Thursday 10 June 2021

தூக்கம்

தூங்குவதும் ஒரு வகை தியானமே:

வீட்டில் மின் விசிறி ஓடுகிறது.
தொலைகாட்சி சத்தம் போடுகிறது.
ரேடியோ கத்துகிறது.

இந்த சத்தங்களை தவிர்த்து, வேறு பல வகையான சத்தங்களும் வெளியிலிருந்து கேட்கிறது.

இந்த சத்தங்களில், நாம் மிகவும் முக்கியமான ஒன்றை தொலைத்து விடுகிறோம்.

ஆம். நாம், நம்மை தொலைத்து விடுகிறோம்.

நாம் சத்தமான சூழலிலேயே வாழ்கிறோம் என்பதையே கவனிக்க தவறி விடுகிறோம்.

திடீரென, மின்சாரம் 'கட்' ஆகிவிடுகிறது.

மின்விசிறி ஓடவில்லை.
தொலைகாட்சி, ரேடியோ கத்தி உயிரை வாங்கவில்லை.

எல்லா வகை சத்தமும் நின்றுவிட்ட மாதிரி ஒரு சூழல்.

நன்கு கவனியுங்கள். இவ்வளவு நாள் நாம் கவானிக்காத ஒரு சத்தம், ஒரு புது வகை சத்தம் மெல்லிதாக கேட்கும்.

அந்த சத்தம் வெளிப் பொருளிலிருந்து வரவில்லை.

மாறாக, அது 'வெளியின்' சத்தம்.

நம் காதுக்கு ஒரு இரைச்சல் போல் கேட்கும்.

அந்த இறைச்சலையே கவனித்தால், அது பெருகும். 

அதில் ஒரு லயம் தோன்ற ஆரம்பிக்கும்.

மிகவும் இனிமையான இரைச்சல் அது.

இப்போதைக்கு அதை இரைச்சல் என்றே குறிப்பிடுகிறேன்.

இந்த இரைச்சலை பிடித்துக் கொள்ளுங்கள்.

தியானத்துக்கு இதுதான், பாதை.

தூக்கத்துக்கு இதுதான் தூக்க மருந்து.

ஒரு தடவை இந்த இரைச்சலை நன்கு அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

இரவில் தூங்கும் போது, மின் விசிறி ஓடினாலும் பரவாயில்லை. வேறு சின்ன - சின்ன சத்தங்கள் கேட்டாலும் பரவாயில்லை.

நன்கு கவனியுங்கள் இந்த இரைச்சலும் அங்கு இருக்கும்.

தெளிவாக கேட்கவில்லைஎன்றால், ஒரு பக்க காதை தலையணை மேல் மூடும்படி வையுங்கள். 

இரைச்சல் கேட்கும்.

இன்னும் தெளிவாக கேட்க வேண்டுமென்றால், இரண்டு காதுகளையும் மூடுங்கள்.

படுக்கையில் படுத்தபடி, அந்த இரைச்சலையே கவனியுங்கள்.

நன்கு தூங்கி விடுவீர்கள். 

எப்பொழுது தூக்கம் வந்தது என்றே தெரியாது.

நல்ல ஆழ்ந்த தூக்கம் வந்து விடும்.

சரி, இங்கு என்னத்தான் நடக்கிறது?

அந்த இரைச்சல் சத்தத்தை கேட்கும்பொழுது, கவனிக்கும்பொழுது மனத்திற்கு வேலை குறைகிறது.

வேலை குறைவதை மனம் ஏற்காது. 

மனத்திற்கு எந்நேரமும் வேலை செய்தாக வேண்டும். 

இல்லாவிட்டால் அது செத்துவிடும்; நீங்கள் ஞானியாகி விடுவீர்கள்.

மனம் விடாது. நாம் இரைச்சலை கவனிக்கும்போது , தியானம் செய்கிறோம்.

விழித்திருந்தால்தானே நாம் தியானம் செய்ய முடியும்!

நாம் விழிப்பை முடிவுக்கு கொண்டுவர மனம் நம்மை தூங்க விடுகிறது. 

நாம் தூங்கிவிட்டால், கனவில் அது ஆட்டம் போடலாமே!

எல்லாமே நாம் மனத்தின் தந்திரம்.

இப்போதைக்கு மனத்தின் இந்த இயல்பை நாம், நாம் தூக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில் ஒரு சிக்கல் உண்டு.

நாம் தூங்கும்போது, இந்த இரைச்சலையே கேட்டபடி தூங்கினால், நாம் நம்மை அறியாமல் தியானம் செய்கிறோம்.

தியான நிலையிலேயே தூங்குகிறோம்.

இவ்வாறு தூங்குவதால், உடலுக்கு போதிய ஓய்வு கிடைத்தவுடன் நாம் விழித்துக் கொள்வோம்.

இந்த வகை தூக்கத்தில் வரும் கனவுகள் மிகவும் ஆழத்திலிருந்து வருகின்றன. 

ஆரம்பத்தில் சற்று பயமாக இருந்தாலும், போகப் போகப் பழகி விடலாம். 

அவை வெறும் கனவுகள்தான்.

ஆனால், நாம் தியானத்திற்குள் நுழைய உதவும் கனவுகள் அவை. நம்மை பற்றி நாமே அறியாத பல விசயங்கள் இப்படி ஆழ்ந்த கனவு மூலம் வெளிப்படுகின்றன.

தியானம் செய்வது பிறகு இருக்கட்டும்.

முதலில் நன்றாக தூங்குவோம்.

புற சத்தங்கள் குறைந்தபின், நம் காதில் கேட்கும் அந்த இரைச்சலையே கேட்போம்.

ஆழ்ந்து தூங்குவோம்...

நிம்மதியாக தூங்குவோம்...

தூங்குவதும் ஒரு வகை தியானமே!