விவேகம்
முனிவர் ஒருவரிடம் சீரடாகச் சேர மூன்று பேர் வந்தார்கள். அவர்களை மறுநாள்
தம்மை வந்து பார்க்குமாறு கூறினார். மறுநாள் அவர்கள் வரும்போது தமது
காதில் ஓணான் புகுந்து தாம் இறந்துவிட்டதாக சொல்லச் சொன்னார். மறுநாள்
அந்த மூவரும் வந்தபோது முனிவரின் மனைவி அவ்வாறே சொன்னார்.
முதலாமவன், "அவரது ஜாதகப்படி சனிதிசை என்பதால் இப்படி ஆகியிருக்கும்!"
என்று வருத்ததோடு கூறிவிட்டு அங்கே நிற்காமல் சென்று விட்டான்.
இரண்டாமவன், "முனிவரின் முன் ஜென்ம வினைப்படி இப்படி நடந்திருக்கலாம்!"
என்று சொல்லிவிட்டு அவனும் கவலையுடன் சென்று விட்டான்.
மூன்றாமவன், முனிவரின் மனைவி முகத்தை உற்றுப் பார்த்தான். பின்னர்
ஆணித்தரமாக. "முனிவர் உயிரோடுதான் இருக்கிறார்!" என்றான். அதுவரை
வீட்டுக்குள் ஒளிந்து கொண்டிருந்த முனிவர் வெளிப்பட்டார்.
"எப்படிக் கண்டுபிடித்தாய்?" என்று கேட்டார்.
"அய்யா, உங்களின் மறைவினால் வரக்கூடிய துக்கம் உங்கள் மனைவியின்
முகத்தில் கொஞ்சமும் இல்லை. அடுத்தது ஒருவரின் காதினுள் ஓணான் நுழைவது
என்பது நடக்காத காரியம். எனவேதான் அப்படி உறுதியாகச் சொன்னேன் என்றான்.
விவேகத்தோடு சிந்திக்கத் தெரிந்த அவனையே தனது சீடனாக ஏற்றுக்கொண்டார்
முனிவர்.
எனவே வேகம் மட்டுமே முக்கியமில்லை. விவேகமும் கட்டாயம் வேண்டும்.