Sunday 22 December 2019

ஏன் நாளை

இரண்டு நன்பர்களில் ஒருவனுக்கு பணம் சேர்க்கும் வித்தை தெரிந்திருந்தது.வேறு ஒன்றுமில்லை.ஒவ்வொரு நாளும் சம்பாதித்த பணத்தை சேர்த்துவைத்து மொத்தமாக செலவழிப்பது.

இப்படி ஒவ்வொரு நாளும் எதையும் அனுபவிக்காமல் செல்வந்தன் ஆகிவிட்டான்.எவ்வளவு பணம் சேர்ந்ததோ அவ்வளவு துன்பத்தையும் சேர்த்துவைத்திருந்தான்.

பின்பும் ஒரு நாள் அவன் நன்பனை சந்தித்தான்.அவன் கேட்டான் அதுதான் பணக்காரன் ஆகிவிட்டாயே இப்பொழுதாவது வாழ்வை அனுபவிக்கலாமே என்று.

அதற்கு பணக்காரன் சொன்னான் முடியாது ஏனென்றால் அனுபவிக்கும் மனம் வந்துவிட்டால் மீண்டும் நான் ஏழையாகிவிடுவேன்.

இதனால்தான் ஏசு யூதர்களால் கொல்லப்பட்டார்.அவர்கள் என்றாவது ஒருநாள் கடவுளின் தூதர் வருவார் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள்.ஏசு வந்துவிட்டார்.

அவர் உண்மையை சொன்னார்.அதை ஏற்றுக்கொண்டுவிட்டால் எப்படி வழக்கமான வாழ்வு வாழமுடியும்.எனவே அவரை கொன்றுவிட்டார்கள்.

ஒரு சர்சிலோ,கோவிலிலோ கடவுள் நிஜமாக வந்துவிட்டால் கொன்றுவிடுவார்கள்.பிறகு எப்படி வழக்கம்போல் ஆராதனைசெய்வது,பூஜை செய்வது.இதுதான் ஏசுவுக்கு நடந்தது. 

இப்படிதான் நாளை நிம்மதியாக இருக்க இன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.ஓர்நாள் நிம்மதி வந்தால் அதையும் கொன்றுவிடுவாரகள்.

உங்கள் தன்முனைப்பு என்றுமே நிம்மதியாக இருக்கவிடாது.

ஏன் நாளை? அது வராமல் போய்விட்டால்?ஏன் இன்றைய,இப்பொழுதைய சந்தோசத்தை இழக்கிறீர்கள்?தள்ளிபோடாதீர்கள் இப்பொழுது இல்லையென்றால் எப்பொழுதும் இல்லை.__ஓஷோ.

Tuesday 3 December 2019

சந்தோஷம்

பணத்தைப் பற்றி மிகவும் பொருட்படுத்தாதே 

வாழ பணம் தேவை தான் 

ஆனால் 

பணத்திற்காக உனது முழு வாழ்வையே அடமானம் வைப்பது

விலை உயர்ந்த ரத்தினக் கற்களை கொடுத்து விட்டு

தகரத்தை விலைக்கு வாங்குவது போல தான் 

பணம் வாழ்வின் 1 சதவீதம் தான் 

பணத்தைப் பற்றி மிகவும் பொருட்படுத்தாதே 

ஏனெனில் 

சந்தோஷத்திற்கு மிகவும் தொந்தரவு கொடுக்கும் விஷயம்

அது துக்கத்திலேயே அதிக துக்கம் என்னவென்றால்

பணம் இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியும் 

என்று மக்கள் நினைப்பதுதான் 

பணத்திற்கும், சந்தோஷத்திற்கும் சம்பந்தம் இல்லை 

உற்று நோக்குங்கள் 

மிகப் பெரிய பணக்காரர்கள் பலருக்கும்

உள்ள கவலைகளும் பயமுறுத்தல்களும்

உங்களைவிட அதிகம் 

 ஓஷோ 

காந்தம்



நீங்கள் ஒரு காந்தம்!

உண்மையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு காந்தம். எப்படி காந்தம் பல பொருட்கள் சுற்றி இருந்தாலும் இரும்புத் துண்டுகளை மட்டுமே கவர்ந்திழுக்குமோ மனிதனும் தனக்குத் தக்க மனிதர்களையும், சூழ்நிலைகளையும் மட்டுமே தன் வாழ்க்கையில் கவர்ந்திழுக்கிறான். காந்தத்திற்கும் ஒரு படி மேலே போய் அவன் தன் காந்த சக்தியைத் தானே தீர்மானம் செய்கின்ற சக்தி பெற்றிருக்கிறான். அவன் தன் காந்தசக்தியின் தன்மையை தீர்மானிக்கும் முக்கியமான விதங்கள் மூன்று.

முதலாவது, கர்மா-

மனிதன் முன்பு விதைத்ததை அறுவடை செய்யத் தேவையான மனிதர்கள் அவனால் ஈர்க்கப்படுகிறார்கள். அதற்கான சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள் எல்லாம் தானாக அவனைத் தானாக வந்தமைகின்றன. 

இரண்டாவது, 

ஆழ்மன நம்பிக்கைகள்-உலகில் நல்ல விஷயங்களில் ஆழமான நம்பிக்கைகள் கொண்டிருப்பவர்கள் நல்ல மனிதர்களையும் நல்ல விஷயங்களையும் தங்கள் வாழ்வில் தங்களை அறியாமல் வரவழைத்துக் காண்கிறார்கள். 

மூன்றாவது அதீத ஆர்வம்-

ஒரு மனிதன் எதில் எல்லாம் அதீத ஆர்வம் காட்டுகிறானோ அதுகுறித்து மேலும் ஞானமும், அனுபவங்களும் தரக் கூடிய மனிதர்களையும், சந்தர்ப்பங்களையும் காந்தமாக ஈர்த்துக் கொள்கிறான்.

ஆன்மீக ஆர்வம் அதிகமாக இருந்த விவேகானந்தரை ராமகிருஷ்ண பரம்ஹம்சரிடம் அழைத்துச் சென்றது அந்த காந்த சக்தியே. அதே போல் ஆன்மீகம் என்ற பெயரில் சித்து வித்தைகளில் அதிக ஆர்வம் காட்டுபவர்களைப் போலிச் சாமியார்களை சந்திக்க வைப்பதும் அந்தக் காந்த சக்தியே.

அவரவர் ஆர்வம் காட்டும் விஷயங்களில் ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே அவன் அனுபவங்களை விருத்தி செய்யக்கூடியவை அவனை வந்து சேருகின்றன.

ரமண மகரிஷி தானாகப் போய் ஆன்மிகப் பிரசாரம் செய்ததில்லை. சிஷ்யகோடிகளைச் சேர்த்ததில்லை. திருவண்ணாமலையை அடைந்த பிறகு அந்த ஊரை விட்டு வெளியே எங்கும் சென்றதில்லை. பல நாட்கள் தொடர்ந்து மௌனமாகவே இருந்திருக்கிறார். ஆனாலும் அவரது ஆன்மீக காந்த சக்தி இந்தியாவில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பல ஆன்மீகவாதிகளை அவரிடம் வரவழைத்த அதிசயத்தைக் கண்டிருக்கிறோம்.

 தற்போது நம்மிடம் உள்ளதும், இது வரை வந்ததும் நாம் காந்தமாகக் கவர்ந்தவையே. பிற காந்தங்களால் நாம் கவரப்படுவதும் இந்த விதிகளின் படியே. பிரபஞ்சம் இந்த மூன்றின்படியே எல்லாவற்றையும் நமக்கு வினியோகித்திருக்கிறது.

இந்தப் பேருண்மை நம்மை ஒரு விதத்தில் ஆசுவாசப்படுத்துகிறது. வாழ்க்கையில் பலவற்றைத் தேர்ந்தெடுப்பதில் நமக்குள்ள சுதந்திரத்தை இது கோடிட்டுக் காட்டுகிறது.

  ஆழ்மன நம்பிக்கைகள். நோய்க்கிருமிகளின் சக்தி மேல் பலமான நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமே நோய்வாய்ப்படுகிறான். தன் உடலின் எதிர்ப்பு சக்தி மீது நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமாக நோய்வாய்ப்படுவதில்லை. அப்படியே நோய் வந்தாலும் வந்த வேகத்தில் அது போயும் விடுகிறது என்று இன்றைய மருத்துவம் கண்டுபிடித்து இருக்கிறது.

ஆழ்மனதில் முன்பே வைத்திருக்கும் தவறான நம்பிக்கைகளை உடனடியாக மாற்றிக் கொள்வது சிறிது கஷ்டமே என்றாலும் அது முடியாததில்லை. நாம் எதை பலமாக நம்புகிறோம், எதை எதிர்பார்க்கிறோம் என்பதைப் பட்டியலிட்டு அதில் தேவையற்றவற்றையும், தவறானவற்றையும் நீக்கிக் கொள்ளுதல் நலம். 

 ஆர்வம் நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. உயர்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டும் போது நல்ல எண்ண அலைகளை நாம் ஏற்படுத்துகிறோம். அவை பலப்படும் போது நன்மையைப் பெருக்குகின்ற பலதும் நம் வாழ்வில் வந்து சேர ஆரம்பிக்கும். நாம் எதில் அதிக ஆர்வம் காட்டுகிறோம் என்பதை முதலில் கவனியுங்கள்.
அடுத்தவர்களின் தவறுகளைக் கண்டுபிடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் தன் தவறுகளை வளர்த்துக் கொள்கிறான். சில்லரை விஷயங்களிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் அந்தத் தரத்திலேயே சாதித்து மடிகிறான். ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே பெறுகின்றதன் தரமும் அமையும்.

நீர் நிறைந்திருக்கும் டம்ளரில் பாலை நிரப்ப வேண்டுமானால் முதலில் நீரைக் கொட்ட வேண்டும். பின்பு தான் அதில் பாலை நிரப்ப முடியும். அது போல அற்ப விஷயங்களில் ஆர்வம் காட்டிக் கொண்டு பெரிய சாதனைகள் புரிய நாம் கனவு காண்பது வீணே. முதலில் அற்பங்களை அப்புறப்படுத்துங்கள். மேற்போக்கான ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்வில் அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் ஆர்வம் உங்களிடம் ஆழமாக இருக்குமானால் மட்டுமே அது காந்தத் தன்மை பெறும்.

இது வரை நாம் கவர்ந்தவற்றின் கணக்கை நம் வாழ்வில் ஆராய்வோம். எதற்கும் யாரையும் குறை கூறாமல் கவர்ந்து பெற்றதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வோம். இனி எதைக் கவர வேண்டும் என்று சிந்தித்து அவற்றை நம் மனதில் ஆழப் பதிப்போம். அதற்கான ஆர்வத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி அதைப் பலப்படுத்துவோம்.

இப்படி புதிய காந்த சக்தியை நம்மில் வளர்த்துக் கொண்டால் மீதியை இந்த பிரபஞ்ச விதிகள் பார்த்துக் கொள்ளும். வாழ்க்கை சிறப்படையும். அதற்குத் தேவையான சூழ்நிலைகள் நம் வாழ்வில் அமைய ஆரம்பிக்கும். சந்தர்ப்பங்கள் உருவாகத் துவங்கும். உதவும் படியான மனிதர்கள் நம் வாழ்வில் வந்து சேர்வார்கள். கனவுகள் மெய்ப்படும்.

நன்றி