சாய்வதற்கு ஒரு தோள் அவசியமா...?
இன்றைக்கு எல்லோருக்கும் உள்ள ஓர் எதிர்பார்ப்பு என்ன தெரியுமா...?
சாய்ந்துகொள்ள ஒரு தோள்.
ஆம்... தன்னைத் தாங்கிப் பிடிக்க ஒருவர் இருந்தால் நல்லது என்றே பலரும் ஆசைப்படுகிறார்கள். இது ஒருவகை மனநோய். மன ஊனம்.
உண்மையில் உடல் ஊனமுற்ற பலர்கூட இந்த எதிர்பார்ப்பிலிருந்து விலகிச் சுயமாக இயங்கவே விரும்புகிறார்கள்.
ஆனால் கையும் காலும் வலுவாக இருந்தாலும், மனது பலவீனம் அடைந்த சிலர் யாரையாவது சார்ந்து வாழவே விரும்புகிறார்கள்.
இந்தப் பலவீனத்தைத்தான் சிறுசிறு ஜோதிடர்கள், சின்னச் சின்ன சாமியார்கள் வசமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
மூளையை அடகு வைத்துவிட்டு முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பிறர் வசம் விட்டவர்கள் வாழ்வில் மிகப் பெரிய நிலையை ஒருபோதும் எய்த முடியாது.
புத்தர், உலகை உலுக்கிய மனிதருள் ஒருவர். அவர் யாரைக் கேட்டுத் துறவு பூண்டார்......???
சகல உயிர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் கருணாமூர்த்தி அவர். ஆனால் அவர் ஆறுதலுக்காகச் சாய்ந்து கொள்ள ஒரு தோள் கேட்கவில்லை.
கோயிலில் உள்ள சாமிகளுக்குப் பேரும் புகழும் எதனால் தெரியுமா......???
பெருவாரியான மனிதர்களின் புலம்பலை, பிலாக்கணத்தை மறுப்புச் சொல்லாமல் கேட்டுக் கொள்வதுதான்.
எதிர்த்துப் பேசாமல், எவன் என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டே இருப்பதுதான் கடவுளின் ஸ்பெஷாலிட்டி.
அதனால்தான் அவருக்கு இவ்வளவு பாப்புலாரிட்டி.
அதாவது பலரது எதிர்பார்ப்பான சாய்ந்து கொள்ள ஒரு தோள் என்கிற ஆசையே கோயில்களின் எண்ணிக்கையைக் கூட்டிவிட்டது.
எப்போதும் சிலர் தங்களின் உறவுக்காரர்களில் ஒரு சிலர் பெயர் சொல்லி, ""அவர் என்னைக் கைதூக்கிவிட்டிருக்கலாம்... ஆனால் மனுஷர்..... செய்யமாட்டார்'' என்று திட்டுவார்கள்.
என் நண்பர் ஒருவர் உண்டு. எப்போதும் யாராவது இன்னொரு நண்பர் பெயர் சொல்லி, ""அவனுக்கு இப்பதான் போனஸ் வந்துருக்கு. எனக்கு ஐயாயிரம்தான் தேவை... கொடுக்கலாம். மனசே கிடையாது'' என்பார்.
ஆனால் பிறரிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டே இருப்பார்.
இத்தகைய மன ஊனங்கள் மாறவேண்டியவை.
ஓர் ஏழை இளைஞன் நெடுநாள்கள் ஆசைப்பட்டு விலையுயர்ந்த ஒரு ஜோடிக் காலணிகள் வாங்கியிருந்தான்.
ஓடும் ரயிலில் அட்டைப் பெட்டியைத் திறந்து அவற்றின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.
அப்போது எதிர்பாராத விதமாக ஜோடியில் ஒன்று ஜன்னல் வழியாகத் தவறி வெளியே விழுந்தது.
ஒரு விநாடி அவன் முகத்தில் வருத்தம் தோன்றியது. அடுத்த விநாடியே மற்றொன்றையும் பெருமிதத்துடன் வெளியே வீசினான்.
உடன் இருந்தவர்கள், "என்ன தம்பி இப்படிச் செய்துவிட்டீர்கள்?'' என்றனர்.
"ஐயா... காலணியில் ஒன்றை மட்டும் நான் வைத்திருந்தால் எனக்கு எவ்விதப் பயனும் இல்லை.
ரயில் தண்டவாளம் அருகே மற்றொன்றை யாராவது கண்டால் அவர்களுக்கும் பயன் இல்லை. மற்றொன்றை வீசிவிட்டால் எடுக்கிறவராவது சந்தோஷப்படட்டும் என்றுதான் வீசினேன்'' என்றான்.
தன் துயரத்தை இறக்கிவைக்கத் தோள் தேடும் பலவீனம் அவனிடம் இல்லை.
பிறர் துயரம் தீர்க்கும் பெருந்தன்மைப் பலம் அவனிடம் இருந்தது. அதனால்தான் ஊர் பேர் தெரியாத அந்த இளைஞனைப் பற்றி லட்சக்கணக்கானோர் படிக்கும் இந்தப் பத்திரிகையில் இன்று நான் எழுதுகிறேன்.
எப்போதும் ஏதாவது ஒரு துக்கத்தை, துயரத்தை மூட்டைகட்டி வைத்துக்கொண்டு யாராவது அகப்படமாட்டார்களா,
அவர்கள் மேல் இறக்கி வைக்கலாம் என்கிற சுயபச்சாதாப நிலையில் இருந்து வெளியேறுங்கள். ஊன்றுகோலுக்கு ஏங்காதீர்கள்.
பிறரால் நான் கைதூக்கிவிடப்பட வேண்டியவன் என்ற எண்ணமே ஒரு கெட்ட வார்த்தை.
பலரை உயர்த்தும் பலம் நமக்குள் இருக்கிறது என்று தயவுசெய்து உணருங்கள்.
சென்னையில் முன்னொரு முறை ஒரு குப்பத்தில் குடிசைகள் தீப்பற்றிப் பேரழிவு நேர்ந்தது.
அப்போது ஒரு பெண்மணி எரிகிற தன் வீட்டிலிருந்து பொருள்களை மீட்காமல் பூட்டியிருந்த அடுத்த வீட்டை உடைத்து நிறைய பொருள்களைக் காப்பாற்றினார்.
"உனக்கென்ன பைத்தியமா?'' என்று கேட்டபோது,
"அவர்கள் வீட்டில் அடுத்த வாரம் திருமணம். அதற்காக நிறைய விலை உயர்ந்த பொருள்களை வாங்கி வைத்திருக்கிறார்கள். என் பொருள் போனால் கொஞ்சம்தான் கஷ்டம்.
ஆனால் அவர்கள் குடிசை எரிந்தால் ஏகப்பட்ட கஷ்டம்... திருமணம்கூட நின்று போகும்.
அதனால்தான் அவற்றை மீட்டேன்'' என்றார்.
அவரது தீரம் வெற்றிக்கான விதை.....!!!
நடமாட முடியாமல் சக்கர நாற்காலியில் நகரும் பெரியவர் ஒருவர் உடல் ஊனமுற்றவர்களின் பிரச்சினைகளைக் களைய தமிழ்நாட்டில் ஒரு சங்கம் நடத்துகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா......???
திருமணமே செய்து கொள்ளாத வித்யாகர் ஆதரவற்ற அனைவரையும் ஆதரிக்கும் குடும்பஸ்தனாக "உதவும் கரங்கள்' நடத்துகிறார் தெரியுமல்லவா.
ஒரு குழந்தைகூடப் பெறாத தெரஸா எல்லோருக்குமே மதர் தெரஸா என்பது ஞாபகம் இருக்கிறதா.......???
சாய்வதற்குத் தோள் தேடுகிறவர்கள் சாய்ந்தே போகிறார்கள்.......!!!
இருக்கும்போதே இறந்து விடுகிறார்கள்.
கம்பீரமாக இமயமலை போல் இருப்பவர்கள் காலம் கடந்தும் வாழுகிறார்கள்.......!!!
இமயமலை போல இதய உறுதி கொள்ளுங்கள்.
சாய்வதற்கு ஒரு தோள் தேடாதீர்கள். வெற்றி நிச்சயம்......!!!
#வெற்றி நிச்சயம் என்ற நூலில் திரு.சுகிசிவம் அவர்கள்.