Wednesday, 20 December 2017

வார்த்தை

திருடுவதை விட மோசமானது வதந்தி! வார்த்தைகளின் சக்தியை உணர்த்தும் கதை 😥😥😥🙏🙏

`ஒருவரைப் பற்றிய வதந்தியையோ, எதிர்மறையான கருத்துகளையோ ஒருபோதும் பரப்பாதீர்கள்: அது அவர்களின் மரியாதையை மட்டுமல்ல, உங்களின் மரியாதையையும் குறைத்துவிடும்’ என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் பேச்சாளருமான பிரையன் கோஸ்லாவ் (Brian Koslow). `பெருசா விளம்பரமெல்லாம் இல்லை... மௌத் டாக்லேயே அது நல்ல படம்னு சேதி பரவி, நல்லா ஓட ஆரம்பிச்சிருச்சு’ என்று ஏதோ ஒரு படத்தைப் பற்றி, யாரோ பேசுவதைக் கேட்டிருப்போம். நேர்மறையான விமர்சனங்களுக்கே நம் மக்களிடம் இப்படி ஓர் அபாரமான வரவேற்பென்றால், எதிர்மறையான விமர்சனம், கருத்துகள், வதந்தி ஒருவரை என்னவெல்லாம் செய்யும்? நினைத்தாலே மனதை என்னவோ செய்கிறது அல்லவா! மோசமான ஒரு வதந்தியால் ஒருவர் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டிருப்பார், என்னவிதமான அவஸ்தைகளையெல்லாம் எதிர்கொண்டிருப்பார்? பேசுவதற்கு முன் யாருமே இது குறித்து யோசிப்பதில்லை. உண்மையில், நாம் உதிர்க்கும் வார்த்தைகளைத் திரும்ப அள்ளவே முடியாது என்பதுதான் நிதர்சனம். அதனால்தான், `வார்த்தைகளை அளந்து, தெரிந்து பேச வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்கள் பெரியவர்கள். இதை எளிமையாக விளக்குகிறது இந்தக் கதை...

அந்த முதியவர், பணி ஓய்வு பெற்றவர். வீட்டில் தனிமையில் இருந்தார். மனைவி இல்லை. பிள்ளைகளும் இல்லை. படித்தவர், ஒருகாலத்தில் பெரிய பதவியிலிருந்தவர்தான். ஆனால், கொஞ்சம் துடுக்குத்தனம் நிறைந்தவர். மற்றவர்களை எளிதாகக் குறைகூறுபவர். அவருடைய பக்கத்து வீட்டுக்கு ஒருவன் குடிவந்தான். அவனுக்கு `ஆக்டிங் டிரைவர்’ வேலை. யாராவது தங்கள் காரை ஓட்ட டிரைவர் வேண்டும் என்று அழைக்கும்போது போவான். மற்ற நேரங்களில் வீட்டிலிருப்பான். இவருக்கு அவன் மேல் சந்தேகம். திடீரென்று நள்ளிரவில் கிளம்பிப் போகிறான்... காலை 8 மணிக்கு வீடு திரும்புகிறான். சில நாள்களில் மாலையில் போகிறான்... இரவில் வீடு திரும்புகிறான். நேரம் கெட்ட நேரத்துக்குப் போகிறான். இவரிடம் முகம் கொடுத்துக்கூடப் பேசுவதில்லை. இது ஒன்றே அவருக்குப் போதுமானதாக இருந்தது. ஒருவேளை அவன் திருடனாக இருப்பானோ..! இந்த எண்ணம் நாளாக நாளாக வலுப்பெற்றது.

காலை, மாலை வேளைகளில் பூங்காவில் உலாவப் போனபோது, தன் நண்பர்களிடம் அவனைப் பற்றிச் சொன்னார். காய்கறி, பழம் விற்க வருபவர்களிடம் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றிய சந்தேகத்தைச் சொன்னார். `அந்த ஆள் திருடன்’ என்கிற வதந்தி மெள்ளப் பரவியது. ஒருகட்டத்தில், போலீஸாரே அவனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து கொண்டுபோனார்கள். ஆனால், அவன் அப்பாவி, உண்மையிலேயே அவன் ஒரு டிரைவர்தான் என்பது நீருபணம் ஆனதும், அவனை விடுவித்துவிட்டார்கள்.

ஆனால், அந்த டிரைவருக்கு மன உளைச்சல் அதிகமானது. `நான் என்ன திருடனா... என்னைப் போய் கைதுசெய்துவிட்டார்களே... எல்லாம் இந்தப் பக்கத்துவீட்டு பெரியவரால்தானே நடந்தது’ என்கிற கோபமும் ஆற்றாமையும் எழுந்தது. அவன், முதியவரின் மேல் மானநஷ்ட வழக்குத் தொடுத்தான். வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதி விசாரித்தபோது முதியவர் இப்படிச் சொன்னார்... ``நான் யாரையும் காயப்படுத்தவில்லை. வாய் வார்த்தையாக எதையோ சொன்னேன்... அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.’’

டிரைவரோ, தன் தரப்பு நியாயத்தையும், தான் எப்படியெல்லாம் போலீஸால் அழைக்கப்பட்டான் என்பதையும், தனக்கு நேர்ந்த அவமானம் மனதை எப்படியெல்லாம் பாதித்தது என்பதையும், எல்லாம் பெரியவர் பரப்பிய வதந்தியாலும்தான் நடந்தது என்பதையும் எடுத்துச் சொன்னான்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கொஞ்சம் விவரமானவர். டிரைவரின் நிலையும், பெரியவரின் வீம்பும் அவருக்குப் புரிந்தது. ``சரி... இந்த வழக்குக்கான தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைக்கிறேன்’’ என்றவர், முதியவரை அழைத்தார். ``நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள். உங்கள் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றி நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும் ஒரு காகிதத்தில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டுக்கு நீங்கள் காரில்போகும்போது, அந்த பேப்பரை கிழித்துத் துண்டு துண்டாக்குங்கள். போகிற வழியெல்லாம் ஒவ்வொரு துண்டாகப் போட்டுக்கொண்டே செல்லுங்கள். நாளை காலையில் வாருங்கள்’’ என்றார்.

அடுத்த நாள் அந்த முதியவர், டிரைவர் இருவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். நீதிபதி, முதியவரை அழைத்தார். ``நான் சொன்னதுபோலச் செய்தீர்களா?’’

``ஆமாம் ஐயா.’’

``நேற்று நீங்கள் வீசியெறிந்த காகிதத் துண்டுகள் அனைத்தையும் சேகரித்துக்கொண்டு வாருங்கள். அதன் பிறகு தீர்ப்பு சொல்கிறேன்.’’

``அது எப்படி ஐயா முடியும்? அந்தக் காகிதத் துண்டுகளையெல்லாம் காற்று எங்காவது கொண்டுபோய் போட்டிருக்கும். அதைப் போய் எப்படிக் கண்டுபிடிப்பது?’’

``முடியாதில்லையா... அப்படித்தான் நீங்கள் சொன்ன வார்த்தைகளும். திரும்பப் பெற முடியாதவை. ஒருவரின் வாழ்க்கையையே பாதிக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டவை. ஒருவரைப் பற்றி நல்லவிதமாக உங்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லையென்றால், அவரைப் பற்றி எதையுமே சொல்லாதீர்கள். நம் வாய்க்கு நாம்தான் எஜமானனாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு நாம் அடிமைகளாக மாறாமல் இருப்போம். உண்மையில், வதந்தி என்பது ஒரு திருடனைவிட மோசமானது. ஏனென்றால், அது ஒரு மனிதனின் மதிப்பு, மரியாதை, கண்ணியம், நல்ல குணம் அனைத்தையும் களவாடிவிடுகிறது. அவற்றை அந்த மனிதருக்கு யாராலும் திரும்பத் தர முடியாது. ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்... உங்கள் நடை தடுமாறினால், எப்படியாவது பேலன்ஸ் செய்து சரிசெய்துவிடலாம்; உங்கள் நாக்குத் தடுமாறினால், உங்கள் வார்த்தைகளை திரும்ப மீட்கவே முடியாது.’’

இந்த வழக்கின் தீர்ப்பு எப்படியும் இருக்கட்டும்... நீதிபதி முதியவருக்குச் சொன்ன அறிவுரை மிக முக்கியமானது, இல்லையா?