Wednesday, 12 February 2020

தியானம்

முயற்சியற்ற தியானம்

ஜென் – மரபில், முயற்சியற்றதன்மை மிகவும் வலியுறுத்தப்படும் அதில்,

குரு சீடனிடம் கூறுவார் – வெறுமனே அமரு. எதுவும் செய்யாதே. – அந்த சீடன்முயற்சிப்பான். முயற்சிப்பதைத் தவிர நீ வேறு என்ன செய்ய முடியும். அந்த சீடன்
வெறுமனே அமர முயற்சிக்கிறான், அவன் வெறுமனே அமர முயற்சிக்கிறான், அவன் எதுவும் செய்யாமலிருக்க முயற்சிக்கிறான். அப்போது குரு தனது கைத்தடியால் அவனது தலையில் அடித்துவிட்டுக் கூறுகிறார் – இதை செய்யாதே. 

நான் உன்னை வெறுமனே அமர முயற்சிசெய்யச் சொல்லவில்லை, அப்போது அது செய்வதாகி விடுகிறது. எதுவும் செய்யாமலிருக்க முயற்சி செய்யாதே, அப்போது அதுவும் ஒரு செயல்பாடாகி விடுகிறது. வெறுமனே உட்கார்.

நான் உன்னிடம் வெறுமனே உட்கார், என்று கூறினால், நீ என்ன செய்வாய். நீ ஏதாவது செய்வாய், அது அதை வெறுமனே உட்காருவதாக இல்லாமல் செய்துவிடும். ஒரு செயல்பாடு நுழைந்துவிடும். நீ முயற்சிசெய்து உட்கார்ந்து கொண்டிருப்பாய், ஒரு இறுக்கம் அங்கிருக்கும். உன்னால் வெறுமனே உட்கார முடியாது. இது வேடிக்கையாகத் தோன்றலாம், ஆனால் நீ வெறுமனே உட்கார முயற்சிக்கும் கணத்திலேயே, அது சிக்கலாகி விடுகிறது. வெறுமனே உட்கார முயற்சிப்பதே அதை சிக்கலாக்கி விடுகிறது. ஆகவே என்ன செய்வது.

வருடங்கள் கழிகின்றன, சீடன் அமர்ந்துகொண்டே இருக்கிறான், தவறுசெய்வதாக குருவால் தண்டிக்கப்பட்டும், குறைகூறப்பட்டும் வருகிறான். ஆனால் அவன் தொடர்ந்து கொண்டே போகிறான், தினமும் அவனுக்கு தோல்விதான், ஏனெனில் முயற்சி அங்கிருக்கிறது. மேலும் நீ குருவை ஏமாற்ற முடியாது. ஆனால் ஒருநாள், பொறுமையோடு உட்கார்ந்திருக்கையில், இப்படி உட்கார்ந்திருக்கிறோம் என்கிற உணர்வு கூட மறைந்துவிட்டது, ஒருநாள் திடீரென அவன் உட்கார்ந்திருக்கிறான் – ஒரு மரம் போல, ஒரு பாறை போல – எதுவும் செய்யாமல். அப்போது குரு கூறுகிறார் – இதுதான் சரியான முறை. இப்போது நீ அதை அடைந்துவிட்டாய். 

இதை நினைவில் வைத்துக்கொள். இதுதான் உட்காரும் முறை.- ஆனால் இந்த முயற்சியற்ற நிலையை அடைய நிறைய பொறுமையும், நீண்ட முயற்சியும்
தேவை. ஆரம்பத்தில் முயற்சி தேவை, செயல்பாடு தேவை, ஆனால்      ஒரு தேவைப்படும் தீமையாக ஆரம்பத்தில் மட்டும் இது தேவை. மேலும் நீ
இதை தாண்டி செல்ல வேண்டும் என்பதை நீ தொடர்ந்து ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். 

நீ தியானத்திற்காக எதுவுமே செய்யாத ஒரு கணம் கண்டிப்பாக வரும் – வெறும் இருப்பாக அங்கு இருப்பாய், அது நிகழும், வெறுமனே நிற்கையில் அல்லது அமர்ந்திருக்கையில் அது நிகழும். எதையும் செய்யாதிருக்கையில், வெறுமனே விழிப்புணர்வோடிருக்கையில், அது நிகழும்.

இந்த எல்லா யுக்திகளுமே உன்னை ஒரு முயற்சியற்ற கணத்திற்கு கொண்டுவர உதவி செய்பவைகளே. உள் நிலைமாற்றம், உள் நிலையுணர்வு, முயற்சியினால் நிகழாது, ஏனெனில் முயற்சி ஒருவகை இறுக்கம். முயற்சியில் நீ முழுவதுமாக தளர்வடைவது சாத்தியமல்ல, முயற்சியே தடையாக மாறிவிடும். இந்த பின்புலத்தை மனதில் வைத்துக்கொண்டு நீ முயற்சித்தால், மெது மெதுவாக அதையும் விடக்கூடிய திறனை நீ பெறுவாய்.

ஓஷோ----

நன்றி கூறல்

உங்களுக்கு நன்றி


நன்றி கூறுதல் ஒரு நல்ல பழக்கம் என்று மட்டும் நினைத்துக் கொள்கிறோம். “தேங்க்ஸ்” என்பதை மேலோட்டமாக உதிர்த்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கிறோம். அதற்கும் மேலாக, நன்றி பாராட்டுதல் எவ்வளவு பெரிய உளவியல் சிகிச்சை தெரியுமா?

நீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்றால் நீங்கள் பிறந்து, வளர்ந்து, படிப்பறிவு, வசதி பெற எவ்வளவு பேர் உதவியிருப்பார்கள் என்று பட்டியல் போடுங்கள். பெற்றெடுத்த அம்மா, அப்பா, வளர்த்த பாட்டி, தாத்தா, மருத்துவர்கள், எழுத்தறிவித்த ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், காதல் கொண்டவர்கள், அக்கம்பக்கத்தினர், வேலைக்குத் தேர்ந்தெடுத்தவர், பயிற்சி கொடுத்தவர், திருமணம் முடிக்க உதவியவர், உங்கள் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், தூர இருந்து ஆறுதலும், அறிவும், அன்பையும் தரும் எண்ணற்றவர்கள்...!

இவர்கள் இல்லை என்றால் இன்று நீங்கள் இந்த கட்டுரையை வாசிக்க முடியாது. இவர்களை எத்தனை முறை நாம் நன்றியோடு நினைக்கிறோம்? மாறாக பல நேரங்களில் இவர்களில் பலரை குற்றம் சொல்கிறோம். எப்படிப்பட்ட நன்றியில்லாத செயல் பாருங்கள்!

பெத்த மனம் பித்து

குறிப்பாக பெற்றவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மேலதிகாரிகள். அதிகமாக தூற்றப்படும் உறவுகள் இவர்கள் எனலாம். ஒரு தாய் படும் வலியும் வேதனையும் எந்த உறவும் பட முடியாது. ஆனாலும் தாயிடம் தான் ஆயிரம் குறைகள் கண்டுபிடிப்போம். நமக்கு அள்ளித் தரும் கைகளைத்தான் அதிகம் கடிக்கிறோம். ‘பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு’ என்ற பழமொழி எவ்வளவு செறிவானது என்று உட்கார்ந்து யோசித்தால் புரியும்.

“எனக்கு பெரிசா எதுவும் எங்கப்பா செய்யலை!” என்று பேசத் துவங்குவதற்கு முன் அப்பா இல்லை என்றால் இந்த உயிரே இல்லை என்பதை உணர வேண்டும். ஒவ்வொரு தகப்பனும் தனக்குத் தெரிந்ததைத் தன்னால் முடிந்ததைத் தன் பிள்ளைக்கு செய்கிறான். தந்தையின் பொருள் உதவி இல்லாமல் யாரும் பிழைத்திருக்க முடியாது.

அதே போல ஆசிரியர்கள். ஒரே நேரத்தில் 50 குழந்தைகளுக்குப் பெற்றோராகவும் போதகராகவும் செயல்படுகிறார்கள். அவர்கள் அறிவில் குறை இருக்கலாம். வழிமுறைகளில் தவறுகள் இருக்கலாம். ஆனால் அவர்கள் பங்களிப்பில்லாமல் யாரும் ஒரு பைசா சம்பாதித்திருக்க முடியாது. உங்கள் விரல் பிடித்து முதல் எழுத்து எழுதிய ஆசிரியர், முதல் வேலை சொல்லித்தந்த ஆசிரியர் வரை எத்தனை ஆசிரியர்கள் நம்மைச் செதுக்கியிருப்பார்கள்? ஆசிரியர்களை கேலி செய்த அளவுக்கு நன்றி கூறியிருக்கிறோமா?

மறைமுக உதவி

செய்கிற வேலை தப்பு என்று எடுத்துரைக்கிற போது வருகின்ற கோபம் இயல்பானதுதான். ஆனால் உங்கள் திறனை நுட்பமாக வடிவமைக்க, உங்கள் தொழிலில் நீங்கள் பிரகாசிக்க உங்கள் மேலதிகாரி தரும் நெருக்கடிகள் அனைத்தும் பாடங்கள்தானே? உங்களை உயரத்துக்கு இட்டுச் செல்லும் முதலாளிகள், மேலாளர்கள், மேலதிகாரிகள் என எத்தனை பேர்? அத்தனை பேரை நினைவுகூருகிறோமா?

பிரிவிலும் மறைவிலும் மட்டும் உணரும் வாழ்க்கைத் துணையின் அருமையை வாழ்கின்ற காலத்தில் உணர்ந்து நன்றி பாராட்டுபவர்கள் எத்தனை பேர்?

இவர்களைத் தவிர நம் வாழ்க்கையில் முகம் தெரியாத பலர் நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கு உதவியிருப்பார்கள். பிரசவ நேரத்தில் உதவுவார் ஆட்டோக்காரர். வேலை கிடைத்தும் ஒருவர் சேராததால் ‘வெயிட்டிங் லிஸ்ட்’டில் அந்த வேலை உங்களுக்கு கிடைக்கிறது. இப்படி நிறைய நடந்திருக்கும்.

அது மட்டுமா? உங்களை ஒவ்வொரு நாளும் பத்திரமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு சேர்க்கும் ஒவ்வொரு ஓட்டுநருக்கும் நன்றி சொல்ல வேண்டுமே? ஒரு விபத்து நடக்க இருக்கையில் அதைத் தடுத்த ஓட்டுநருக்கு நன்றி சொல்வோம். ஆனால், தினம் ஒழுங்காக ஓட்டிச்சொல்லும் ஓட்டுநருக்கு சொல்வோமா?

பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும். எங்கோ வளர்ந்த கீரை உங்கள் தட்டுக்கு வரும் வழியில் எத்தனை கைகளை கடந்து வந்திருக்கிறது? உங்கள் பத்து ரூபாயையும் மீறி எத்தனை பேரின் உழைப்பால் அது உங்களுக்கு கிடைக்கிறது? உங்கள் உணவுக்கு உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்றால் எத்தனை பேர் இருப்பார்கள் யோசியுங்கள்!

உங்கள் பட்டுப்புடவைக்காக உயிர் தந்த பட்டு பூச்சிகள் முதல் உங்களின் அழகு சாதனங்களைத் தயாரிப்பதற்காகச் செய்யப்படுகிற சோதனைக்காக உயிர் விட்ட எண்ணற்ற பறவைகள், மிருகங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நன்றி சொல்லுங்கள்

நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் பல மனிதர்களின் பங்களிப்பு உள்ளது. உங்கள் சொகுசு வாழ்க்கைக்காக பலர் வலியையும் வேதனையையும் அனுபவிக்கிறார்கள். அவர்களை ஒரு முறையாவது நினைக்கிறோமா?

இன்று இந்த பயிற்சியை மேற்கொள்ளுங்கள்: உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உதவிய அனைவரையும் பட்டியலிட்டு ஒவ்வொருவருக்கும் மானசீகமாக நன்றி சொல்லுங்கள். இத்தனை நாள் நினைக்காததற்கு மன்னிப்பு கேளுங்கள்.

அதன் பிறகு உங்கள் உடலுக்கு நன்றி செலுத்துங்கள்.

நன்றி கூறுகையில் நீங்கள் கொடுத்தது எவ்வளவு, எடுத்தது எவ்வளவு என்று புரியும். இந்த உலகில் நீங்கள் மட்டுமே தனியாக எதையும் செய்து விட முடியாது என்று தெரியவரும். பணிவும் அன்பும் பெருகும். அகந்தை அழியும்.

கடைசியாக இத்தனை பேரை உங்கள் வாழ்க்கையில் இணையச் செய்த அந்த மகா சக்திக்கு நன்றி கூறுவீர்கள்.

பெருங்கடலில் சிறு துளி நாம். கடலை உணர்கையில் துளி தொலைந்து போகும். ஆழ்கடலாய் மனம் அமைதி கொள்ளும்.

Monday, 10 February 2020

மாற்றம்

மனசு போல வாழ்க்கை 24: மாறட்டும் மனம்


பெற்றோர்களுக்கு எப்போதும் தங்கள் குழந்தைகள் மீது அளவற்ற அன்பு. அதனால் விரைவில் “சுற்றியுள்ள உலகம் மோசமாகி வருகிறது. நம் காலம் போல எதுவும் இல்லை. இவர்கள் என்ன ஆவார்களோ?” என்ற எண்ணத்துக்குப் போய்விடுவார்கள்.

“இந்தக் காலத்துல குழந்தை வளத்தறது பெரிய வேலை!” என்பார்கள். என்ன பிரச்சினை என்று கேட்பதற்கு முன்னே பெரிய பட்டியல் வந்து விழும்.

மாற்றத்தின் தெளிவு

“ நேரத்துக்கு எழுந்துக்கறது கிடையாது. சதா செல்போன் நோண்டறது. பெரியவங்ககிட்ட பயமோ மரியாதையோ கிடையாது. சொந்தக்காரங்க பத்தின எண்ணமும் கிடையாது. எல்லாத்துலயும் ஆயிரம் சாய்ஸ் வேணும். எதுலயும் திருப்தி கிடையாது. சாப்பிடறது எல்லாம் ஜங்க் ஃபுட் தான். செலவு பத்தி கவலையே கிடையாது.

ஒரு அஞ்சு நிமிஷம் முகம் கொடுத்துப் பேச முடியாது. நினைச்ச மாதிரிதான் எல்லாம் நடக்கணும்னு நினைக்கிறாங்க. சின்ன விஷயத்துக்குக் கூட இடிஞ்சு போயிடறாங்க. இவங்கெல்லாம் நாளைக்கு எப்படி அட்ஜஸ்ட் பண்ணிக் குடும்பம் நடத்துவாங்களோ? நினைச்சாலே பயமா இருக்கு!”

இந்தக் கவலையில் நிறைய நிஜங்களும் நியாயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், காலத்தின் மாற்றம் பற்றிய தெளிவு முதலில் வேண்டும்.

எல்லாக் காலத்திலும் பிள்ளைகள் பொறுப்பற்றவர்களாகப் பக்குவமற்றவர்களாகத் தான் பெற்றோர்களுக்கும் பெரியவர்களுக்கும் தெரிவார்கள். அதே போல உலகில் வரும் மாற்றங்களைப் பயத்தோடும் சந்தேகத்தோடும் அணுகுவது வயதானவர்களின் இயல்பு. உலகில் ஏற்படும் மாற்றங்கள் எதுவும் நல்லதல்ல என்று வயதானவர்கள் நினைக்கக் காரணம் தங்கள் அறிவும் அதிகாரமும் ஆட்டம் கண்டு விடுமோ என்ற அச்சம்தான்.

மாற்றத்தின் பயம்

மாற்றம் வெளியிலிருந்து வருகையில் எதிர்ப்பதும், அவை நல்லதில்லை, நிலைக்காது என்று ஆருடம் சொல்வதும் என்றும் நடந்து வருபவை தான்.

“உலகில் கம்ப்யூட்டர்கள் கொஞ்சம்தான் பயன்படும் ” என்று 50-களில் பேசினார்கள். பேசுகிற முதல் திரைப்படம் வந்த போது, “இந்த நடிகர்களை யார் பேசச்சொன்னது, நடித்தால் போதாது?” என்றார்கள். ரயில் வண்டியைப் பார்த்துப் பயந்து ஏற மறுத்தவர்கள் நம் ஆட்கள்.

கிரஹாம் பெல் தொலைபேசிக்கான தனது காப்புரிமையை விற்க நினைத்த போது, “ஒலியைக் கடத்தும் இந்தக் கருவியால் எந்த வியாபாரப் பலனும் இல்லை” என்று மறுத்தன பிரபல நிறுவனங்கள். தாமஸ் ஆல்வா எடிசன் எதிர்ப்புகளையும், வழக்குகளையும், துரோகங்களையும், தோல்விகளையும் கண்டவர். அடிப்படைக் காரணம், எல்லா மாற்றங்களையும் உலகத்தினர் என்றும் பயத்தோடு எதிர்த்ததுதான்.

சாதகங்கள் பாதகங்கள் இரண்டையும் மாற்றங்கள் ஏற்படுத்தும். ஒன்றை அனுபவிக்கும்போது இலவச இணைப்பாய் மற்றதும் கூடவே வரும். கால்குலேட்டர் வந்தது. பெரிய கணக்குகள் சுலபமாய்த் தவறில்லாமல் கைக்குள் வந்தது. மனக் கணக்கு போய்விட்டது. என் பாட்டி காலத்தில் அனைவருக்கும் மனக் கணக்கு தெரியும். என் பெற்றோர் காலத்திலேயே அது வழக்கொழிந்துவிட்டது.

இந்தத் தொடர்ச்சியில் தான் இன்றைய தொழில்நுட்பத்தையும் அது ஏற்படுத்திய வாழ்வியல் மாற்றங்களைப் பார்க்க வேண்டும்.

கொடுத்தது நாம்தானே!

ரயில் டிக்கெட் வாங்க அரை நாள் லீவு போட்டுவிட்டுக் கியூவில் நின்ற பெற்றோருக்கு இன்று உட்கார்ந்த இடத்தில் செல்போனில் இருக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன. தொழில்நுட்பம் என்பது பூதம் போல. நீங்கள் சொல்வதையும் செய்யும். சொல்லாததையும் செய்யும். எல்லாப் பரிமாற்றங்களும் செல்போனில் நடக்க ஆரம்பித்தால், அப்புறம் நேரத்துக்கு வெளியில் போய்க் காத்திருப்பது குறையத்தானே செய்யும்?

எல்லாக் கியூவிலும் நின்று நின்று பொறுமையும் சகிப்புத்தன்மையும் வந்தது முன்பு. கேட்டது அனைத்தும் உடனே கிடைக்கையில் காத்திருத்தல் எப்படிச் சாத்தியமாகும்? பொறுமையும் மனப்பக்குவமும் எப்படிக் கிடைக்கும்? பிறரிடம் கை நீட்டி கடன் வாங்குவது கேவலம் என்று இருந்த சமூகம் கடன் அட்டையில் காலம் தள்ளுகையில் எப்படிப் பழைய நல்ல பண்புகளைத் தூக்கிப் பிடிக்க முடியும்?

இன்று நம் பிள்ளைகள் வாழும் வாழ்க்கை முறை அனைத்தும் நாம் அருளியவை. எல்லாவற்றையும் கொடுத்துவிட்டுப் பிள்ளைகளை நோவதால் என்ன பலன்?

ஒவ்வொரு அறைக்கும் ஒரு டி.வி. பீட்சா, மாத தவணையில் வண்டி, வீடியோ விளையாட்டுக்கள், விலை உயர்ந்த உடைகள், டி.வியில் பார்த்து, வீட்டுக்குப் பயன்படாப் பொருட்களையும் கூட தருவித்தது நாம். அவர்கள் அனுபவிக்கையில் ஏற்படும் எதிர்மறை விளைவுகளுக்கும் நாம் தானே பொறுப்பேற்க வேண்டும்!

நாம் அவர்களிடம் எதிர்பார்க்கும் ஒவ்வொரு விஷயத்திலும் ஒன்றுக்கு ஒன்று முரணான விஷயத்தை எதிர்பார்க்கிறோம். அதை நீங்களே புரிந்து கொள்ளாத போது எப்படி உங்கள் பிள்ளைகள் புரிந்து கொள்ள முடியும்?

ஒப்படைத்தலே வழி!

முன்பெல்லாம் மாமியார்- மருமகள் சண்டைகளின் காலம். அடுத்த தலைமுறையில் கணவன் மனைவி சண்டை தான் பிரதானம். இன்று பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் சண்டை. ஆக, உறவுச்சிக்கல்கள் என்றும் இல்லாமல் இல்லை.

என்ன செய்யலாம்? உங்களின் நேற்றைய கனவுகளை அவர்களின் நாளைய கற்பனைகள் மேல் திணிக்காதீர்கள். அவர்களுக்கான நேரத்தையும் இடைவெளியையும் கொடுத்து விட்டு, கண்ணியமாக விலகியிருங்கள். அவர்கள் வாழ்க்கையை அவர்கள் மட்டும் தான் தீர்மானிக்கப் போகிறார்கள். தடுமாறுகையில் பின்னாலிருந்து தாங்குவதற்கு நான் இருக்கிறேன் என்று மட்டும் உணர்த்துங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக வெளியேற்றுங்கள். இதனால் உங்களுக்கு ஏற்படும் மன நெருக்கடிகளை என்றாவது சாவகாசமாகப் பேசுங்கள். புரிய வையுங்கள். பணிய வைக்க நினைக்காதீர்கள்.

அவர்கள் மாறணும் என்றால் அதற்கு நீங்கள் முன் மாதிரியாக இருங்கள். கோபப்படாதே என்று அறிவுரை சொல்வதற்குப் பதில் நீங்கள் கோபப்படாமலிருங்கள். “யோகா செய்” என்று அறிவுரை செய்வதை விட நீங்கள் செய்து காட்டுங்கள்.

உங்கள் பிள்ளையை நீங்கள் மட்டும் தான் காக்க வேண்டும் என்ற மமதையிலிருந்து வெளியே வாருங்கள். உங்கள் பிள்ளையை உண்மையில் காக்கும் சக்தி ஒன்று உண்டு. அதனிடம் ஒப்படைப்பதுதான் சிறந்த வழி.

நம்புபவர்கள் அதை இறைமை என்பர். மற்றவர்கள் அதை இயற்கை என்பர்.

தோல்வி- நன்றி

மனசு போல வாழ்க்கை 25: தோல்விகளுக்கு நன்றி!


தோல்விகள் நமக்கான பாடங்கள் என்று தெரிந்தும் தோல்விகளைப் பற்றி நாம் அதிகம் நினைப்பதில்லை. வெற்றியைக் கொண்டாட நினைக்கிறோம். தோல்வியை மறக்க நினைக்கிறோம். தோல்வி தரும் வலிதான் காரணம். தோல்வியை நினைக்கையில் நம்மையும் அறியாமல் சிறுமைப்பட்டுப் போகிறோம். வெளியில் சொல்லாவிட்டாலும் குறுகிப்போகிறோம். இது எனக்கு நடந்திருக்க வேண்டாம் என்று நினைக்கிறோம்.

மூடி மறைத்தல்

காரணம் இல்லாமல் காரியம் இல்லை. தோல்வி வருவது நமக்கு ஒரு பாடம் புகட்டத்தான். அந்தப் பாடத்தை வலிமையாகக் கற்றுத்தரத் தோல்வியால் தான் முடியும். வெற்றியால் வரும் பாடங்கள் அகந்தையை வளர்க்கும். தோல்வி தரும் பாடங்கள் அகந்தையை அழிக்கும்.

நம் அகந்தை அழிய அவ்வளவு சீக்கிரம் நாம் அனுமதிப்போமா?

பொய்யான காரணங்களை அகந்தை உற்பத்தி செய்யும். ஒரு தற்காலிக அமைதியை உருவாக்கி அதில் தோல்வி அனுபவத்தை மூடி வைக்கும். அந்த மூடி மறைத்தலில் தோல்வி நமக்குக் கற்பிக்கும் பாடங்களும் மனதில் ஏறாமல் போய்விடும்.

தோல்வி நிலையானதா?

வெற்றியாளர்களின் சாகசங்களைக் கேட்பதில் 100- ல் ஒரு பங்கு கூடத் தோல்வியாளர்களின் அனுபவங்களை நாம் கேட்பதில்லை. வெற்றி பெற்றவர்களின் பழைய தோல்வி அனுபவங்கள்கூட சாகசங்களாகத்தான் பார்க்கப்படும். நிறைய தோல்விகளைச் சந்தித்தவர்களின் அனுபவங்கள் வளமான வாழ்க்கைப் பாடங்கள். அனைத்துத் தோல்விகளையும் நாமே பெற்றுக் கற்றுக்கொள்வதைவிடப் பிறர் தோல்விகளில் பாடம் கற்பது புத்திசாலித்தனம்.

தோல்வியடைந்தவர்களை உடனே உதாசீனப்படுத்துவது போன்ற மடத்தனம் எதுவுமில்லை. முதலில், வெற்றி, தோல்வியை வைத்து மனிதர்களை மதிப்பிடுவது மலிவான செயல். இரண்டாவது, தோல்வி என்பது நிரந்தர நிலையில்லை. ஒரு வெற்றி கூடச் சமயத்தில் வாழ்க்கையின் உச்சத்துக்கு இட்டுச் செல்லலாம். மூன்று, தோல்வியாளர்கள் தங்கள் பாடங்களைப் பகிரத் தயாராக இருப்பார்கள். ஆறுதல் கிடைக்கக் கூடப் பகிரலாம். ஆனால், வெற்றி பெற்றவர்கள் பலர் தங்கள் தோல்வி அனுபவங்களைப் பகிர மாட்டார்கள். ஆதலால் தோல்விகள் பாடங்கள் என்றால் தோல்வி அடைந்தவர்கள் ஆசிரியர்கள்.

நாம் ஏன் தோல்வி களைக் கண்டு இப்படிப் பயந்து நடுங்குகிறோம்? சிறு வயது முதலே தவறுகளையும் தோல்விகளையும் ஒதுக்கத்தான் சொல்லித் தந்திருக்கிறார்கள்.

வெற்றியின் மீதான வெறி

சரியும் தவறும் கலந்ததுதான் வாழ்க்கை. வெற்றியும் தோல்வியும் இணைந்திருப்பது தான் இயல்பு. ஒன்றை மட்டும் கொண்டவர்கள் யாரும் இல்லை. நம் தெய்வங்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல.

வாழ்க்கையில் வெற்றியை மட்டும் தனியாகப் பிரித்து முழுமையாக உரிமை கொண்டாடிவிடலாம் என்று நினைப்பதினால் தான் இன்று வெற்றியை விற்கும் சந்தைகள் பெருகி விட்டன. இதைப் படி, இதைக் குடி, இதைச் செய், இதை வாங்கு, இங்கு செல், இவரிடம் போ என்றெல்லாம் பிரித்துப் பிரித்துச் சந்தையைப் பிடித்துக் கொண்டதன் காரணம் நமக்கு வெற்றியின் மீது இருக்கிற வெறி தான்.

வாழ்க்கையில் வெற்றியை மட்டும் தனியாகப் பிரித்து முழுமையாக உரிமை கொண்டாடிவிடலாம் என்று நினைப்பதினால் தான் இன்று வெற்றியை விற்கும் சந்தைகள் பெருகி விட்டன. இதைப் படி, இதைக் குடி, இதைச் செய், இதை வாங்கு, இங்கு செல், இவரிடம் போ என்றெல்லாம் பிரித்துப் பிரித்துச் சந்தையைப் பிடித்துக் கொண்டதன் காரணம் நமக்கு வெற்றியின் மீது இருக்கிற வெறி தான்.

படிக்காதவர்கள், நல்ல மதிப்பெண்கள் வாங்காதவர்கள், நல்ல வேலை கிடைக்காதவர்கள், பணம் சம்பாதிக்காதவர்கள், சொத்து சேர்க்காதவர்கள் இவர்கள் எல்லாம் தோல்வியடைந்தவர்கள் என்று நம்ப ஆரம்பித்து விட்டோம். அப்படி என்றால் படிப்பு, வேலை, சொத்து சேர்த்தவர்கள் முழுமையான வெற்றியாளர்களா? பின் ஏன் இவர்களில் பலரிடம் இத்தனை வியாதிகள், விவாகரத்துகள், விவகாரங்கள்? இவையெல்லாம் தோல்விகள் இல்லையா?

நம்பிக்கையே மருந்து

யோசித்துப் பார்த்தால், வெற்றியும் தோல்வியும் அவரவர் மதிப்பீடு சார்ந்தவை. வாழ்க்கையில் எதை நோக்குகிறோமோ அது கிடைத்தால் வெற்றி. அது தவறினாலோ அல்லது தாமதமானாலோ அதைத் தோல்வி என்று சொல்கிறோம். அவ்வளவு தான்.

எந்தத் தோல்வியும் பெரிதல்ல. அதைப் பூதாகரமாக ஆக்கி விடுவது நம் எண்ணங்கள் தான். அந்தந்தப் பருவத்தில் பெரிதாகத் தெரியும் தோல்விகள் காலமும் தூரமும் கடந்து நோக்குகையில் அற்ப விஷயமாகத் தெரியும்.

மதிப்பெண்கள் குறைவதும், காதல் கை கூடாததும் அந்தந்தக் காலத்தில் வாழ்க்கையே ஸ்தம்பிக்க வைப்பவை. ஆனால் அதைக் கடந்தும் வாழ்க்கை ஓடும். அதை விடச் சிறப்பான நிகழ்வுகளும் வாய்ப்புகளும் வாய்க்கும். நாளை பற்றிய நம்பிக்கைதான் நேற்றைய காயங்களுக்கு மருந்து.

தோல்விகளுக்கு நன்றி

மரணம் நிகழ்ந்த வீட்டிலும் காபி குடிக்கிறார்கள். விபத்து நடந்த இடத்தில் சில நிமிடங்களில் போக்குவரத்து சகஜமாகிறது. இயற்கை சீற்றம் நிகழ்ந்த இடம் சுற்றுலா மையம் ஆகிறது. எல்லா இழப்புகளும் ஏதோ ஒரு விதத்தில் ஈடு செய்யப்படுகின்றன.

உங்களுக்கு முன்பாக மலையேறுபவர் தடுக்கி விழும் போது, “அங்கு வழுக்கல் அதிகம். பார்த்துப் போ!” என்று சொல்லாமல் சொல்கிறார். உங்கள் விபத்தைத் தடுக்கிறார்.

உங்களுக்குக் கிடைத்த அனைத்துத் தோல்விகளுக்கும் நன்றி செலுத்துங்கள். உங்கள் தோல்விக்குக் காரணமான அனைவரையும் மனதாரப் பாராட்டி நன்றி சொல்லுங்கள். நீங்கள் செல்லும் பாதையில் உங்களுக்கு முன்பாக சென்று தோற்றவர்கள் அனைவரையும் நினைவு கூறுங்கள்.

வெற்றியைத் தலைக்கு மேலே எடுத்துக் கொள்ள வேண்டாம். தோல்வியை மனதுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டாம். இரவும் பகலும் போல வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக்கொள்வோம்!

Tuesday, 4 February 2020

வெற்றி

*சாணக்கியர் உரைத்த வெற்றிக்கான தந்திர குறுக்கு பாதைகள் பற்றி தெரியுமா?*


மௌரிய பேரரசின் ஒரு முக்கிய பங்காற்றியவர் சாணக்கியர். இன்றைய அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள தக்ஷஷிலாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் சார்ந்த துறையில் பணியாற்றியவர். நீதி சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம் போன்ற சிறந்த படைப்புகளை இந்த உலகதிற்கு அளித்த தத்துவ ஞானி. இவரது படைப்புகள் 1915இல் தான் கண்டுபிடிக்கபட்டது என்பது குறிப்பிடதக்கது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சாணக்கியரின் தந்திரம் பற்றி நம்மில் அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரை போன்ற அறிவுடையோர் தத்துவங்களை ஏற்பதால் நாமும் நம் வாழ்வில் ஏற்றம் பெறலாம்.



இந்த உலகம் ஜெய்த்தவர்களை தான் திரும்பி பார்க்கும். தோற்றவர்களை ஏளனம் மட்டுமே செய்யும். தட்டி கொடுக்க ஒரு கை நமக்கு இருந்தால் போதும் எட்டி பிடிக்க ஒரு வானம் பத்தாது. உன்னால் முடியும் என்ற சொல்லை கேட்டாலே போதும் ஒரு புதிய உத்வேகம் வந்து விடும் மனதிற்குள். அது தான் மாயை. சிறிய தீப்பொறி போதும் காட்டையே சாம்பாலக்க. அது போல தான் சிறிய வழிகாட்டுதல் போதும் அனைத்தையும் நம் வசப்படுத்தி விடலாம்.


 
வாழ்க்கையில் ஜெய்க்க நேர்மை தேவை தான். ஆனால் தந்திர வழிகளும் தேவைப்படுகிறது. யாரையும் பாதிக்காத எந்த தந்திரமும் ஒரு மகத்தான மந்திரமே. இந்த தந்திரத்தை பற்றி சாணக்கியர் என்ன கூறுகிறார் என்று இப்பதிவில் காண்போம் வாருங்கள்.



எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதை மற்றவர்கள் காணும் விதத்திலும் நீங்கள் காணும் விதத்திலும் வித்தியாசம் இருக்குமாறு மாற்றி கொள்ளுங்கள். உங்களுக்கான தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கி கொள்ளுங்கள். யாரையும் பின் தொடராதீர்கள்.

போட்டி என்று வந்துவிட்டால் எப்போதும் மற்றவர்களை சந்தோஷப்படுத்த நினைக்காமல் உங்களை பற்றியும் சிந்திக்க வேண்டும். யாரையும் 100% திருப்தி படுத்திவிட முடியாது. இலக்கை அடையும் போது அங்கு கருணைக்கு வேலை இல்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் உங்களை சுலபமாக இவ்வுலகம் தோற்கடித்துவிடும்.



செல்வம் இல்லாதவர்களை உலகம் துச்சமாக நினைக்கும், அலட்சியபடுத்தும், தூக்கி எரிந்து விடும். செல்வம் பெற்ற ஒருவன் என்ன கூறினாலும் அதை நிஜம் என்று உலகம் நம்பும். செல்வம் படைத்தவன் மென்மேலும் செல்வத்தை சேர்த்து கொண்டே போக முடியும். இல்லாதவன் தன்னை காத்து கொள்ளவே பெருமளவு போராடுவான். எனவே செல்வம் இல்லையென்றாலும் அதை வெளியில் கட்டி கொள்ளாமல் தந்திரமாக இருந்து சாதிக்க வேண்டும். வெற்றி பெற்ற யாவரும் ஒரு காலத்தில் பல அவமானங்களை சந்தித்தவர்களே என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதை சரியான பாதையா? என்று நிச்சயம் ஒரு முறைக்கு ஆயிரம் முறை சிந்தித்து அதன் பின் அதை நோக்கி பயணிக்க வேண்டும். அவ்வாறு பயணிக்கும் பயணத்தில் கண்ணை மூடி கொண்டு குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் அல்லாமல் 360 டிகிரி கோணத்தில் சுற்றியும் உங்களது பார்வை இருக்க வேண்டும். எந்தெந்த வழிகளில் எல்லாம் உங்களுடைய இலக்கிற்கான குறிப்புகள் தென்படுகிறதோ அவற்றையெல்லாம் சேகரித்து கொள்ள வேண்டும். மனதை ஒருமுகபடுத்தி எந்த குழப்பமும் இல்லாமல் பயணிக்க வேண்டும் என்று உரைக்கின்றார்.



நீங்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்காவிட்டால் அதை எண்ணி கவலைபடக்கூடாது. கவலைப்படுவதால் எதுவும் மாறிவிட போவதில்லை. அறிவுடையோர் நிச்சயம் இதை செய்யமாட்டார்கள். முயற்சியை காட்டிலும் விடாமுயற்சியே வெற்றியை தேடி தரும். தொடர்ந்து சிந்தித்து கொண்டே இருங்கள். கவலைபட்டு உடலையும், மனதையும் பலவீனமாக்கினால் வெற்றியை ஈட்ட முடியாது.

உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்ய வேண்டும். நீங்கள் என்ன செய்ய வேண்டும்? செய்யும் அந்த செயலினால் விளைய இருக்கும் விளைவுகள் என்னென்ன? நீங்கள் செய்ய இருக்கும் அந்த செயல் எந்த அளவிற்கு பயனுடையது? இதை பற்றிய தெளிவான அலசல் செய்து கொள்ளுங்கள்.



பிறரை ஏமாற்றுபவர்கள் உங்களையும் ஏமாற்ற தயங்க மாட்டார்கள். அத்தகையவர்களிடம் இருந்து சற்று தள்ளி இருப்பது தான் அறிவு. நமக்கு தெரிந்தே சில தவறுகள் நாம் செய்து விடுவோம். அதற்கு காரணம் விரைவாக யோசிக்கும் ஆற்றல் இல்லாமையே. விரைவாக சிந்திக்க வேண்டும். அறிவாக செயலாற்ற வேண்டும். யோசிப்பதில் நேரத்தை செலவிடுபவர்களால் எதையும் சரியாக செய்ய முடியாது. அந்த தகுதியை நீங்கள் தான் வளர்த்து கொள்ள வேண்டும்.

ஒரு விஷயத்தில் முடிவெடுத்த பின்னர் பின்வாங்க கூடாது. அதனால் விளையும் பிரச்சனைகளை கையாள்வதில் உறுதி கொள்ள வேண்டும். பின் வாங்குபர்களால் வெற்றி பெற முடியாது என்கிறார் சாணக்கியர். உங்களின் பலவீனம் உங்களை தவிர வேறு ஒரு நபருக்கு தெரியவே கூடாது.

ஒரு செயலில் ஈடுபடும் போது நேர்மறை விமர்சனங்கள் மற்றும் எதிர்
மறை விமர்சனங்கள் இரண்டையுமே எதிர்கொள்ள வேண்டும். 
ம், எதிர்மறை விமர்சனங்களால் துவண்டும் போகாமல் உங்கள் வேலை என்னவோ அதை மட்டும் கருத்தில் கொண்டு தொடர்ந்து சென்றால் வெற்றி எளிதில் வந்தடையும்.

உங்களுக்கு கீழ் உள்ளவர்களை எடை போடுவதில் தவறு செய்து விடாதீர்கள். கீழே தானே இருக்கிறார்கள் நம்மை என்ன செய்ய முடியும் என்று ஒருபோதும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. அது வெற்றியின் தூரத்தை அதிகரிக்கும் ஒரு முட்டாள் தனமான செயல் என்று சாணக்கியர் உரைக்கிறார்.



Sunday, 2 February 2020

நிதானம்

"நிதானம்"

ஒரு பைத்தியகாரன் மீது கருணை கொண்ட சீடன்,அவரைத் தனது மடலாயத்து குருவிடம் அழைத்து சென்றான்.

குரு சொன்னார், 
"அவரை அப்படி ஓரமா மூலையில் உட்கார விடுங்கள்.உணவை, நீரை அருகில் வையுங்கள்.ஆனால் உண்ணும் படிக் கூற வேண்டாம்.பசித்தால் அவரே எடுத்து சாப்பிடுவார்.அவருக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம்,நீங்கள் யாரும் கண்டு கொள்ளவும் வேண்டாம்,"* என்றார்.

அவர் கத்துவார், கற்களை வீசுவார்.
ஆனால் அவரை யாரும் அங்கு கண்டு கொள்ளவில்லை.சீடர்கள் அவரவர் வேலைகளைப் பார்த்தனர்.

அந்த பைத்தியக்காரருக்கு எதிர்வினையாற்றுவது இல்லாது போனது.
நாட்கள் நகர்ந்தன,

ஒரு நாள் அமைதியாக குரு முன் வந்த பைத்தியகாரன், "எனக்கும் தியானம் சொல்லித் தருவீர்களா..?" என்று கேட்டான்.

இது இன்றும் திபெத்திய புத்தமடலாயங்களில் நடக்கும் சிகிச்சை முறை.

"எதிர்வினையாற்ற யாரும் இல்லை என்றால் அவர் அமைதியாகி விடுகிறார்",
என்கிறார்கள் திபெத்திய லாமாக்கள்.

"மற்றவர் பார்க்கவில்லை என்றால் பைத்தியகாரத்தனங்கள் வளர்ந்து கொண்டே போகாது"!!!

தர்க்கம் பண்ணாதீர்கள் ..
நம்முடைய பேச்சே தர்க்கத்திற்கு தீனி...
நம் அமைதியே அதற்குப் பட்டினி ..!!

அமைதியாக இருங்கள் ..
எல்லாம் சரியாகும் .
ஒரு வேளை சரியாகவில்லை என்றாலும் பரவாயில்லை ..!!

நீங்கள் சரியாக இருப்பீர்கள் ..

நிதானம் நீளமானது ..!!

வாழ்க நிதானத்துடன் .

அவசரம்





இன்றைய காலசூழலில் எங்கும் அவசரம் எதிலும் அவசரம்.. எல்லாம் அவசரம் என்று அவசர மயமாகி விட்டதை தினம் தினம் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 

அர்ஜன்ட்( Urgent) என்கிற வார்த்தையை அதிக பட்சமாக அனுதினமும் நடைமுறையில் நாம் சொல்லி வருகிறோம் 

பெரும்பாலும் சாதாரணமாக இந்த வார்த்தையை உபயோகித்தாலும் காலப்போக்கில் நவீனங்கள் தலைதூக்கிய பிறகு இன்றைய நிலையில் இந்த வார்த்தை உயிர்பெற்று தற்போதைய வாழ்க்கை முறையாவும் அவசரமாகவே ஆகிவிட்டது என்பதே உண்மை.

இப்படி அவசரத்தால் செய்யும் செயல்களும் அவசரப் போக்காலும் எதையும் நாம் பெரிதாக சாதிக்கப் போவது இல்லை.

 மாறாக பல இழப்புக்களையே சந்திக்க வேண்டி உள்ளது. அவசியத்திற்கு அவசரப்படுவதை ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும்,

அதிகபட்சமாக அவசியம் இல்லாதவைகளுக்கெல்லாம் ஏன் அவசரப்படுகிறோம் என்று யாரும் யோசிப்பதில்லை.

அதிகமாக அவசரப்படுவதால் சில எளிதாக செய்ய வேண்டிய அலுவலக, செயல்கள் கூட அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி இன்னும் காலதாமதமாகிப்போய் விடுகிறது. 

ஆகையால் அவசரத்தால் அதிகமாக ஏதாவது ஒரு வகையில் இழப்புக்களையே சந்திக்க நேரிடுகிறது.

இன்னும் சொல்லப் போனால் பின் விளைவுகளை யோசிக்காமல் அவசரப்பட்டு முடிவு எடுப்பதாலும் அவசரப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசி விடுவதாலும் உறவுகளையும் நல்ல நட்புக்களையும் இழந்துவிட நேரிடுகிறது. 

அப்படியானால் எல்லாம் அவசரத்தால் வரும் இழப்புக்கள்தானே.

ஆம், நண்பர்களே.,

நாம் எதிலும் அவசரப்பட்டு இழப்புக்களை சந்திக்காமல் நிதானமாக செயல்பட்டு நிம்மதியாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். 

அவசரத்தின் தடுமாற்றத்தால் தவறுகள் ஏற்ப்படுவதை தவிர்க்க பொறுமையைக் கடைப்பிடித்து நிம்மதியுடன், மகிழ்வுடன் வாழ வழி வகுத்துக் கொள்வோம்.