தியானம்
தியான
முறைகளைக் குறித்து ஓஷோ ரஜனீஷ் அளவுக்கு யாராவது பேசியும், எழுதியும்
இருக்கிறார்களா என்பது சந்தேகமே. ஆரம்ப காலங்களில் வட இந்தியாவில் தத்துவப்
பேராசிரியராகப் பணியாற்றிய அவர் கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய
தத்துவங்களை மிக ஆழமாகப் படித்து பல வருடங்கள் அவற்றைக் கற்பித்தும்
வந்தவர்.
அவருடைய விஞ்ஞான பைரவா தந்த்ரா புத்தகத்தில் 112 வகை தியானங்களை விவரித்திருக்கிறார்.
பண்டைய காலத்தில் பின்பற்றப்படுத்தப் பட்ட பல தியானங்களை புதிய மனவியல்
கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப மாற்றி தன்னுடைய தியான மையங்களில்
அறிமுகப்படுத்தியவர் அவர். அந்த தியான முறைகளுக்கு அமெரிக்கா போன்ற மேலை
நாடுகளில் நல்ல வரவேற்பும் இருந்தது.
”தியான முறைகளை முறைப்படி
கற்று அதைச் சில நாட்கள் செய்து பாருங்கள். உங்கள் தன்மைக்கு ஏற்ற
தியானங்களை மட்டும் முயன்று பாருங்கள். சில நாட்களில் உங்களிடம் எந்த நல்ல
மாற்றத்தையும் ஏற்படுத்தா விட்டால் அது உங்களுக்கேற்றதல்ல. அதை விட்டு
விட்டு அடுத்த தியானத்தை ஆரம்பியுங்கள். மாறாக சில நாட்களில் உங்களுக்குள்
நல்ல மாறுதலை நீங்கள் உணர்ந்தீர்களானால், அதை மிகவும் ஆர்வத்துடனும்,
அக்கறையுடனும் தொடருங்கள் அது பல அற்புதங்களை உங்களுக்குள் ஏற்படுத்தும்”
என்று சொல்கிறார் ஓஷோ.
ஓஷோ ஏராளமான தியானங்களை விளக்கி இருந்தாலும்
ஜென் பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் தியானம் ஒன்று அவர் உபதேசித்த
தியானங்களுள் பிரதானமானது. அந்த தியானத்திற்கு அடிப்படையான சில விஷயங்கள்
என சிலவற்றை ஓஷோ சொல்கிறார்.
முதலில் ஜென் தியானம் செய்யும் இடத்தை
மிகவும் முக்கியமாகக் கருதுகிறார். அது இயற்கையழகு மிகுந்த ஆரவாரமற்ற
அமைதியான இடமாக இருப்பது நல்லது என்கிறார். (பூனே போன்ற பெருநகரங்களில்
இருக்கும் ஓஷோவின் தியான மையங்கள் இயற்கையான அழகான சூழ்நிலைகளுக்குப் பெயர்
போனவை.) அப்படி இல்லா விட்டால் தினமும் வீட்டிலேயே ஒரு அறையில் தொடர்ந்து
தியானம் செய்வது நல்லது என்கிறார். தொடர்ந்து தியானம் செய்யும் அந்த இடம்
தியான அலைகள் நிறைந்திருக்குமாதலால் நாட்கள் செல்லச் செல்ல தியான நிலை
வேகமாகக் கைகூடும் என்கிறார் அவர்.
அடுத்ததாக உட்காரும் விதம்
சௌகரியமாக இருப்பதும் மிக முக்கியம். உடல் அசௌகரியப்பட்டால் மனம் அதையே
எண்ணியபடி இருக்கும், தியானம் கைகூடாது. உடல் பற்றிய நினைவே வராத அளவு
நல்லது என்கிறார்.
ரிலாக்சாக இருப்பது அடுத்த முக்கியமான விஷயம்.
மனதோடு போராடுவது, மனதை அடக்க முயல்வது போன்றவை எதிர்மாறான விளைவுகளையே
ஏற்படுத்தும் என்பதால் அதைக் கைவிடுவது நலம் என்கிறார்.
ஜென்
பௌத்தம் ஒருவனை உள்நோக்கிப் பயணம் செய்யச் சொல்கிறது. உள்ளே நடக்கும்
அனைத்திற்கும் ஒரு பார்வையாளனாக இருக்க வலியுறுத்துகிறது. எண்ணங்களை எந்த
விதமானமான தணிக்கைகளும், தீர்ப்புகளும் இன்றி கவனிப்பது முக்கியம்.
இனி இந்த எளிய தியான முறைக்குச் செல்லலாம்.
1) அமைதியான இடத்தில் சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்.
2) இயல்பாக மூச்சு விட்டு மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் செலுத்துங்கள்
3)
இனி உங்கள் எண்ணங்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் கண்காணியுங்கள். இந்த
எண்ணம் நல்லது, இந்த எண்ணம் கெட்டது என்ற பாகுபாடுகள் வேண்டாம். வெறுமனே
கவனியுங்கள். உங்கள் எண்ணங்களுக்கு நீங்கள் பார்வையாளனாக இருங்கள்.
4)
கூர்மையாக கவனிக்கப்பட, கவனிக்கப்பட மனதின் எண்ணங்களின் எண்ணிக்கை, வேகம்
குறைய ஆரம்பிக்கும். ஒரு பார்வையாளனின் தொடர்ந்த கண்காணிப்பில் எவர்
செயல்களும் சற்று குறையவே செய்யும். மனமும் அதற்கு விதிவிலக்கல்ல.
5)
ஒரு எண்ணம் மனதில் எழுகிறது. அதைக் கவனிக்கிறீர்கள். இன்னொரு எண்ணம்
எழுகிறது. அதையும் கவனிக்கிறீர்கள். எண்ணங்கள் குறையக் குறைய இன்னொரு அழகான
அனுபவமும் நிகழும். அது என்ன தெரியுமா? ஒரு எண்ணம் முடிந்து இன்னொரு
எண்ணம் எழுவதற்கு இடையே உள்ள இடைவெளி. அதையும் கவனியுங்கள். அந்த
இடைவெளியில் தான் மனம் மௌனமாகிறது. அது தான் மனமில்லா நிலை. அது மிக அழகான
அனுபவம்.
6) எண்ணம்-இடைவெளி-எண்ணம்-இடைவெளி என ஒவ்வொன்றையும் எந்த
விமரிசனமும் இன்றி கவனியுங்கள். ஆரம்பத்தில் சில மைக்ரோ வினாடிகள் தான்
அந்த இடைவெளி இருக்கும். உங்கள் தியானம் ஆழமாக ஆழமாக அந்த இடைவெளிகளின் கால
அளவும் அதிகரிக்கும். அந்த மனமில்லா நிலை தான் தியானத்தின் உச்சக்கட்டம்.
7)
ஆனால் இடைவெளிகளையே அதிகம் நீங்கள் எதிர்பார்த்தால் தோற்றுப் போவீர்கள்.
ஏனென்றால் இடைவெளியின் மீது உங்களுக்கு விருப்பம் ஏற்பட்டு விட்டது என்றால்
விருப்பு வெறுப்பற்ற பார்வையாளனாக இருக்க உங்களுக்கு முடியாது. அது முடியா
விட்டால் தியானமும் நிகழாது.
எண்ணம்
எழுவதைக் கவனிப்பதும் ஒன்று தான். இடைவெளி வருவதைக் கவனிப்பதும் ஒன்று
தான் என்கிற சமமான மனோபாவமே இங்கு முக்கியம். சூரிய ஒளியை ரசிக்கிறீர்கள்.
அடுத்ததாக மேக மூட்டம் வருகிறது. அதையும் ரசிக்கிறீர்கள். இதில் நீங்கள்
எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. நிகழ்வதைக் கவனிக்கும் சம்பந்தமில்லாத
பார்வையாளனாக இருக்கிறீர்கள். இது தான் சரியான மனநிலை.
9) தியானம்
ஆழப்பட்ட பின் பேரமைதியை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். விருப்பு
வெறுப்பில்லாத அந்த பார்வையாளனின் மனோபாவம் உங்களிடம் உறுதிப்பட
ஆரம்பிக்கும். அது தியான சமயங்களில் பூரணமடைந்தால் மற்ற நேரங்களிலும்
உங்களிடம் தங்க ஆரம்பிக்கும். தினசரி வாழ்க்கையே தியானம் ஆக ஆரம்பிக்கும்.
ஆரவாரங்களுக்கு நடுவேயும் நீங்கள் தியான நிலையில் இருக்க முடியும். ஜென்
பௌத்தத்தின் குறிக்கோளே அது தான்.
மிக எளிதாகத் தோன்றும் இந்த
தியானத்தைப் பயிற்சியாக செயல்படுத்துகிற போது அந்த அளவு எளிதானதாக
இருப்பதில்லை என்பது அனுபவம். ஆனால் விடா முயற்சியோடு தொடர்பவர்கள்
கண்டிப்பாக இதில் வெற்றி அடைய முடியும்.