ஒருவன் என்னிடம் வந்து "நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன். நிம்மதியடைய எனக்கு வழி காட்டுங்கள்" என்று எனது கால்களில் விழுந்தான்.
நான், "எனது காலை விடு. உன்னுடைய நிம்மதிக்கும் என்னுடைய காலுக்கும் என்ன சம்மந்தம்? யாரும் கேள்விப்பட்டதே இல்லை. எவ்வளவு நேரம் என் கால்களில் விழுந்து கிடந்தாலும் அங்கே நீ நிம்மதியைக் காணப் போவதில்லை. என்னுடைய கால்கள் உனக்கு என்ன தீங்கு செய்தன? உன்னுடைய இந்த நிலைக்கு என்னுடைய கால்களைக் குற்றம் சொல்லக்கூடாது. நீ குழப்பத்தில் இருப்பதற்கு என்னுடைய கால்கள் காரணமா?" என்றேன்.
அவன் அதிர்ச்சியைடைந்தான். "இப்படித்தான் நீங்கள் பேசுவீர்களா? நான் ரிஷிகேஷ் சென்றேன், அங்கும் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை, அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சென்றேன், அங்கும் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை, அங்கிருந்து திருவண்ணாமலை சென்று ரமணர் ஆசிரமம் சென்றேன், அங்கும் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை, எங்கும் எனக்கு நிம்மதியில்லை. எல்லா இடத்திலும் ஆன்மீகம் என்ற பெயரில் போலியாக நடிக்கிறார்கள். ஒருவர் எனக்கு உங்களிடம் செல்லுமாறு கூறினார். எனவே நான் இங்கு வந்தேன்." என்றான்.
நான், "உடனே இங்கிருந்து சென்று விடு. இல்லாவிட்டால் நீ வெளியே சென்று இங்கும் உனக்கு நிம்மதி கிடைக்கவில்லை என்று புரளி பரப்பிக் கொண்டிருப்பாய்.
முக்கியமான விஷயம் என்னவென்றால், முதலில் நீ குழப்பமடைந்தபோது யாருடைய ஆசிரமத்திற்குச் சென்றாய்? குழப்பமடைவதற்கு எந்த குருவின் உதவியை நாடினாய்? நீ குழப்பமடைவதற்கு யார் உனக்கு பயிற்சி கொடுத்தார்கள்? என்னிடம் வந்தாயா? யாரிடம் சென்று "குருவே நான் குழப்பமடைய விரும்புகிறேன். எனக்கு வழி காட்டுங்கள்" என்று கேட்டாய்?
நீயே குழப்பமடைந்து கொண்டாய், அப்போது உனக்கு நீயே போதுமானதாய் இருந்தாய்! இப்போது நீ நிம்மதியடைய விரும்புகிறாய். இங்கே வந்து மற்றவர்களை குற்றம் சொல்கிறாய்.
நீ நிம்மதியடைய வில்லையென்றால் நான் தான் பொறுப்பா? நான் உன்னை குழப்பமடையச் செய்திருந்தால் அப்போது நான் பொறுப்பு. இதற்கு முன் வந்து என்னைக் கேட்டாயா?" என்றேன்.
அவன், "இல்லை, நான் உங்களைக் கேட்கவில்லை" என்றான்.
"பின் யாரிடம் சென்று கேட்டாய்?" என்றேன்.
"இல்லை, நான் யாரிடமும் செல்லவில்லை" என்று பதில் கூறினான்.
"அப்படியென்றால் நீ குழப்பமாக இருப்பதற்கு நீயே காரணம் என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய். நீ குழப்பமடைய எது காரணம், எப்படி குழப்பமடைந்தாய் என கண்டுபிடிக்க முயற்சி செய். அதைச் செய்வதை நிறுத்து, நீ அமைதியடைவாய்" என்றேன்.
நிம்மதியடைய வழி ஏதுமில்லை. ஆனால் குழப்பமடைய வழிகள் உண்டு.
குழப்பம் தரக்கூடியதை செய்யாமல் இருந்தால் அவன் நிம்மதியாக இருப்பான்.
விடுதலையடைய வழி கிடையாது. ஆனால் சிக்கிக் கொள்ள ஆயிரம் வழிகள் உண்டு. அடிமையாக வழிமுறைகள் உண்டு. அதில் விழாமல் இருந்தால் அவன் சுதந்திரமாக இருப்பான்.
--ஓஷோ--