Sunday 22 December 2019

ஏன் நாளை

இரண்டு நன்பர்களில் ஒருவனுக்கு பணம் சேர்க்கும் வித்தை தெரிந்திருந்தது.வேறு ஒன்றுமில்லை.ஒவ்வொரு நாளும் சம்பாதித்த பணத்தை சேர்த்துவைத்து மொத்தமாக செலவழிப்பது.

இப்படி ஒவ்வொரு நாளும் எதையும் அனுபவிக்காமல் செல்வந்தன் ஆகிவிட்டான்.எவ்வளவு பணம் சேர்ந்ததோ அவ்வளவு துன்பத்தையும் சேர்த்துவைத்திருந்தான்.

பின்பும் ஒரு நாள் அவன் நன்பனை சந்தித்தான்.அவன் கேட்டான் அதுதான் பணக்காரன் ஆகிவிட்டாயே இப்பொழுதாவது வாழ்வை அனுபவிக்கலாமே என்று.

அதற்கு பணக்காரன் சொன்னான் முடியாது ஏனென்றால் அனுபவிக்கும் மனம் வந்துவிட்டால் மீண்டும் நான் ஏழையாகிவிடுவேன்.

இதனால்தான் ஏசு யூதர்களால் கொல்லப்பட்டார்.அவர்கள் என்றாவது ஒருநாள் கடவுளின் தூதர் வருவார் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள்.ஏசு வந்துவிட்டார்.

அவர் உண்மையை சொன்னார்.அதை ஏற்றுக்கொண்டுவிட்டால் எப்படி வழக்கமான வாழ்வு வாழமுடியும்.எனவே அவரை கொன்றுவிட்டார்கள்.

ஒரு சர்சிலோ,கோவிலிலோ கடவுள் நிஜமாக வந்துவிட்டால் கொன்றுவிடுவார்கள்.பிறகு எப்படி வழக்கம்போல் ஆராதனைசெய்வது,பூஜை செய்வது.இதுதான் ஏசுவுக்கு நடந்தது. 

இப்படிதான் நாளை நிம்மதியாக இருக்க இன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.ஓர்நாள் நிம்மதி வந்தால் அதையும் கொன்றுவிடுவாரகள்.

உங்கள் தன்முனைப்பு என்றுமே நிம்மதியாக இருக்கவிடாது.

ஏன் நாளை? அது வராமல் போய்விட்டால்?ஏன் இன்றைய,இப்பொழுதைய சந்தோசத்தை இழக்கிறீர்கள்?தள்ளிபோடாதீர்கள் இப்பொழுது இல்லையென்றால் எப்பொழுதும் இல்லை.__ஓஷோ.

Tuesday 3 December 2019

சந்தோஷம்

பணத்தைப் பற்றி மிகவும் பொருட்படுத்தாதே 

வாழ பணம் தேவை தான் 

ஆனால் 

பணத்திற்காக உனது முழு வாழ்வையே அடமானம் வைப்பது

விலை உயர்ந்த ரத்தினக் கற்களை கொடுத்து விட்டு

தகரத்தை விலைக்கு வாங்குவது போல தான் 

பணம் வாழ்வின் 1 சதவீதம் தான் 

பணத்தைப் பற்றி மிகவும் பொருட்படுத்தாதே 

ஏனெனில் 

சந்தோஷத்திற்கு மிகவும் தொந்தரவு கொடுக்கும் விஷயம்

அது துக்கத்திலேயே அதிக துக்கம் என்னவென்றால்

பணம் இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியும் 

என்று மக்கள் நினைப்பதுதான் 

பணத்திற்கும், சந்தோஷத்திற்கும் சம்பந்தம் இல்லை 

உற்று நோக்குங்கள் 

மிகப் பெரிய பணக்காரர்கள் பலருக்கும்

உள்ள கவலைகளும் பயமுறுத்தல்களும்

உங்களைவிட அதிகம் 

 ஓஷோ 

காந்தம்



நீங்கள் ஒரு காந்தம்!

உண்மையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு காந்தம். எப்படி காந்தம் பல பொருட்கள் சுற்றி இருந்தாலும் இரும்புத் துண்டுகளை மட்டுமே கவர்ந்திழுக்குமோ மனிதனும் தனக்குத் தக்க மனிதர்களையும், சூழ்நிலைகளையும் மட்டுமே தன் வாழ்க்கையில் கவர்ந்திழுக்கிறான். காந்தத்திற்கும் ஒரு படி மேலே போய் அவன் தன் காந்த சக்தியைத் தானே தீர்மானம் செய்கின்ற சக்தி பெற்றிருக்கிறான். அவன் தன் காந்தசக்தியின் தன்மையை தீர்மானிக்கும் முக்கியமான விதங்கள் மூன்று.

முதலாவது, கர்மா-

மனிதன் முன்பு விதைத்ததை அறுவடை செய்யத் தேவையான மனிதர்கள் அவனால் ஈர்க்கப்படுகிறார்கள். அதற்கான சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள் எல்லாம் தானாக அவனைத் தானாக வந்தமைகின்றன. 

இரண்டாவது, 

ஆழ்மன நம்பிக்கைகள்-உலகில் நல்ல விஷயங்களில் ஆழமான நம்பிக்கைகள் கொண்டிருப்பவர்கள் நல்ல மனிதர்களையும் நல்ல விஷயங்களையும் தங்கள் வாழ்வில் தங்களை அறியாமல் வரவழைத்துக் காண்கிறார்கள். 

மூன்றாவது அதீத ஆர்வம்-

ஒரு மனிதன் எதில் எல்லாம் அதீத ஆர்வம் காட்டுகிறானோ அதுகுறித்து மேலும் ஞானமும், அனுபவங்களும் தரக் கூடிய மனிதர்களையும், சந்தர்ப்பங்களையும் காந்தமாக ஈர்த்துக் கொள்கிறான்.

ஆன்மீக ஆர்வம் அதிகமாக இருந்த விவேகானந்தரை ராமகிருஷ்ண பரம்ஹம்சரிடம் அழைத்துச் சென்றது அந்த காந்த சக்தியே. அதே போல் ஆன்மீகம் என்ற பெயரில் சித்து வித்தைகளில் அதிக ஆர்வம் காட்டுபவர்களைப் போலிச் சாமியார்களை சந்திக்க வைப்பதும் அந்தக் காந்த சக்தியே.

அவரவர் ஆர்வம் காட்டும் விஷயங்களில் ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே அவன் அனுபவங்களை விருத்தி செய்யக்கூடியவை அவனை வந்து சேருகின்றன.

ரமண மகரிஷி தானாகப் போய் ஆன்மிகப் பிரசாரம் செய்ததில்லை. சிஷ்யகோடிகளைச் சேர்த்ததில்லை. திருவண்ணாமலையை அடைந்த பிறகு அந்த ஊரை விட்டு வெளியே எங்கும் சென்றதில்லை. பல நாட்கள் தொடர்ந்து மௌனமாகவே இருந்திருக்கிறார். ஆனாலும் அவரது ஆன்மீக காந்த சக்தி இந்தியாவில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பல ஆன்மீகவாதிகளை அவரிடம் வரவழைத்த அதிசயத்தைக் கண்டிருக்கிறோம்.

 தற்போது நம்மிடம் உள்ளதும், இது வரை வந்ததும் நாம் காந்தமாகக் கவர்ந்தவையே. பிற காந்தங்களால் நாம் கவரப்படுவதும் இந்த விதிகளின் படியே. பிரபஞ்சம் இந்த மூன்றின்படியே எல்லாவற்றையும் நமக்கு வினியோகித்திருக்கிறது.

இந்தப் பேருண்மை நம்மை ஒரு விதத்தில் ஆசுவாசப்படுத்துகிறது. வாழ்க்கையில் பலவற்றைத் தேர்ந்தெடுப்பதில் நமக்குள்ள சுதந்திரத்தை இது கோடிட்டுக் காட்டுகிறது.

  ஆழ்மன நம்பிக்கைகள். நோய்க்கிருமிகளின் சக்தி மேல் பலமான நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமே நோய்வாய்ப்படுகிறான். தன் உடலின் எதிர்ப்பு சக்தி மீது நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமாக நோய்வாய்ப்படுவதில்லை. அப்படியே நோய் வந்தாலும் வந்த வேகத்தில் அது போயும் விடுகிறது என்று இன்றைய மருத்துவம் கண்டுபிடித்து இருக்கிறது.

ஆழ்மனதில் முன்பே வைத்திருக்கும் தவறான நம்பிக்கைகளை உடனடியாக மாற்றிக் கொள்வது சிறிது கஷ்டமே என்றாலும் அது முடியாததில்லை. நாம் எதை பலமாக நம்புகிறோம், எதை எதிர்பார்க்கிறோம் என்பதைப் பட்டியலிட்டு அதில் தேவையற்றவற்றையும், தவறானவற்றையும் நீக்கிக் கொள்ளுதல் நலம். 

 ஆர்வம் நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. உயர்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டும் போது நல்ல எண்ண அலைகளை நாம் ஏற்படுத்துகிறோம். அவை பலப்படும் போது நன்மையைப் பெருக்குகின்ற பலதும் நம் வாழ்வில் வந்து சேர ஆரம்பிக்கும். நாம் எதில் அதிக ஆர்வம் காட்டுகிறோம் என்பதை முதலில் கவனியுங்கள்.
அடுத்தவர்களின் தவறுகளைக் கண்டுபிடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் தன் தவறுகளை வளர்த்துக் கொள்கிறான். சில்லரை விஷயங்களிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் அந்தத் தரத்திலேயே சாதித்து மடிகிறான். ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே பெறுகின்றதன் தரமும் அமையும்.

நீர் நிறைந்திருக்கும் டம்ளரில் பாலை நிரப்ப வேண்டுமானால் முதலில் நீரைக் கொட்ட வேண்டும். பின்பு தான் அதில் பாலை நிரப்ப முடியும். அது போல அற்ப விஷயங்களில் ஆர்வம் காட்டிக் கொண்டு பெரிய சாதனைகள் புரிய நாம் கனவு காண்பது வீணே. முதலில் அற்பங்களை அப்புறப்படுத்துங்கள். மேற்போக்கான ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்வில் அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் ஆர்வம் உங்களிடம் ஆழமாக இருக்குமானால் மட்டுமே அது காந்தத் தன்மை பெறும்.

இது வரை நாம் கவர்ந்தவற்றின் கணக்கை நம் வாழ்வில் ஆராய்வோம். எதற்கும் யாரையும் குறை கூறாமல் கவர்ந்து பெற்றதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வோம். இனி எதைக் கவர வேண்டும் என்று சிந்தித்து அவற்றை நம் மனதில் ஆழப் பதிப்போம். அதற்கான ஆர்வத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி அதைப் பலப்படுத்துவோம்.

இப்படி புதிய காந்த சக்தியை நம்மில் வளர்த்துக் கொண்டால் மீதியை இந்த பிரபஞ்ச விதிகள் பார்த்துக் கொள்ளும். வாழ்க்கை சிறப்படையும். அதற்குத் தேவையான சூழ்நிலைகள் நம் வாழ்வில் அமைய ஆரம்பிக்கும். சந்தர்ப்பங்கள் உருவாகத் துவங்கும். உதவும் படியான மனிதர்கள் நம் வாழ்வில் வந்து சேர்வார்கள். கனவுகள் மெய்ப்படும்.

நன்றி

Thursday 21 November 2019

பண்பு

பண்பு..! - 

அப்பா, அம்மா, மகன், மகள் நால்வரும் காரில் வெளியூர் சென்றார்கள். அனைவரும் சந்தோஷமாக பேசி சிரித்தபடி போகும்போது கார் திடீரென்று பஞ்சர் ஆகிவிட்டது.

நல்லவேளையாக அப்பாவுக்கு பஞ்சர் ஒட்டத்தெரியும். அவர் பஞ்சர் ஒட்டிக்கொண்டிருந்தார். குழந்தைகளான மகனும் மகளும் அக்கறையுடன் அப்பாவின் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பார்வையில் அப்பா தங்களுக்காக அப்படி சிரமப்படுவதில் உள்ள கவலை தெரிந்தது.

ஆனால் அம்மாவோ அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்து, பென்சிலும் கையுமாக குறுக்கெழுத்துப் புதிரை விடுவித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த மகனுக்கும் மகளுக்கும் அம்மாமீது கோபம் வந்தது. அப்பாவும் தன் மனைவியை அதிருப்தியுடன் பார்த்தார். அம்மா அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.

டயரை மாற்றிய பிறகு பயணம் தொடர்ந்தது. அம்மாவிடம் குழந்தைகள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.

‘‘அம்மா, நீங்க ஏன் அப்பா கார் ரிப்பேர் பண்ணும்போது மரத்தடில இருந்து கிராஸ்வேர்ட் போட்டீங்க. அப்பா பக்கத்துல வந்து நின்னுருக்கலாம்ல!’’

‘‘அம்மாவுக்கு எப்படி கார் டயரை மாத்துறதுன்னு தெரியாதே!’’

‘‘எங்களுக்கு மட்டும் தெரியுமா அம்மா? இருந்தாலும் நமக்காக அப்பா கார் ரிப்பேர் பண்ணும்போது ஒரு பண்புக்காக ‘என்ன பண்றீங்க’ அப்படின்னு கேட்டிருக்கலாமே?’’

‘‘ஆமா, அப்படி ஒரு பண்பு இருக்கு இல்ல!’’

‘‘என்னம்மா, எங்களுக்கு பண்பு சொல்லித் தந்ததே நீங்கதான். ஆனா நீங்களே இப்படி பண்பில்லாம நடத்துக்கிறீங்களே?’’

‘‘சரி, அம்மா ஒரு கேள்வி கேட்கிறேன். நான் ஆபீஸ் வேலைக்கும் போயிட்டு வீட்ல வந்து சமைக்கும்போதும், துணி துவைக்கும்போதும், பாத்திரம் கழுவும்போதும், வீடு துடைக்கும்போதும் நீங்களும் அப்பாவும் அதே பண்போட என் பக்கத்துல வந்து நின்னுருக்கீங்களா?’’

‘‘எங்களுக்கு அந்த வேலை தெரியாதும்மா!’’

‘‘அது மாதிரிதான் எனக்கும் டயர் மாத்துறது தெரியாது. நான் போய் மரத்தடில உக்காந்துக்கிட்டேன்.’’

இப்போதுதான் அப்பாவுக்கும் குழந்தைகளுக்கும், எப்படி அம்மாவின் மனதை கஷ்டப்படுத்தியிருக்கிறோம் என்று புரிந்தது.

அம்மா தொடர்ந்தார். ‘‘இன்னைக்கு நாம வெளிய கிளம்பினது காலைல ஏழு மணிக்கு. நான் காலையில் மூன்று மணிக்கு எழுந்தேன்.

உங்கப்பாவுக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்காது. காலை டிபன், மதியம் சாப்பாடு, நடுவில் தின்பதற்கு பணியாரம், சுழியன் எல்லாம் செய்தேன். அப்போது நீங்கள் அனைவரும் தூங்கிக் கொண்டும், டி.வி பார்த்துக் கொண்டும் அரட்டையடித்துக் கொண்டும்தானே இருந்தீர்கள். அப்போது நான் ஏதாவது கேட்டேனா?

இப்போது உங்கள் அப்பாவுக்காக இரக்கப்பட்டு என்னிடம் கேள்வி கேட்டது மாதிரி, எனக்காக இரக்கப்பட்டு உங்கப்பாவிடம் கேள்வி கேட்டீர்களா? அல்லது நீங்கள்தான் உதவி செய்தீர்களா?’’

இதைக் கேட்டதும் மூவருக்கும் கண்ணில் நீர் பெருகியது. தங்கள் தவறை உணர்ந்து அம்மாவிடம் மன்னிப்பு கேட்டனர்.

அம்மா மனம் நிறைந்து, தன் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல், ‘‘இந்தாங்க தேங்காய்ப்பால் முறுக்கு, சாப்பிடுங்க’’ என்று கணவருக்கும் குழந்தைகளுக்கும் கொடுத்தார்.

நான் ரசித்த கதை

Friday 15 November 2019

அனுபவி

முழுமையாக அனுபவி - ஓஷோ 


உனக்கு வசிக்க ஒரு மாளிகை கிடைத்ததா...???

அனுபவி....

கிடைக்கவில்லையா...???

ஒரு குடிசையாக இருந்தாலும் ஆனந்தமாயிரு.அந்த குடிசையே மாட மாளிகையாகி விடும்.

வேறுபாடு என்பது அதை அனுபவிப்பதில்தான் இருக்கிறது.

ஒரு மரத்தடியில் இருக்க நேர்ந்தாலும் அங்கேயும் ஆனந்தமாய் இரு.சூரிய ஒளி, காற்று, தென்றல், வண்ணமலர்கள், அந்த மரம், வானம் அனைத்தையும் அனுபவிக்க தவறிவிடாதே.

மாட மாளிகையில் இருந்தால் அந்த மாளிகையில் இருக்கும் பொருள்களை ரசி.சரவிளக்கையும், சலவைக்கல் தரையையும் கண்டுகளிக்க தவறாதே.

நீ எங்கே இருந்தாலும் அங்கங்கே அதை நீ அனுபவி.எதையும் உடமையாக்கி கொள்ளாதே.எதுவும் நமக்கு சொந்தமில்லை.வெறும் கையேடு இவ்வுலகத்திற்கு வந்தோம்.வெறும்கையோடு இந்த உலகை விட்டு போகப்போகிறோம்.இந்த உலகம் உனக்கு அளிக்கப்பட நன்கொடை.அது இருக்கும் பொழுதே அனுபவித்து விடு.இந்த பிரபஞ்சம் உனக்கு தேவையானவற்றை எப்போதும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது என்பதை நினைவில் வை.

தன்னைப் பற்றிய புரிதலும் விழிப்புணர்வும் உள்ளவர்களுக்கு ஒழுக்கம் சார்ந்த போதனைகள் எப்போதுமே தேவையில்லை.காரணம் விழிப்புணர்வு பெற்ற மனிதன் தன்னைத் தானே பார்த்துக் கொள்கிறான் .

 ஓஷோ

Sunday 10 November 2019

எண்ணங்களோடு பந்தப்படாதே

🍃எண்ணங்களோடு பந்தப்படாதே!🍃

எண்ணங்களுடன் பந்தப்பட்டுப் போகாதீர்கள். நீங்கள் அவற்றிலிருந்து விலகி நிற்கும்போது அவை உயிரற்று பலமிழந்து போய்விடுகின்றன. அவற்றுக்குச் சக்தி கிடைப்பதில்லை.

விளக்கின் சுடரை அனைத்துவிட ஆசைப்படுகிறீர்கள். ஆனால் அதற்குப் பதில் விளக்குக்கு மேலும் எண்ணெய் வார்க்கிறீர்கள்.  

அதுதான் பிரச்சனை.

ஒரு கையால் விளக்கின் சுடரை அணைக்க முயன்று கொண்டே மறுகையால் விளக்கிற்கு எண்ணெய் ஊற்றவும் செய்கிறீர்கள்.

முதலில்
எண்ணெய் ஊற்றுவதை நிறுத்துங்கள்.
விளக்கில் மீதமிருக்கும் எண்ணெய் விரைவில் தீர்ந்துவிடும். பிறகு விளக்கு தானே அணைந்து போய்விடும்.

விளக்கிற்கு எது எண்ணெயாக இருக்கிறது? ஏதாவது ஒரு எண்ணம் உங்களை ஆக்கிரமிக்கும் போது நீங்கள் 
அதனுடன் கலந்து விடுகிறீர்கள்.

❤கோபம் வந்தால் நீங்கள் அதுவாகவே  மாறிவிடுகிறீர்கள். அப்போது உங்கள் சக்தி அதனிடம் சென்று சேர்ந்துவிடுகிறது. கோபம் உங்கள் எஜமானனாக மாறிவிடுகிறது. நீங்கள் அதன் நிழல் பிம்பமாகிவிடுகிறீர்கள்.

கோபம் வரும்போது விலகி நின்று கவனித்துப் பாருங்கள். ஆரம்பத்தில் இப்படிச் செய்வது கடினமான காரியமாக இருக்கும். நீங்கள் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியிருக்கும்.  படிப்படியாக நாளடைவில் அது பழக்கத்திற்கு வந்துவிடும்.  

உங்கள் எண்ணங்களுக்கும் உங்களுக்கும் சற்று இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

எவ்வளவு அதிகமான தூரத்தை ஏற்படுத்திக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் எஜமானத்துவம் ஸ்தாபிதப்படத் தொடங்கும்.

பசியாக இருக்கும்போது "எனக்குப் பசிக்கிறது" என்று சொல்லாதீர்கள். 
"உடம்பு பசியுடன் இருப்பதைக் காண்கிறேன்" என்று சொல்லுங்கள். 

உண்மையில் அதுதான் நிஜம்.

உடலுக்குப் பசியெடுக்கிறது.
நீங்கள் அதை பார்க்கும் பார்வையாளராக இருக்கிறீர்கள்.
உயிருக்குப் பசி இருக்காது.
சாப்பிடும் உணவு உடலையே சென்று சேர்கிறது. தசையும், ரத்தமும் வேண்டும் என்று உடல்தான் விரும்புகிறது.

உடல்தான் சோர்வடைகிறது. உயிர் தளர்ந்து போவதில்லை. உயிர் எண்ணெய் இல்லாது எரியும் விளக்கு போன்றது. உணவோ எண்ணெயோ அதற்குத் தேவையில்லை. உடலுக்கு உணவும், நீரும் தேவைப்படுகிறது. அதுவே அதன் எரிபொருளாகும்.

உடல் இயந்திர இயக்கம் போன்று செயல்படுகிறது. உயிருக்கு அந்த இயக்கம் கிடையாது. பசியோடு இருக்கும்போது உடலுக்கு உணவளியுங்கள். உடல் பசியுடன் இருக்கிறது. 

அதை நீங்கள் தள்ளி நின்று பார்க்கிறீர்கள்  என்பதை மட்டும் நினைவில் வையுங்கள். அதன் தாகத்துக்குத் தண்ணீர் கொடுங்கள். 
அப்படித் தருவது அவசியமாகும்.
இயந்திரத்திற்கும் அதை நீங்கள் கொடுக்கிறீர்கள்.

உடல் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். உடல் இயந்திர இயக்கம் போன்றது. அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பயன் அளவற்றது.

உடல் ஏணிபோன்றது. 
அது உங்களைத் துயரம் நோக்கி அழைத்துச் செல்கிறது. அதுவே பேரின்ப நிலை நோக்கியும் கூட்டிச் செல்கிறது.

அதன் ஒரு முனை தரையையும் மறுமுனை வானத்தையும் தொட்டுக் கொண்டிருப்பது அதன் ஸ்பெஷாலிடி!

அந்த ஏணியைப் பயன்படுத்தி நீங்கள் கீழேயும் வரலாம், மேலேயும் உயரலாம்.  உடல் என்ற ஊடகத்தின் துணையுடன் நீங்கள் நரகத்தில் விழலாம், சொர்க்கத்துக்கும் போகலாம்.  

உடலின் உதவி பெற்று நீங்கள் நித்திய விடுதலை பெறவும் முடியும்.

                            🍃ஓஷோ🍃

தானம்

#நீங்கள்_இறந்த_பிறகும்_வாழ_வேண்டுமா...?

நீங்கள் இறந்த பிறகும் வாழ நினைத்தால் தானம் செய்யுங்கள ஆனால் தானம் என்பதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்ட பின் தானம் செய்யுங்கள். 

தானம் என்றாலே இரத்த தானம், உடல் உறுப்பு தானம், அன்னதானம் அவற்றை மட்டுமே நினைக்கிறோம். இவைகள் மட்டும்தான் தானமா என்றால் இல்லை என்பதுவே உண்மை.

அப்படியெனில் உண்மையில் தானம் என்பது என்ன?

"உங்களிடம் இருக்கும் ஒன்றை பிறருக்கு கொடுக்கும் ஒவ்வொன்றும் தானம் தான்". 

உதாரணமாக,

ஒரு குழந்தை பிறந்து பெற்றோருக்கு மகிழ்ச்சியைத் தானம் செய்கிறது. குழந்தை வளரும் பொழுது படிப்பதன் மூலமாகவும், விளையாடுவதன் மூலமாகவும் அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையில் பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் பெருமையை தானம் செய்கிறது.

ஒருவருக்குத் தேவைப்படும் நேரத்தில் எதையும் எதிர்பார்க்காமல் நீங்கள் செய்யும் சிறிய உதவியும் ஒருவகை தானம். நண்பர்கள் உறவினர்கள் குடும்பத்தினர் என அவர்களிடம் நீங்கள் செலவு செய்யும் உங்களுடைய அன்பான நேரமும் ஒரு வகை தானம். 

தேவைப்படும் நபருக்கு நீங்கள் கொடுக்கும் உங்களுடைய அறிவும் ஒருவகையில் தானம். 

காற்றைப் நீங்கள் மாசுபடுத்தாமல் இருந்தால் அது நம் பூமியில் வாழும் ஓவ்வொரு மனிதனுக்கும் நீங்கள் செய்யும் தூய காற்று தானம்.

நீங்கள் தண்ணீரை வீணாக்காமல் தேவைக்கு மட்டும் சரியாக பயன்படுத்தினால் அது உங்கள் அடுத்த தலைமுறைக்கு நீங்கள் செய்யும் தண்ணீர் தானம்.

உங்கள் உணவை நீங்கள் வீணாக்காமல் இருந்தாலே அது இன்னொருவரின் பசியைப் போக்கிய தானம் தான். மேலும் அது அன்னதானத்திற்கு இணையான தானம்.

இறந்த பிறகும் வாழ நினைத்தால் தானம் செய்யுங்கள் என்பதன் பொருள் நீங்கள் வாழும் பொழுது எப்படி வாழ்கிறீர்கள் எதையெல்லாம் பிறருக்காக கொடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உள்ளது.

"ஒருநாள் செய்வதல்ல தானம். ஒவ்வொரு நாளும் எதேனும் ஒரு நல்லதைச் செய்வதுதான் தானம்".

இந்த நொடியிலிருந்தே தானம் செய்யலாம். 

தானம் செய்ய யாரெல்லாம் தயார்...?

Sunday 3 November 2019

ஆமை

#மூன்று_குரங்குகள்_போலவே_மூன்று_ஆமைகள்...!

மூன்று குரங்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும். தேவையின்றி பார்ப்பது, கேட்பது, பேசுவது தவறு என்பதை உணர்த்தும். அதைப்போலவே மூன்று ஆமைகள் பற்றியும் அவை உணர்த்தும் தத்துவங்கள் பற்றியும் தெரியுமா?

மூன்று குரங்குகளின் தத்துவத்தைப் போலவே மிகவும் வலிமையான மற்றும் மனித வாழ்வை மாற்றப்போகும் மூன்று ஆமைகளின் தத்துவத்தைப் பற்றி இன்று தெரியுமா?

இன்று தெரிந்துகொள்வோமா?

இத்தனை வருடங்களாக மனித வாழ்வில் நடந்துள்ள எந்தவொரு நன்மையோ? தீமையோ? அதற்கான காரணம் இந்த மூன்று ஆமைகள்தான்.

தற்போது நடந்துவரும் அனைத்து நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் காரணமாக இருப்பது இந்த மூன்று ஆமைகள்தான்.

அது என்ன மூன்று ஆமைகள்...? 
அது எந்த மாதிரியான மாற்றத்தை 
நம் வாழ்வில் கொடுத்துள்ளது? 

தெரிந்துகொள்வோம் வாருங்கள்...!

பல ஆண்டுகளாக மனித இனம் சந்தித்துவரும் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணமே இந்ந மூன்று ஆமைகள்தான்.

ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் நாம் செய்யும் தவறுகள் அல்லது சரிகளைத் தீர்மாணிப்பது இந்த மூன்று ஆமைகள்தான்.

இதில் என்ன சிறப்பு என்றால்?

ஒவ்வொரு நாளும் இந்த மூன்று ஆமைகளையும் நாம் சந்தித்து வருகிறோம் அதுவும் நம் வாழ்நாள் முழுவதும் என்பதுதான்.

என்னதான் அந்த மூன்று ஆமைகள்?

1. அறியாமை
2. கல்லாமை
3. முயலாமை

#அறியாமை ஏன்? எதற்கு? எப்படி? என்ன? என்பது புரியாமல் பிறர் கூறுவதை, பிறர் பின்பற்றுவதை அப்படியெ பின்பற்றி வாழ்தலே அறியாமை.

#கல்லாமை என்றால் ஏட்டுக் கல்வியை மட்டும் கூறவில்லை. எதையும், எதிலிருந்தும் கற்றுக்கொள்ளாமல் தயக்கத்துடன் வெறுமென வாழ்தலே கல்லாமை. 

#முயலாமை வாழ்நாள் முழுவதும் வேறு எந்த முயற்சியும் செய்யாமல் ஒரு வட்டத்திற்குள் மட்டும் முயற்சி செய்துகொண்டு அதற்குள்ளேயே வாழ்வது முயலாமை.

நம்மை நாமே கவனிக்கும் திறன் இருந்தால் இந்த மூன்று ஆமைகளையும் சரியாக வளர்க்கலாம்.

கோயில்

நமக்குத் தெரிஞ்ச ஒரு ஆசாமி, சரியான எடக்குமடக்குப் பேர் வழி. 

நாலு தெரு தள்ளி, ஒரு பூங்கா; அங்கேதான் நம்ம எடக்குமடக்கு தினமும் வாக்கிங் போவது வழக்கம்.
பூங்காவுக்கு அருகிலேயே, அம்மன் கோயில் ஒன்று பாழடைந்து கிடந்தது. 

விளக்கு ஏற்றக்கூட யாரும் வருவதில்லை. 
பாவப்பட்ட குருக்கள் ஒருத்தர், தினமும் கொஞ்சம் நேரம் கோயிலைத் திறந்து வைப்பார். 
.
எடக்குமடக்கின் மனைவி, ''பூங்காவைச் சுத்தும்போது, அப்படியே அந்தக் கோயிலையும்தான் ரெண்டு சுத்து சுத்திட்டு வாங்களேன்'' என்பாள். 

உடனே எடக்கு மடக்கு, ''அந்த அம்மனுக்கு பவரே கிடையாது. பவர் இருந்தால், தன் கோயிலைப் பாழடைய விட்டிருப்பாளா?'' என்று 
விதண்டாவாதம் செய்வார் .
.
ஒருநாள் காலையில்... வழக்கமாக 
பெரிய டம்ளரில் காபி எடுத்து 
வரும் 'எ-ம'-ன் மனைவி, மிகச் சிறிய டம்ளரைக் கொண்டு வந்தாள். 

''ஏன்... ஸ்பூன்ல கொண்டு வர்றது தானே?!'' என்று எரிச்சலானார் எடக்கு.
.
''இது காபி இல்லை; நல்லெண்ணெய். வாய்ல புண்ணுன்னு சொன்னீங்களே... அதான்!
.
நல்லெண்ணெயை அரை மணி நேரம் வாயிலே வெச்சிருந்து, பிறகு கொப்பளிச்சா, வாய் புண் குணமாகும்னு பத்திரிகையில படிச்சேன். 
நீங்க வாக்கிங் போகும் போது வாயில நல்லெண்ணெயை ஊத்திக்குங்க. வீட்டுக்கு வந்ததும் கொப்பளிச்சிடுங்க'' என்று புரோகிராம் போட்டுக் 
கொடுத்தாள் மனைவி.
.
ஆனால், சோதனையாக, எடக்கு வாயில் எண்ணெயை ஊற்றிக்கொண்டு தெருவில் இறங்கிய ஐந்தாவது நிமிஷம், அவருடைய ஆபீசர் எதிரே வந்தார். ''அடடே! உன் வீட்டுக்குத்தான் வர்றேன்!'' என்று ஸ்கூட்டரை நிறுத்தினார். 

வேறு வழியில்லாமல், எண்ணெயைத் துப்பிவிட்டு அவரிடம் பேசினார் எடக்கு. வீட்டுக்குப் போனதும், நடந்ததை மனைவியிடம் சொன்னார்.
.
அவள் விடுவாளா! 

மறுநாள், எக்ஸ்ட்ராவாக ஒரு சின்ன 
எவர் சில்வர் தூக்கில் எண்ணெய் ஊற்றித் தந்தாள். 
''வாக்கிங் போகும்போது துப்பும்படி ஆயிட்டா, இதிலிருந்து எடுத்து வாயில் ஊத்திக்குங்க'' என்றாள்.
.
தினமும் அவர் இப்படி எவர்சில்வர் தூக்கோடு நடந்து போவதை, அடுத்த தெருவில் உள்ள ஒரு பெண்மணி கவனித்துவிட்டு,  ''தினமும் எண்ணெய் கொண்டு போறீங்களே, கோயிலுக்கா?'' என்று கேட்டாள்.

அவளிடம், தான் எண்ணெயை வாயில் ஊற்றிக் கொப்பளிப்பதையெல்லாம் விளக்க விரும்பாமல், 'ஆமாம்' என்று தலையாட்டி வைத்தார் நம்மாள்.
.
மறுநாள்... அந்தப் பெண்மணியின் கையில் ஒரு சொம்பு எண்ணெய். ''தயவுசெஞ்சு இதையும் சேர்த்துக்கங்க'' என்று எண்ணெயை அவரது எவர்சில்வர் தூக்கில் ஊற்றினாள். 

இதே போலவே அடுத்தடுத்த நாட்களில் நிறையப் பேர் காத்திருந்து, எடக்குமடக்கின் தூக்கில் தங்கள் பங்காக கொஞ்சம் எண்ணெயை ஊற்றினார்கள்.
.
கோயிலுக்கு எண்ணெய் ஊற்றுவதை வேண்டாம் என்று சொல்ல மனமின்றி, அவரும் தட்டாமல் வாங்கிக் கோயிலுக்கு அந்த எண்ணெயைக் கொடுத்து வந்தார்.
.
நிறைய எண்ணெய் கிடைத்ததால், தினமும் கோயிலில் ஏராளமாக விளக்கேற்றி வைத்தார் குருக்கள்.
.
அதிகப்படியான எண்ணெயை 
விற்றுப் பிரசாதம் செய்து, வருபவர்களுக்கு விநியோகித்தார்.
.
பூங்கா கோயில் மாலை வேளையில் ஜெகஜ்ஜோதியாகிவிட்டது.

காணிக்கைகள் ஏராளமாக வந்தன.
.
கொஞ்ச நாளில் கோயில் புதுப்பிக்கப்பட்டுப் கும்பாபிஷேகமே நடந்தது.
.
எடக்குமடக்குவிடம் அவர் மனைவி சொன்னாள்...
''அந்த அம்ம னுக்கு பவர் இல்லை;  தன் கோயிலையே அவளால் கட்டிக்க முடியலே'ன்னு சொன்னீங்களே... 
இப்ப பார்த்தீங்களா, உங்களைக் கொண்டே அதை நிறைவேத்திக்கிட்டா!''
.
எதை, எப்படி, எப்போது யாருக்குச் 
செய்ய வேண்டும் என்பதை தெய்வத்துக்கு நாம் சொல்லித்தர வேண்டியதில்லை. 

தனக்கே என்றாலும், தெய்வத்திற்க்கு
 தெரியும்... எதை, எப்போது செய்வது என்று!....!!!!

Saturday 19 October 2019

கொண்டாட்டம்

*சுந்தர்பிச்சை சொல்லும் 'கரப்பான்பூச்சி' கோட்பாடு*

ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்தப் பெண் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தார். மிகவும் கஷ்டப்பட்டு, அந்த கரப்பானை அவர் மீதிருந்து விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அதுவரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்த பதற்றம் தொற்றிக் கொண்டது.

மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த கரப்பானை தன் மீதிருந்து விலக்கி விட்டார். ஆனால் அந்த கரப்பான் இப்பொழுது வேறொரு பெண் மீது சென்று அமர்ந்து கொண்டது. இப்பொழுது இந்தப் பெண் அதே போல் கூச்சலிட ஆரம்பித்தார். அமைதியாக இருந்த மொத்த உணவகமும் இப்பொழுது அமைதியிழந்து காணப்பட்டது.
இதை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர் சூழ்நிலையை சரி செய்ய விரைந்தார். இந்த முறை கரப்பான்பூச்சி, பறந்து சென்று அந்த பணியாளர் மீது அமர்ந்து கொண்டது. பணியாளர் தன்னை நிதானித்துக் கொண்டு தன் சட்டையின் மீது அமர்ந்திருக்கும் கரப்பானின் நடத்தையை கவனித்தார். அது தன் நகர்தலை நிறுத்தியதும், தன் விரல்களால் அதை பிடித்து உணவகத்திற்கு வெளியே வீசியெறிந்தார்.
நான் என் காபியைப் பருகிக் கொண்டே இதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனது இந்த நிகழ்ச்சியிலிருந்து சில கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தது. அவர்களின் அந்த நடத்தைக்கு கரப்பான்பூச்சி தான் காரணமா? அப்படியெனில் அந்தப் பணியாளர் ஏன் அதன் மூலம் அமைதி இழக்கவில்லை? அவர் மட்டும் எந்த ஆரவாரமுமின்றி அதை நேர்த்தியாகக் கையாண்டார். எனவே அந்த பெண்களின் நடத்தைக்கு கரப்பான் பூச்சி காரணம் அல்ல. அந்த கரப்பான்பூச்சி ஏற்படுத்தும் தொந்தரவைக் கையாள முடியாத அவர்களின் இயலாமை தான் அவர்களின் அந்த நடத்தைக்குக் காரணம்.

இதன் மூலம் நான் உணர்ந்தது என்னவெனில், என் தந்தை அல்லது மனைவி அல்லது முதலாளியின் கடுமையான பேச்சு என்னை அமைதியிழக்கச் செய்யவில்லை, அந்த வாக்குவாதத்தை கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்கிறது. என் அமைதியை குலைக்கிறது. சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசல்கள் என்னை தொந்தரவு செய்யவில்லை. *ஆனால், அந்த நெரிசல்களைக் கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்கிறது.* என் வாழ்வில் எந்தவொரு குழப்பத்தையும் எந்தவொரு சிக்கலும் உருவாக்குவதில்லை, அந்த குழப்பங்களுக்கு நான் செய்யும் எதிர்வினைகள் தான் சிக்கல்களை உருவாக்குகிறது. இதன் மூலம் நான் கற்றது வாழ்வில் நான் எதிர்வினை ஆற்றக் கூடாது, பதிலளிக்க வேண்டும் (I should not react in life, I should always respond). நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மிடம் உள்ள அனைத்தையும் பறிக்கக் கூடும் ஒன்றைத் தவிர. அது தான் ஒரு சூழ்நிலைக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம். வாழ்வில் நமக்கு நடக்கும் விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதற்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும். எத்தனைத் தெளிவான பாடமாக அமைந்திருக்கிறது.

*கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை அவர்களால் பகிரப்பட்ட இந்தக் கதையை ஆழ்ந்து வாசித்து பயன்படுத்தினால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே வாழ்க்கையை கொண்டாட துவங்குவீர்கள்! நம் வெற்றியும், தோல்வியும் நம் கைகளில் தான் என்பதை உணர்வீர்கள்!... அட! வெற்றி, தோல்விகளை விட வாழ்க்கையை அனுபவித்து வாழக் கற்றுக் கொள்வீர்கள்!*

சோர்வு

# மனச்சோர்வு...

சில சமயம் நீங்களே உணர்ந்திருக்கலாம். எதைப் பார்த்தாலும் வெறுப்பாக இருக்கும். யாரைப் பார்த்தாலும் எரிச்சல் வரும்.

மனதுக்குள் தோற்றுவிட்டதுபோல் ஒரு வெறுமை உண்டாகும். அப்படியானால், மனச்சோர்வு என்ற எதிரியை உள்ளே அனுமதித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்!

மனச்சோர்வு எதனால் வருகிறது… அடிப்படையில் உங்களுக்கு என்ன நிகழ்கிறது?

நீங்கள் விரும்பியபடி யாரோ நடக்கவில்லை. எதிர்பார்த்தபடி எதுவோ நிகழவில்லை. ஆசைப்பட்டபடி வாழ்க்கை அமையவில்லை.

சுருக்கமாகச் சொன்னால், உங்களுக்கு என்ன கிடைத்திருக்கிறதோ, அதை ஏற்றுக் கொள்ள முடியாமல், நீங்கள் தவிக்கிறீர்கள். அதை எதிர்க்கிறீர்கள்.

நீங்கள் மனச்சோர்வுடன் இருக்கும்போது எல்லாம், மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்.

உங்களுடன் உட்கார்ந்து மற்றவர்களும் அழ வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இரக்கத்தை யாசிக்கிறீர்கள். என்ன பைத்தியக்காரத்தனம் இது?

உங்கள் விருப்பப்படி எல்லாம் உலகம் ஏன் நடக்க வேண்டும்? நீங்கள் விரும்பியபடியெல்லாம் தங்களை ஏன் மற்றவர்கள் ஏய்த்துக் கொள்ள வேண்டும்?

அகங்காரம் எங்கே இருந்தாலும், அதற்கு அடி விழத்தான் செய்யும். அப்போது, மனச்சோர்வு முளைத்து எழும். அது உங்களைப் பற்றிய நம்பிக்கைகளைத் தகர்த்துவிடும்.

வெளியே இருந்து ஆயுதங்களால் தாக்குபவர்களைக் கூட சரியாகக் கையாண்டால், சமாளித்துவிடலாம்.

மனச்சோர்வு என்பது உள்ளிருந்து கொண்டே, கீறிக் கிழித்துக் குடைந்து உங்களை உபயோகமில்லாமல் அழித்துவிடும் விஷ ஆயுதம். உங்களை நீங்களே தாக்கி அழித்துக் கொள்வதைப் போன்ற முட்டாள்தனம் அது!

எதை நினைத்தும் சும்மா வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பதால், எந்தப் பலனும் இல்லை. வருத்தம் என்பதும், துக்கம் என்பதும் ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒருவர் தீக்குச்சி பற்றவில்லை என்றாலே துக்கமாகிவிடுவார். இன்னொருவர் வீடே தீப்பற்றி எரிந்தாலும், அலட்டிக் கொள்ள மாட்டார்.

துக்கம் என்பதும், வருத்தம் என்பதும் ஒருவருக்கொருவர் மாறுபடும். மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வருத்தம் கூடும் அல்லது குறையும் என்றால், அவை வெளியிலிருந்தா வருகின்றன? இல்லை. உங்கள் மனதுக்கு உள்ளேயேதான் உற்பத்தியாகின்றன.

உங்கள் மனத்தைச் சந்தோஷமாக வைத்துக் கொள்வதோ, சோர்வாக வைத்துக் கொள்வதோ உங்கள் கையில்தான் இருக்கிறது.

நீங்கள் நினைத்தபடி உலகம் நடக்க வேண்டும், மற்றவர்கள் இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் உங்கள் அகங்காரம் வீண் சுமை.

அதைக் காலடியில் போட்டு நசுக்கி விட்டு மேலே தொடரவில்லை என்றால், நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும் வலிக்கும். ஒவ்வொரு திருப்பத்திலும் அச்சம் வரும். நம்பிக்கை குறைந்து, மனச்சோர்வு எழும்.

மனச்சோர்வு வரும்போதெல்லாம் மற்றவர்கள் மீது எரிச்சல் கொள்வதை நிறுத்திவிட்டு, அதற்குக் காரணம் நீங்கள்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உலகத்தின் மீது கோபம் கொள்ளாதீர்கள். உங்கள் குறைகளை உணர்ந்து அவற்றை மாற்றிக் கொள்ளக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு இது என்று உணருங்கள்.

வலிகளும், வேதனைகளும் நிரம்பிய அனுபவங்களையே வாழ்க்கைப் பாடங்களாக ஏற்று, உங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வழங்கப்பட்ட வரம் இது!

எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டதால்தான் ஏமாற்றங்கள் என்பதை உணருங்கள்... மாற்றுக் கருத்துக்களையும் எதிர்க்காமல் ஏற்கப் பழகுங்கள்... அவற்றையே உங்களுக்குச் சாதகமாக மாற்றக் கொள்வது எப்படி என்று திட்டமிடுங்கள்.

கிடைக்கும் அனுபவங்களை உங்களுக்குப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்...

# வெற்றி_நிச்சயம்..

# வாழ்க_வளமுடன்.

Wednesday 2 October 2019

நன்றி

*நன்றியுணர்வின் சக்தி*

வெகு நாட்கள் முன்பு பாலை நிலத்தில் பரிதவித்து வாழ்ந்த ஒரு பறவை,  பாலைவனத்தின் வெப்பத்தால் தன் உடலிறகுகள் அனைத்தையும் இழந்து உண்ணவும், பருகவும் எதுவுமின்றி தவித்துக் கொண்டிருந்தது. தங்குவதற்கு ஒரு கூடு கூட இன்றி தன் வாழ்வை சபித்த வண்ணம் அல்லும் பகலும் வாழ்ந்து வந்தது.

ஒரு நாள் ஒரு  ஞானி  அப்பாலை நிலத்தை கடந்து செல்வதைக் கண்ட அப்பறவை அவரிடம், "எங்கு செல்கிறீர்கள்" என்று கேட்டது. "முக்காலத்தையும் உணர்ந்த என் குருவை  சந்திக்க செல்கின்றேன்" என்று அவரும் பதில் கூறினர். உடனே அப்பறவை, "என்று என் துன்பங்கள் முடிவுறும் என்று அவரிடம்  கேட்டு சொல்லுங்கள்" என்று பறவை  கேட்டது.

"கண்டிப்பாக கேட்டுச் சொல்கிறேன்" என்று கூறிச் சென்றார்.

தன் குருவை  அடைத்த அத்தூதர் இறைவனிடம் அப்பறவையின் பரிதாப நிலையை விளக்கிக் கூறி எப்பொழுது அதன் துன்பம் முடிவுறும் என்று கேட்டார். "இன்னும் ஏழு பிறவிகள் அப்பறவை அது அனுபவிக்கும் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும். அதுவரை அப்பறவைக்கு எவ்வித இன்பமும் இல்லை" என்று குரு பதில் கூறினார்.

இதைக்கேட்டால் ஏற்கெனவே சோர்வுற்றிருக்கும் அப்பறவை மேலும் மனமொடிந்து போய் விடுமே என்றெண்ணிய ஞானி  "இதற்கொரு நல்ல தீர்வைக் கூறுங்கள் ஐயா" என்று குருவை பணிந்து வேண்டினார்.

குருவும் மனமிரங்கி ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப கூறினால் நன்மை விளையும் என்று சொல்லி மந்திரத்தையும் கற்பித்தார்.  *அனைத்தும் நன்மைகே  அனைத்திற்கும் நன்றி* என்பதுவே அந்த மாமந்திரம்.

குரு கற்பித்த மந்திரத்தை ஞானியும்  அப்பறவைக்கு கூறிச் சென்று விட்டார். ஏழு நாட்களுக்குப் பின் அந்த ஞானி அப்பாலை நிலத்தைக் கடந்து சென்ற போது அந்த பறவை மிகுத்த ஆனந்ததுடன் இருப்பதைக் கண்டார்.

அதன் உடலிறகுகள் முளைத்திருந்தன. அப்பாலை நிலத்தில் ஒரு சிறு செடி முளைத்திருந்தது. ஒரு சிறிய நீர்நிலையும் அங்கு இருந்தது. ஆனந்ததுடன் அங்குமிங்கும் மகிழ்வுடன் அப்பறவை அலைந்து திரிந்து கொண்டிருந்தது.

குருவிற்கு  மகா ஆச்சர்யம். ஏழு பிறவிகளுக்கு இன்பமே இல்லையென குரு  கூறினாரே!! இன்றெப்படி இது சாத்தியமென எண்ணி அதே கேள்வியுடன் குருவை பார்க்கச் சென்றார்.

குருவிடம் கேள்வியைக் கேட்ட போது அவர் கூறிய பதில் இதுவே: "ஆம். ஏழு பிறவிகளுக்கு அப்பறவைக்கு எவ்வித மகிழ்வும் இல்லையென்ற விதி இருந்தது உண்மைதான். ஆனால் *அனைத்தும் நன்மைக்கே,  அனைத்திற்கும் நன்றி* என்ற மந்திரத்தை அப்பறவை எல்லா சூழலிலும் மாறி மாறி கூறியதால்  நிலைமை மாறியது.

பாலையின் சுடுமணலில் விழுந்த போது நன்றி சொன்னது.

வெப்பத்தில் வருந்தி பறக்க முடியாது தவித்த போதும் நன்றி சொன்னது.

*சூழல் எதுவாயினும் நம்பிக்கையுடன் சொன்னது*.

எனவே ஏழு பிறவியின் ஊழ்வினைப் பயன் ஏழு நாட்களில் கரைந்து மறைந்தது" என்று  பதில் கூறினார்.

ஞானியும் தன் சிந்தனையிலும், உணர்விலும், வாழ்வை நோக்கும் கோணத்திலும், வாழ்வை ஏற்றுக்கொள்வதிலும் ஒரு மாபெரும் மாற்றம் விளைந்தது.

ஞானி அந்த மாமந்திரத்தை தன் வாழ்வில் உபயோகிக்க ஆரம்பித்தார்  சந்திக்கும் எல்லா சூழல்களிலும்

*அனைத்தும் நன்மைக்கே,  அனைத்திற்கும் நன்றி*

என்று உளமார கூற ஆரம்பித்தார்.

அதுவரை அவர்  பார்த்திராத கோணத்தில் பார்க்க அந்த மந்திரம் உதவியது.

அதை போல் நாமும்  உறவுகள், பொருளாதாரம், அன்பு வாழ்வு, சமுதாய வாழ்வு, வியாபாரம், நண்பர்கள், வேலையாட்கள், உடன் பணியாற்றுவோர் .... என அனைத்திலும், எல்லா  சூழ்நிலைகளிலும், நடப்பவை  அனைத்தும் நன்மைக்கே, எனவே
*நன்றி, நன்றி, என்று எல்லா நேரங்களிலும் உளமார கூறுங்கள்*.

இந்த கதையை  மனைவி மற்றும் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் .

அவர்களது வாழ்விலும் மாபெரும் மாற்றங்கள் வரும்

இந்த எளிமையான மாமந்திரம்  வாழ்வில் மாபெரும் மாற்றங்களை கொண்டு வரும்.

தன்னம்பிக்கை  எவ்வளவு சக்தி மிக்கது.

தன்னபிக்கை  ஊட்டும் ஒரு எளிய வார்த்தை, ஒரு எளிய சிந்தனை நமது ஊழ்வினையின் பாரத்தை கரைத்து மறையச் செய்யும் சக்தியுடையதாக இருகின்றது.

இந்த மந்திரத்தை அறியாமல்தான் பிறவி மேல் பிறவியாக கர்ம வினையைச் சுமந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இந்த மாமந்திரத்தை தொடர்ந்து மனதினுள் உச்சரித்து வருவோமெனில் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கி உணர்வோம்.

வாழ்க வளமுடன் !

Monday 30 September 2019

அன்பு

*#கேள்வி*

மனிதர்கள் ஏன் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள்?

*#ஓஷோபதில்*

அது ஒரு அடிப்படைச் சிக்கல்.

அதன் அடிப்படையைக் காண மாபெரும் உளவியல் அறிஞர்களாலும் முடியவில்லை.

கொடுக்க யாரும் விரும்புவதில்லை.

எல்லோரும் பெற்றுக் கொள்ளவே விரும்புகிறார்கள்.

அதன் மனோதத்துவம் எளிமையானது.

நீங்கள் காலியாக இருக்கிறீர்கள்..

உங்கள் உள்ளே அன்பு இல்லாமல் மொத்த இடமும் காலியாக இருக்கிறது.

அதில் எதையாவது போட்டு நிரப்ப பார்க்கிறீர்கள்.

யாராவது ஏதாவது கொடுக்க மாட்டார்களா என எப்போதும் எதிர் பார்த்து இருக்கிறீர்கள்.

உங்கள் உள்ளே உள்ள காலி இடமோ மிகப் பெரியது.

பணம்,அதிகாரம்,பெருமை,மரியாதை இவை எவற்றாலும் உங்கள் காலியிடத்தை நிரப்ப முடியாது.

இவை எல்லாம் கிடைத்து விட்டாலும் வெறுமையைத் தான் உணர்வீர்கள்.

அப்புறம்,என் வாழ்வே வீண் என்று கவலைப் படுவீர்கள்.

வெறுமையே கருமித்தனத்தை உருவாக்குகிறது.

பொங்கும் அன்பு வெள்ளமே அதனை அடித்துச் செல்லக்கூடியது.

நீங்கள் அன்பினால் நிறைந்து வழியும்போது கருமித்தனம் நில்லாது.

*#ஓஷோ*

Tuesday 3 September 2019

கோபம்

கோபம் படுவதால் ஏற்படும் தீமைகள் . கோபத்தை எப்படி குறைப்பது ?

முதலில் கோபம் எதனால் வருகிறது? கோபம் அடைவதனால் நன்மை என்ன? கெடுதல் என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கோபம் எதனால் வருகிறது? என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொன்னால், அவர்கள் ஒன்று செய்கிறார்கள்.
இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார்.மற்றொருவர், யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார். அடுத்தவர், நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான் அவங்க என்கிறார். இன்னொருவர், சொன்னதை திரும்ப திரும்ப சொன்னா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுன்னு சொல்றார். வேறொருவரோ, நினைச்சது கிடைக்கலைன்னா சும்மா விடமாட்டேனுட்டார்.  இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர். இப்படி அடுத்தவர்கள் ஏதாவது செய்தால் இவர்களுக்கு கோபம் ஏற்படுமாம்.

அது சரி...

நீங்களே ஏதாவது தவறு செய்தால் உங்கள் மீது கோபப்படுவீர்களா? என்றதற்கு, அது எப்படீங்க நம்ம மேலேயே நம்ம கோபப்படுவோமா என்றனர். கோபம்ன்னா என்ன? கோபம் என்பது அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனைக்கு பெயர் தாங்க கோபம். அதுமட்டுமல்லாமல் நாம் நம் கோபத்தை குறைக்க அடுத்தவர்களிடம் இதே கோபத்துடன் செயல்பட்டால் நட்பு நசுங்கி விடும். உறவு அறுந்து போகும். உரிமை ஊஞ்சலாடும். நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை என்ன? சவுக்கு எடுத்து சுளீர்...சுளீர்ன்னு நம்மளையே அடித்துக்கொண்டால் மட்டும் அதுக்கு பெயர் தண்டனை இல்லீங்க. கோபம் ஏற்படுவதால் பதட்டம்( டென்ஷன்) உண்டாகிறது. இதனால் நமது உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகிறது. இந்த பாதிப்பால் நரம்புத்தளர்ச்சி, ரத்த அழுத்தம், மன உளைச்சல், நடுக்கம் போன்ற உபாதைகள் உண்டாகிறது.  இதை தடுக்க  டாக்டரிடம் சென்று மாத்திரை மருந்து சாப்பிடுவோம். இதே நிலை நீடித்தால் ஒரு மன நோயாளி போல் ஆகி விடுவோம்.ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும் என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள். இதில் 2-வதாக உள்ள வழக்கு இருதய நோய்களுக்கு அப ்படியே பொருந்தும். ஆமாம், மூக்குக்கு மேல் வரும் கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் சொல்கிறார் கள். 55 வயத ுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகம் ஆகும். இதுவே 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக அமைகிறது. அதாவது 2 மடங்கு அதிகமாக…

சரி, கோபம் கொள்வதால் மாரடைப்பு எப்படி வருகிறது தெரியுமா?

கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். பிறகென்ன மாரடைப்பு தான். இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல் களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான். மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை எரிப்பதற்கு முன் நீங்கள் அதை எரித்து விட வேண்டியது முக்கியம்.

இது பொய்யல்ல. சத்தியமான உண்மை இது. இதெல்லாம் நீங்க சொன்னீங்க...உண்மை மாதிரி தான் தெரியுதுன்னு நீங்க சொல்றதும். அப்படியே கோபத்தை குறைக்கறதுக்கும் வழி சொன்னீங்கன்னா நல்லாயிருக்குமேன்னு புலம்புறதும் புரியுது... அப்படி வாங்க வழிக்கு. அன்பின் வேறொரு விதமான வெளிப்பாடுதான் கோபம்.

கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கோபம் என்பது
உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை மற்றும் பதிலி செய்கைகள் காரணமாக உண்டாகிறது. கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான் கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் விர்ரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

நீண்ட நாள் வாழ வேண்டுமானால் கோபத்தை குறைத்தாக வேண்டும். கோபத்தை இரு வழிகளில் கட்டுப்படுத்தலாம். ஒன்று குறுகிய காலத்துக்கு. மற்றொன்று நீண்ட காலத்துக்கு. பொதுவாக கோபம் என்பது சிந்தனைகளின் வெளிப்பாடு தான். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆத்திரமூட்டாத நிலையில், அதில் தலையிடும் போது நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், என்ன உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் கோபம் உண்டாகும்.

கோபத்தை குறைக்க 15 வழிகள்

1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்.

2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்

3. அவசரம் ஒருபோதும் வேண்டாம்

4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்

5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள்.

7. மதம் சம்பந்தான பிடித்தமான வரிகளை மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் வைத்திருக்கும்.

8. ஆழமான பெருமூச்சு விடுங்கள்

9. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.

10. சுறுசுறுப்பான வாக்கிங் செல்லுங்கள்.

11. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

12. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.

13. எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.

14.. ஓய்வெடுக்கலாம், அல்லது குட்டித் தூக்கம் போடுங்கள்.

15. கோபத்தை உண்டு பண்ணும் நினைப்புகளில் இருந்து திருப்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். 

முதல்ல அடுத்தவங்களுக்கு கோபம் வர்ற மாதிரி நீங்க நடக்காதீங்க. அடுத்தவங்கள குறை சொல்லாதீங்க. எதையும் அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காதீங்க. அவங்க உங்க மேல கோபப்பட்டா முதல்ல சாரின்னு மன்னிப்பு கேளுங்க... ஈகோ பார்க்காதீங்க. நீங்க கோபப்படுற மாதிரி அடுத்தவங்க நடந்து கொள்கிறார்கள் என்று வைத்து கொள்வோமே. முதல்ல பிளீஸ் என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்கன்னு அமைதியாயிடுங்க. யார்மேல தவறுன்னு சிந்தியுங்க... கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாயிடும். அப்படி இல்லைன்னா அந்த இடத்தை விட்டு நகருங்க...தனியா உக்காந்து யோசிங்க. அடிக்கடி யாரிடம் கோபப்படுகிறீர்களோ அவர்களிடம் மனம் விட்டு சந்தோஷமாக சிரித்து பேசுங்கள். அடுத்தவர்களே தவறு செய்திருந்தால் கூட நீங்க நல்லது பண்ணுங்க. அடுத்தவங்க என்ன செஞ்சுட்டாங்கன்னு கோபப்படுறோம். என்ன நடந்துருச்சு பெருசா. என்னத்த இழந்துட்டோம். மரணம் ஒன்று தான் மாபெரும் இழப்பு. அதை தவிர வேறொன்றுமே இழப்பு கிடையாது. எல்லாத்தையும் சமாளிச்சுடலாம்ங்ற முடிவுக்கு வாங்க. வீட்டு பெரியவர்கள்  திட்டும் போது கவனித்திருப்பீர்கள் என்னத்த பெரிசா சாதித்து கிழிச்சன்னு. நாட்காட்டியில் உள்ள தேதி பேப்பரை கிழிச்சால் மட்டும் போதாது. ஒவ்வொரு நாளும் தூங்க செல்லும் முன் இன்றைக்கு என்ன சாதிச்சோம்னு யோசிச்சிட்டு தூங்குங்க. அடுத்தவர்களுக்கு நல்லது பண்ணாட்டியும் கோபம்ங்ற  கொடிய நோயை  பரப்பாமல் இருந்தாலே நீங்க அவங்களுக்கு நல்லது செஞ்ச மாதரி தான். தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்பவன் கூட. ஒரு செகண்ட் யோசிச்சான்னா தனது முடிவை மாற்றிக்கொள்வான்.  நமக்கோ ஆறு அறிவை ஆண்டவன் கொடுத்துள்ளான். இதில் ஆறாவது அறிவை அப்பப்ப யோசிக்கிறதுக்கு யூஸ் பண்ணுங்க... கோபம் வரவே வராது. நாமெல்லாம் சாதிக்கப்பிறந்தவர்கள். கோபப்படாமல் இருப்பதே ஒரு மாபெரும் சாதனை தான். வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான். அதை கோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து சாதிப்போம்.

நன்றிகளும்
பிரியங்களும்.