செயல்முறைப் பயிற்சி :
அமைதியான ஒரு அறையில் ஒரு சிறிய விளக்கை மட்டும் எரிய விடுங்கள்.
உங்களுடைய நாற்காலியில் நன்றாக நிமிர்ந்து அமருங்கள். அதாவது உங்களுடைய
முதுகெலும்பின் அடிப்பகுதி நாற்காலியின் பின்புறத்தில் நன்கு
அழுந்தியிருக்குமாறு அமரவும். இரண்டு பாதங்களும் தரையில் முழுமையாகப்
பதியவேண்டும். கால்கள் தரையைத் தொடவில்லையென்றால் சிறு முக்காலியில்
வைத்துக் கொள்ளலாம்.
உங்களுடைய இரண்டு உள்ளங்கைகளையும் தொடையின் மீது வைத்துக் கொள்ளுங்கள்.
கண்களை மூடிக் கொண்டு நான்கு எண்ணும் வரை மூச்சை உள்ளே இழுத்து நான்கு
எண்ணிக்கை வரை மூச்சை நிறுத்திப் பின்னர் நான்கு எண்ணிக்கையில் மூச்சை
வெளியே விடுங்கள். இது போல் மூன்று முறை செய்யுங்கள்; மனம் புத்துணர்வு
அடையும்; அமைதி பெறும். இவ்விதம் தியானம் செய்யும்போது பின்னணியில் மிக
மெலிதான இசையை இசைக்க விடுவது கூடுதல் பலன் தரும்!
இப்போது மூடிய கண்களின் முன் தெரியும் அந்த இதமான வெளிச்சத்தில் மட்டும்
கவனத்தை வைத்து உங்கள் இருக்கையை விட்டு மெதுவாக நடந்து வெளிச்சத்தை
அடைவதாக உங்கள் மனதிற்குள் கற்பனை செய்யுங்கள். அந்த வெளிச்சம் மென்மையான,
அமைதியான வரவேற்பை உங்களுக்கு அளிப்பதாக உணருங்கள்.
நீங்கள் இந்த வெளிச்சத்தின் பாதையைப் பற்றிக்கொண்டு, ஒரு லிப்டில் ஏறுவது
போல் உருவகம் செய்யவும். ஆடாமல்... குலுக்காமல்... மென்மையாக... அந்த
லிப்ட் உங்களை நீங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து மெதுவாக... மிக
மெதுவாக... தூக்கிச் செல்வதை உணருங்கள். உங்களை விட்டு... தரையை
விட்டு... உயரே கிளம்பி... கிளம்பி... உங்களுக்கு அப்பால்... மோன
வெளியில்..
அந்த லிப்டின் கதவுகள் விரிந்து திறக்க, அருமையான இயற்கைக் காட்சி கண்
முன்னே விரியும்! நீங்கள் லிப்டிலிருந்து இறங்கி பச்சைப்பசேல் என்று
விரிந்து கிடக்கும் புல்வெளியையும் இடையிடையே பல்வேறு வண்ணப்பூக்கள்
சிரித்துத் தலையசைப்பதையும் காணுங்கள். உங்களை அழைத்துச் செல்ல அந்த
லிப்டின் கதவுகள் எப்போதும் திறந்தேயிருப்பதால் எப்படித் திரும்புவது என்ற
கவலை வேண்டாம்.
அதோ தூரத்தில் ஒரு ஒற்றையடிப் பாதை... அங்கு ஒரு பெரிய மரம். அதன் அடர்ந்த
நிழலில் ஒர் இருக்கை. நீங்கள் அந்தப் பாதையில் செல்ல...இதமான தென்றல்
உங்கள் மேனியை வருடும். பறவைகளின் இனிமையான கீதங்கள் உங்களைத் தாலாட்டும்.
அருகில் ஓர் ஓடை 'சலசல' என்று சப்தமிட்டு ஓடும். அதோ... அங்கே... தொலைவில்
விளையாடும் குழந்தைகளின் குதூகலக் குரல்கள்...
நீங்கள் பார்த்த அந்த இருக்கையில் அமர்ந்து இந்த இனிமையை நுகருங்கள்.
ஒருவேளை அங்கு எவரேனும் உங்களைச் சந்திக்கலாம். அவர் உங்கள்
வழிகாட்டியாகவோ, உங்களுக்கு உதவுபவராகவோ, உங்களை நேசிப்பவராகவோ
இருக்கலாம். எப்படியோ இந்த இனிய தருணத்தைப் பரிபூரணமாக அனுபவியுங்கள்!
தங்குதடையின்றி ரசியுங்கள்!
இதோ... நீங்கள் புறப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது!.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்!. எந்த முறையில் வந்தீர்களோ அதே முறையில்
திரும்பிச் செல்ல வேண்டும். அந்த வெளிச்சத்தைப் பின்பற்றி திறந்திருக்கும்
லிப்டினுள் ஏறிக் கொள்ளுங்கள். அதன் கதவுகள் தானே மூடி விடும்.
எங்கிருந்து வந்தீர்களோ அதே மேல் தளம் வழியாக... கீழே இறங்கி... மீண்டும்
நீங்கள் அமர்ந்திருந்த அறையை அடைந்து விடுங்கள்.
வெளிச்சத்திலிருந்து விலகி நடந்து நாற்காலியில் அமருங்கள். உங்கள் உடலின்
இருப்பை அறியுங்கள். உங்கள் உடலின் எடையை உணருங்கள். உங்கள் கை, கால்களை
அசைத்து இரத்த ஓட்டத்தைப் புதுப்பியுங்கள். பின்னர் கண்களை மெதுவாகத்
திறவுங்கள். ஒரு வாய் தண்ணீர் குடியுங்கள்!
இந்தப் பயிற்சியை நீங்கள் விரும்பும்போதெல்லாம் செய்யுங்கள். எந்தவித
எதிர்பார்ப்புமில்லாது திரும்பத் திரும்ப பயிற்சியை அனுபவித்து செய்து
வந்தால் ஒரு நாள் நீங்கள் அந்த இருக்கையில் உங்கள் வழிகாட்டியையோ,
உதவியாளரையோ, நேசிப்பவரையோ சந்திக்க நேரிடலாம்!