அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. நீ குழந்தையாக இருக்கும்போது அந்த குரல் மெல்லியதாக இருக்கும், ஒரு விதை முளைவிட்டதைபோல, ஆனால் மற்ற செடிகள் அதை மறைத்து
மூடிவிட்டன. நீ இப்போது அந்த செடிகளை பார்த்து கவனித்துகொண்டிருக்கிறாய், அந்த சிறிய முளைதான் உனது வாழ்க்கை, அது இன்னும் உயிரோடு இருக்கிறது, நீ அதை கண்டுபிடிப்பதற்காக அது காத்திருக்கிறது என்பதை நீ
முற்றிலுமாக மறந்துவிட்டாய். உனது சொந்த குரலை கண்டுபிடி, பின் எந்தவித பயமும் இல்லாமல் அதை
பின்பற்று.
அது உன்னை எங்கே வழிகாட்டி கூட்டி சென்றாலும் அதுதான் உன் வாழ்வின் இலட்சியம், அதுதான் உனது இறுதிப்பாடு. அங்கே மட்டுமே நீ நிறைவடையமுடியும், திருப்தியடையமுடியும். அங்கேதான் நீ மலர்ச்சியடைவாய்- அந்த
மலர்தலில்தான் அறிதல் நிகழும்.

மனோசக்தி

மனோசக்தியை அற்புதங்கள் நிகழ்த்துவதற்கு பயன்படுத்தவும்
மனித மனத்தில் உருவாகிற எண்ணங்கள் சக்தியாகையால் உருவான மறுவினாடியே அது நம் மூளையை விட்டு உடலை விட்டு பிரபஞ்சத்தில் பரவத் தொடங்கிவிடுகிறது. இதனை ஒரு உயிருள்ள வானொலி ஒலிபரப்பு நிலையம் செயல்படுவதாக நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
சாதாரணமாக ஒருவர் பேசுகின்றொலி ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் மற்றவர்களுக்கு கேட்பதில்லை. ஒரு ஒலி பெருக்கியைப் பயன்படுத்துகிறப
ோது ஒலியின் தன்மை பல மடங்காக (AMPLIFY) பெருக்கப்பட்டு இன்னும் அதிக தூரத்திற்கு கேட்கச் செய்ய முடிகிறது. அதே ஒலி நுண் அலைகளாக (Microwave) மாற்றப்படும்பொழுது அது மிக நீண்ட தூரம் சென்று மீண்டும் நுண் அலைகள் சாதாரண அலைகளாக மாற்றப்பட்டு கேட்கச்செய்கிறது.
மனித மனத்தின் எண்ணங்களும் இப்படி நுண் அலைகளாக மாற்றப்பட்டால்தான் அது அதிக தொலைவு ஏன் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரவும்.
சாதாரணமான எண்ணங்கள் இப்படி பரவினாலும் வேகாமாக வெகு தொலைவிற்கு செல்லாது.
ஒவ்வொரு மனித மனத்திலிருந்தும் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் (FREQUENCY) எண்ணங்கள் ஒலிபரப்பாவதால் அதே அலை வரிசையில் மனத்தை வைத்திருப்பவர்களின் மூளையை அது தாக்கி அங்கு அந்த சிந்தனை தொடர்பான சிந்தனைகள் தோன்றக் காரணமாக அமைகிறது.
இந்த நிகழ்வுகளை ஒரு சோதனைச்சாலையில நிரூபணமாக செய்ய முடியாது. ஆயினும் ஒரு பேருண்மையை நாமனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதாவது ஒத்த எண்ணமுடைய எண்ண அலைவரிசையையுடைய மனிதர்கள் மட்டுமே மனப்பூர்வமான நிறைவான உணர்வுப் பூர்வமான நட்பில் நிலைக்க முடியும்; நண்பர்களாக வாழமுடியும்.
மாறுபட்ட எண்ண அலைவரிசையுடையவர்கள் நண்பர்களாக இருக்க இயலாது. சில சமயம் மாறுபட்ட எண்ணமுடையவர்கள் சில காலம் ஒன்றாக இருப்பார்கள். ஆனால் அது மனம் இணையாத உடல்கள் மட்டும் அருகில் இருக்கும் போலியான தோற்றம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் போலி, கபட நட்பாகத்தான் இருக்க முடியும்.
ஒத்தது ஒத்ததை ஈர்க்கும் என்பது உலக இயற்கை. விதி, நியதி. இது மாறாதது.
எண்ணங்களைப் பொருத்த மட்டில் தன்னை ஒத்த எண்ணங்களை, தன்னை ஒத்த சிந்தனை உள்ள மனிதர்களை கவர்ந்து இழுப்பது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
“கற்றாரைக் கற்றாரே காமுருவர்” என்பதும், “பாம்பின்கால் பாம்பறியும்” என்கிற சொற்றொடர்களும் இந்த பிரபஞ்ச எண்ண விதிகளின் படிதான்.
இல்லை, போதவில்லை, வறுமை பற்றாக்குறை, பஞ்சம் என்று வாடிக்கையாகப் பேசுபவர்கள் வறுமை எண்ணங்களையும், வறுமையிலும் பற்றாக்குறையிலும் பரிதவிப்பவர்களையும், ஏழைகளையும், வறுமைச் சூழலையும் வாழக்கையில் கவர்ந்து இழுத்து மேலும் மேலும் வறுமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
ஆனால் வளமை எண்ணம் உடைய செல்வந்தர்கள் வளமான வணிகத்தையும் வரப்போகிற வருமானத்தையும் வளமான வணிகம் செய்கிற நண்பர்களையும் பிரபஞ்ச விதிப்படி ஒத்தது ஒத்ததை ஈர்க்கும் என்கிற விதிப்படி ஈர்த்து வசதியான வளமான வசந்த வாழ்க்கை விளைகிறது.
ஒருவேளை உங்களிடம் இன்றைக்கு பணமில்லை என்றாலும் நாளை வரப்போகிற பணத்தை செல்வத்தை எண்ணி வளமான சிந்தனையை மனத்தில் இருத்துங்கள்.
“POVERTY BEGETS POVERTY” “RICH BECOMES RICHER” பிச்சைக்கார வறுமை எண்ணம் ஏழ்மையை கொண்டு வருகிறது. செல்வ மனநிலை வளமான வாழ்க்கையை வருவிக்கிறது.
இந்த எல்லாவற்றையும் தீர்க்கமாக சிந்தித்த “மனவளக்கலை” என்கிற மார்க்கத்தை தமிழ் மக்களுக்குத்தந்த தவசீலர் மகரிஷி வேதாத்திரி அவர்கள் “வாழ்க வளமுடன்” என்று வாழ்த்தி வரவேற்கச் சொன்னதும் வாழ்த்தச் சொன்னதும் இந்த பிரபஞ்ச நியதியையும் விதியையும் விஞ்ஞானபூர்வமாக அறிந்ததன் விளைவே.
மனிதர் தங்களின் ஆசைகளையும் விருப்பங்களையும் அடைய முயற்சி செய்கிறார்கள். முயற்சிகள் தோல்வியடைகிற பொழுது கடவுளிடம் கேயேந்த தொடங்குகிறார்கள்.
இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
உண்மைதான். இந்த பிராத்தனையை ஏன் தொடக்கத்திலேயே செய்யக்கூடாது. சொல்லுகிறேன்”
பிரார்த்தனை விஞ்ஞானப்பூர்வம
ானது விசுவாசியுங்கள், உணர்ச்சிகள் இவையாவும் ஒன்றிணைவதால் இந்தப் பிரபஞ்சம் முழுவது பரவி தக்க நபரைத் தாக்கி அந்த மனிதரின் மூலம் நம் எண்ணங்கள் ஈடேறுவதற்கான சூழல் வாழ்க்கயில் உண்டாகிறது.
அற்புதத்தை உருவாக்குகிற அற்புதங்களை நிகழ்த்துக்கிற ஆற்றல் இப்படித்தான் உருவாகிறது.
பிரார்த்தனையை அமைதியாக தனிமையில் (தியானம் செய்வதுபோல) ஒரு அறையில் அழகாக அலங்கரிக்கப்பட்ட படம் அல்லது இலை முன்பு (சூழல் அழகாக இருந்தால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும் எதிர்மறை சிந்தனைகள் உருவாகாது) மனம் கமழும் சூழலில் ஆச்சார இயம - நியம விதிகளின்படி குளித்துவிட்டு ஈர உடையுடனோ அல்லது குளிர்ந்த உடலுடனோ (அப்போதுதான் ஆழ்மனம் விழிப்படையும்) நினைவு மன செயல்பாடுகள் ஒடுங்க ஆழ்மனம் விழிக்க எண்ண அலைகளின் போக்குவரத்து குறைவாக இருக்கும் பிரம்ம முகூர்த்த வேளைகளில் (அதிகாலை 3.00 மணியிலிருந்து 6 மணிக்குள் சூரியன் உதிப்பதற்கு முன்) நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் உணர்ச்சிபூர்வமாக சங்கல்பிக்கிற ஆசைகள், அபிலாஷைகள் தீர்மானங்கள் விஞ்ஞான விதிகளைப் போல செயல்பட்டு விளைவுகளை உருவாக்கும். நினைத்தது நிறைவேறும்.
டாக்டர் பண்டிட் ஜி. கண்ணைய யோகி என்கிறவர் சென்னையில் வாழ்ந்து மறைந்த ஞானி. “மானச யோகம்” என்கிற தன்னுடைய நூலில் அவர் எண்ணங்களைப்பற்றி அற்புதமான செய்திகளையும் விளக்கங்களையும் விரிவாக தந்திருக்கிறார்கள்.
ஒரு உதாரணம்: வீட்டில் குழந்தைகள் விளையாடுவதற்காக வாங்கித்தரும் மோட்டார் கார், பஸ் போன்ற பொம்மைகள் பாட்டரி மின்சாரத்தினாலோ அல்லது சாவி கொடுப்பதன் மூலமோ இயங்குபவைகள். அவைகளை தரையில் வைத்து இயக்கிவிட்டு அதன் ஒரு பாதையில் ஏதோ மரக்கட்டையோ ஒரு கனமான புத்தகத்தையோ குறுக்கே வைத்து தடையை ஏற்படுத்தினால் அந்த பொம்மை முன்னேறிச் செல்ல முடியாமல் நிற்கும்.
எறும்புகள் செல்லும் பாதையில் இதுபோல தடைகளை ஏற்படுத்தினால் அந்த எறும்புகள் தடையைத் தாண்டி தடையின் மீது ஏறியோ அல்லது வலமாகவோ இடமாகவோ திரும்பி பாதையை மாற்றி தன் பயணத்தை தொடருகிறது.
பொம்மைக்கும் எறும்புக்கும் செயல்பாடுகளில் உள்ள வேறுபாடு எதனால் என்று சிந்தித்தால் ஒன்றை அறியலாம். அதாவது எறும்பின் அறிவு, எண்ணம் செய்லபடுவதால் செயல்பாட்டில் மாற்றத்தை கொண்டு வந்தது. பொம்மைக்கு ‘எண்ணம்’ இல்லை. செயலில் மாற்றம் ஏற்படுவதில்லை.
வெளியூரில் உள்ள நண்பரின் விலாசத்தை தந்து அந்த ஊருக்கு வேறு ஏதோ ஒரு வேலை விஷயமாக செல்லும் உள்ளூர் நண்பரிடம் ஒரு பொருளைக் கொடுத்து சேர்ப்பித்துவிட்டு வரச்சொன்னால் உள்ளூர் நண்பர் தன் அறிவாலும் முயற்சியாலும் அவ்வாறு செய்வார் .
இதுபோலவே நம்மூரில் கிடைக்காத ஒரு பொருளை வெளியூரில் வாங்கிவருமாறு உறவினருக்கோ நண்பருக்கோ வேண்டுகோள் விடுத்தால் அவர்கள் அவ்வாறே அந்த ஊர்களுக்குச் செல்லும் பொழுது தேடிப்பிடித்து முயற்சி செய்துத வாங்கிவருவார்கள். அறிவு என்கிற எண்ணமும் முயற்சி என்னும் முனைப்பும் உடலை தூண்டி, இயக்கி அவ்வாறு செய்யத் துணைபுரிகிறது.
இந்த மேற்கண்ட பணிகளைச் செய்த நண்பர்கள், உறவினர்கள் இவர்களுக்கு தகவல்களைத் தந்துவிட்டு, அவர்களின் அறிவாகிய எண்ணத்தில் பணிக்கான முனைப்பை ஏற்படுத்திவிட்ட
ு உடலையும் எண்ணத்தையும் வேறாக பிரித்து கற்பனையாக உடல் இல்லை எண்ணம் மட்டுமே உள்ளது என்ற நிலையில் அங்கே செயல் நிகழுமா என்று நாம் எண்ணிப் பாத்தாலோ அல்லது சோதித்துப் பார்த்தாலோ ஒன்றை நாம் நிச்சயமாக உய்த்துணரலாம்.
தகவல்கள் தரப்பட்ட அறிவுறுத்தப்பட்ட அறிவு செயல்பட முனையும். செயல்படும் உடல் இல்லாத நிலையில் உலகுக்கு வெளிப்படையாக அறிவின் எண்ணத்தின் செயல்பாடு தெரியாது. ஆனால் அறிவு வெளியூரில் உள்ள நண்பர்களின் எண்ணத்தைத் தாக்கி விளைவை ஏற்படுத்தும். வாங்கிவரச் சொன்ன பொருள் தகவல் தந்தவருக்கு கிடைக்க வழிமுறைகளைச் செய்யும். இதே தத்துவத்தை பயன்படுத்தி ஒரு மனிதரின் உள்ளத்திலிருந்த
ு மற்றொரு மனிதருக்கு செய்தியை அறிவிக்கும் செயல்பாட்டை “மானச தந்தி” (Telepathy) என்று அழைக்கலாம். செய்யவும் செய்யலாம்.
பல நேரங்களில் இயற்கையாகவே இதுபோல நண்பர்களைப் பற்றியோ உறவினர்களைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருக்கும்போதோ அதற்கு உரியவர்கள் நேரில் வந்த அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டோ பேசும்பொழுது “நினைத்தேன்! வந்தாய்! நூறுவயது!” என்று வியப்படைக் கூடிய செயல்களை பலமுறைபார்க்கலாம்.
இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் வாசக அன்பர்கள் இந்த தத்துவத்தைப் பயன்படுத்தி சோதித்துப் பார்க்கலாம். உண்மையை அறியலாம். உடல் கருவியைப் பயன்படுத்தாமல் உள்ளத்தின் ஆற்றலை மனோ சக்தியால் மற்றவர்களின் மனங்களின் கருத்துக்களைச் செலுத்தி காரியங்களைச் செய்ய முயற்சி செய்யலாம்.
வணிகத்தில், தொழிலில் விற்பனையை அதிகரிக்க வாடிக்கையாளர்களை கவர, விற்ற பிறகு பணத்தைபெறுவதற்கும் முரண்பாடுள்ள மனிதர்களுக்கு இடையே நல்லுறவுகளை உருவாக்கவும், கணவன் மனைவிகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கும், பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவும், மனதால் விரும்புகிறவர்களின் மனதில் இடம்பிடிக்கவும், முதலாளி தொழிலாளி உறவுகள் மேம்படவும், ஒரு காரியம் நடைபெற உதவி கேட்டு செல்லும்பொது தடையின்றி மற்றவர்களுக்கு உதவவும், ஒத்துழைக்கவும், இந்த மானசீக மனோசக்தி உத்தியைப் பயன்படுத்தி மாற்றங்களை வேண்டும் வகையில் உருவாக்கலாம்.
உணர்ச்சி பூர்வமாக மற்றவர்களின் உருவங்களை மனதில் கற்பனையாக எண்ணி அவர்களின் மீது அன்பு கொண்டு வாழ்த்துவதன் மூலமும் மானசீகமாக வேண்டிக்கொள்வதின் மூலமும் நம்முடைய எதிர்பார்ப்புகள
ுக்கேற்ற உதவியை ஒத்துழைப்பைப் பெறலாம். நம் சொல்லுக்குக் கீழ்படியாத குழந்தைகளையும் ஒத்துப் போகாத மனிதர்களையும் உணர்ச்சிகளையும் வாழ்த்துவதன் மூலமாக கீழ்ப்படியவும் ஒத்துப்போகவும் செய்யலாம்.
மனோசக்தியை அற்புதங்கள் நிகழ்த்துவதற்கு பயன்படுத்தவும்.

நாம் மனஅழுத்தத்தை உணருவதில்லை,

நமது உலகம் சில நேரங்களில் சமாளிக்க முடியாத இடமாக இருக்கூடும். நாம் அதைக் கொஞ்சம் சிக்கலானதாகவும், கொஞ்சம் விரைவானதாகவும் ஆக்கி விட்டோம். எல்லாம் நேற்றே செய்யப்பட வேண்டியதாகி விட்டது. நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்களில் திறனை அளவிடுவது போதாது என்பதைப் போல், நாம் மணி, நிமிடங்கள், சில நொடிகளில் திறனை அளவிடத் தொடங்கி விட்டோம். இது ஏன் இப்படி இருக்க வேண்டும்? இது நேரடியாக நமது உடல் மற்றும் உணர்வுபூர்வமான நலனைப் பாதித்து மன அழுத்தத்தைக் கொடுத்துவிட்டது. இந்த உலகத்தைத் திடீரென்று மாற்ற நம்மிடம் எந்த விசைக்கருவியும் இல்லை. உண்மையில், நம்மை உடனடியாக மாற்றிக் கொள்ள அழுத்தக்கூடிய எந்த பொத்தானும் இங்கு இல்லை. ஆனால் உங்கள் வாழ்க்கை, உங்கள் பயணம், உங்கள் முன்னுரிமைகள் இவைகளின் மீதான உங்களுடைய பிரதிபலிப்பினால் உங்களுடைய சொந்த வேகத்தை தீர்மானிக்க முடியும். நீங்கள் அமைதியாக மூச்சு விட்டு, வசதியாக இருக்கும் என்று என்னும் வேகத்தை தீர்மானிக்கலாம். ஒரு முறை போர்ஸ் கார் நிறுவனத்தின் தலைமை பொறியாளர் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஃபெரி போர்ஸ்ஸை மிக உற்சாகமாக அணுகி உலகின் சிறந்த காரைத் தான் வடிவமைத்து உள்ளதாகக் கூறினார்.
அது எப்படி? என்று டாக்டர் போர்ஸ் கேட்டார்.
ஏனெனில் அது இதுவரை உலகம் அறிந்த வேகத்தைவிட அதிவேகமாக இயங்கக்கூடியது.
இதனால் அது சிறந்த கார் ஆகிவிடாது. உங்களுடைய கார் எவ்வளவு வேகமாகச் செல்ல முடிகிறதோ அவ்வளவு வேகமாக நிறுத்தவும் முடியும் என்னும்போது என்னிடம் வாருங்கள். வேகமாகச் செல்வது நல்லது. வேகமாக நிறுத்துவது அதைவிட நல்லது.
இது ஒருவரது எளிதான வழிகாட்டும் கொள்கையாக இருக்கலாம்: நான் சரியான வேகத்தில் போகிறேனா? எனக்கு வேண்டும் போது என்னால் நிறுத்த முடியுமா? என்னால் இன்னும் வேகமாகப் போக முடியும் ஆனால் நான் அப்படி வேகமாகப் போக விரும்புகிறேனா? உங்களது வேகம் உங்களுக்கு வசதியாக இருக்கும் வரை, உலகம் அதன் சொந்த வேகத்தில் செல்லட்டும், கவலை வேண்டாம். நாம் நமது வேகத்தை மற்றவர்களுடைய வேகத்திற்கு ஏற்றார் போல் பொருத்த முயற்சிக்கும் போது நாம் நமது சொந்த பாதையை இழக்கிறோம். நீங்கள் உலகத்துடன் இணைந்து போகவில்லை என்றால் தனியாகத் தள்ளப்பட மாட்டீர்களா? இல்லை, ஏனெனில், அவர்கள் உங்கள் வேகத்திற்கு பொருந்த முயல்கிறார்கள். உங்கள் வேகத்தைக் குறைத்துக் கொள்வது என்றால் உங்கள் ஒழுக்கம் அல்லது இலட்சியம் இவைகளைக் கைவிட வேண்டும் அல்லது நீங்கள் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டு ஒரு உலக சுற்றுப்பயணம் செல்ல வேண்டும் (நீங்கள் விரும்பினாலன்றி) என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. உங்கள் கால்களை மேலே வைத்துக் கொண்டு சும்மா இருப்பதும் நீங்கள் வேகத்தைக் குறைப்பதாகாது. அதற்கு பதிலாக நீங்கள் எதைத் தேடிச் செல்கிறீர்கள் மற்றும் அது ஏன் உங்களுக்கு ஏற்புடைய விஷயமாக உள்ளது என்பதைப்பற்றி விழிப்புடன் இருப்பது பெரும்பாலும் நல்ல தேர்வுகளை செய்யத் தேவைபடுகிறது. இதுவே வேகத்தைக் குறைப்பதாகும். இதுவே நிகழ் காலத்தில் விழிப்புடன் வாழ்வதாகும் — மனஅழுத்தத்திற்கு மாற்று மருந்தாகும்.
நீங்கள் விழிப்புடன் வாழும்போது நீங்கள் இயற்கையாகவே நிகழ் காலத்தில் வாழத் தொடங்குகிறீர்கள். நிகழ் காலத்தில் வாழ்வது என்பதே உள்ளத்து அமைதிக்கு ஆதாரம் ஆகும். இது உண்மையாகும். எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது:
ஒரு சிறிய கிராமத்தில் ஒரு மகிழ்ச்சியான வீடு இருந்தது. அந்த வீட்டில் இருந்த மனிதன் ஒரு பணக்கார வணிகரோ அல்லது நிலங்கள் அதிகமாக உள்ள மிராசுதாரரோ இல்லை. ஆனால் மற்ற வீட்டுக்காரர்கள் சந்திக்கும் அதே சவால்களை உடைய ஒரு இரும்புத் தொழிலாளி ஆவார். ஒருபோதும் அவரது வீட்டிற்கு உள்ளே இருந்து எந்த விதமான வாக்குவாதமும் கேட்காததே அவரது அண்டை வீட்டினருக்கு மிக ஆவலைத் தூண்டுவதாக இருந்தது. அவர் வீட்டிற்கு வந்ததும் வீட்டிற்கு வெளியே இருந்த ஒரு மரத்தின் கிளைகளில் ஒன்றைப் பிடித்துக் கொண்டு பிரார்த்தனை செய்வார். பின்னர் அவரது குழந்தைகளுடன் விளையாடும் சத்தத்தையும், அவர்கள் சிரிக்கும் சத்தத்தையும் அண்டை வீட்டினர் கேட்பர். அவர் எவ்வளவு மனஅழுத்தத்துடன் காணப்பட்டாலும் தனது வீட்டிற்குள் நுழையும் முன் மரக்கிளையைத் தொடும் ஒவ்வொரு முறையும் அவர் வேறு ஒரு புதிய மனிதனைப் போல் ஒளியுடையவராக ஆகிவிடுவார். பல அண்டை வீட்டுக்காரர்கள்கூட தங்களது வீடுகளில் அதே மரத்தை நட்டு அவரைப் போலவே செய்தும் அவர்களின் சூழ்நிலையில் மாற்றம் எதுவும் இல்லை. அவர்களால் இனிமேலும் கேட்காமல் அடக்கிக் கொண்டிருக்க முடியவில்லை.
நீங்கள் எப்போதும் வீட்டில் மகிழ்ச்சியாக எப்படி இருக்கிறீர்கள் என்று அவர்கள் கேட்டனர். நீங்கள் வாக்குவாதம் செய்து நாங்கள் கேட்டதில்லை. உங்களுக்குப் போதுமான அளவு வருமானமும் இல்லை. நீங்கள் அந்த மரத்தை தொடும் போது சந்தோஷமாகவும், ஒளியுடையவராகவும் ஆகிறீர்கள். எங்களுக்கு அந்த மரத்தின் இரகசியத்தைத் தயவு செய்து சொல்லுங்கள் என்றனர்.
அவர் இனிமையாக சிரித்துக் கொண்டே அந்த மரத்தில் எந்த இரகசியமும் இல்லை என்றார். என் வீட்டிற்குள் நுழையும் முன், நான் கிளைகளில் ஒன்றைப் பிடித்து அதில் என் தினசரி பிரச்சினைகள் அனைத்தையும் கொண்ட ஒரு கற்பனைப் பையைத் தொங்க விட்டு விடுவேன். நான் என் வீட்டிற்கு உள்ளே இருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நாள் முழுவதும் நான் வெளியே இருந்ததை மறக்காமல் இருக்கிறேன். என்னுடைய வெளிப் பிரச்சினைகளை வீட்டிற்குள் கொண்டு வராமல் பார்த்துக் கொள்கிறேன். எனவே ஒவ்வொரு நாள் மாலையும் வெளியில் அந்தப் பையை விட்டுவிட்டு உள்ளே இலேசாகவும், சந்தோஷமாகவும் வருகிறேன்.அதுமட்டுமில்லை ஒவ்வொரு நாள் காலையிலும் நான் அந்தப் பையை மீண்டும் என் கடைக்கு எடுத்துச் செல்கிறேன்.
நீங்கள் ஏன் அவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டனர். நான் இன்னும் அந்தப் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டி உள்ளது. ஆனால் இதில் சுவாரசியமானது என்னவென்றால் எப்போதும் காலையில் என் பை இலேசாக இருப்பதாக உணர்கிறேன். பெரும்பாலான பிரச்சினைகள் எப்படியோ இருண்ட இரவில் மறைந்துவிடுகின்றன.
நீங்கள் ஏன் வெளியில் சென்று வேலை செய்கிறீர்கள்? வீட்டில் அமைதியான மற்றும் வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகத் தானே? சில நேரங்களில் வீட்டின் உள்ளேயும் வாழ்க்கை சிக்கலாக இருக்கலாம். ஆனாலும் நீங்கள் வெளிப் பிரச்சினைகளை வெளியிலேயே விட்டுவிடலாம். இதுதான் நிகழ் காலத்தில் வாழ்வதாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மேலும் அதிகம் அடைவது, இன்னும் அதிகம் உருவாக்குவது, இன்னும் அதிகமாக வேண்டும் என்பது போன்ற நமது ஆசைகள் நாம் வெளியே கவனிப்பவைகளின் நேரடியான தாக்கம் தான் அல்லவா? இத்தகைய குறிக்கோள்கள் மற்றும் ஆசைகள் உங்களுடைய அன்புக்குரியவர்களுடன் நீங்கள் இருக்கும் நேரம், உங்கள் உணவு இவைகளை அனுபவிக்கத் தடையாக இருக்கும். உங்களுடைய துணையுடன் தரமாக நேரத்தைக் கழிக்க விரும்பும் போது நீங்கள் வேலையைப் பற்றியோ அல்லது என்னவெல்லாம் செய்திருக்க வேண்டும் அல்லது செய்திருக்க முடியும் என்றோ சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். வேலை செய்யும் போது வேலையில் திறமைசாலியாக இருந்து உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் அதிக நேரம் செலவிட விரும்புவீர்கள். ஆனால் உங்கள் குடும்பத்துடன் செலவிடும் நேரம் வரும்போது வேலையைப் பற்றிய எண்ணங்கள் வந்து அந்த அழகான தருணங்களை அழித்துவிடுகிறது.
இதிலிருந்து தப்பிக்க முடியுமா? ஆமாம், முடியும். உங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவைகள் எவையென்று எழுதிக்கொண்டு அவைகளைத் தொடர்ந்து ஆய்வு செய்யுங்கள். மக்கள் உணர்வுபூர்வமாக உங்களை வலுவிழக்கச் செய்வார்கள். வேலையின் அழுத்தம் அதிகமாகவே இருக்கும். தொலைக்காட்சியில் கெட்ட செய்திகளைத் தொடர்ந்து கேட்பீர்கள். இந்த உலகில் சரிவுநிலை நித்தியமாகத் தோன்றும். பணவீக்கம் கீழே வராமலேயே இருக்கும். ஆனால் இவை அனைத்திலும் நீங்கள் அமைதியாக இருக்க விரும்பினால் நீங்கள் உங்கள் மேலும், உங்கள் எண்ணங்கள் மேலும் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் வாழ்க்கை நடத்தும் இடத்தில், உங்கள் வாழ்க்கையில், உங்கள் மனதில் ஒரு மூலை இருக்க வேண்டும். அந்த மூலையில், என்ன நுழையலாம் மற்றும் யார் நுழையலாம் என்பதில் நீங்கள் கண்டிப்பைக் கடைபிடிக்க வேண்டும். உங்களைச் சுற்றி காத்துக் கொள்ளுங்கள். இது ஒரு கலையாகும். மனஅழுத்தம் ஒரு உணர்வு அல்ல; அது ஒரு பதில் கொடுத்தலாகும். அது எந்தப் பிரச்சினையையும் சமாளிக்க, உங்களால் தேர்வு செய்யப்பட்டதாகும்.
நம்மிடம் ஒன்று உள்ளது என்பதற்காக அதைத் தூக்கிக் கொண்டு சுற்ற வேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்களது சுமையை எப்பொழுது இறக்கி வைக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குத் துயரம் தருவதை இறக்கி விடுங்கள். நாம் மனஅழுத்தத்தை உணருவதில்லை, நாம் அதைத் தேர்வு செய்கிறோம்.