முன்னொரு சமயத்தில் எல்லா மனிதர்களுமே கடவுளாக இருந்தனர். எல்லோருக்குமே
அபரிமிதமான சக்தி இருந்தது. இதனால் பலர் தங்களது சக்திகளை மிஸ்யூஸ் செய்ய
ஆரம்பிக்க, கிரியேட்டிவ் ஹெட் ஆன பிரம்மாவிற்கு செம கொடைச்சல் ஆகிவிட்டது.
இதை தடுக்க எல்லா சிறு கடவுள்களையும் அழைத்து ஒரு மீட்டிங் போட்டார். இந்த
சக்தியை மனிதர்கள் எளிதில் கண்டுபிடித்துவிட முடியாதபடி எங்காவது ஒளித்து
வைத்துவிட வேண்டும். ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க என்றார்.
முன் பெஞ்சில் உட்கார்ந்த ஆர்வக்கோளாறு சின்ன கடவுள் ஒன்று சட்டென
"பூமியின் ஆழத்தில் புதைத்துவிடலாம் சார்" என மூஞ்சியில் பல்ப் எரிய
சொன்னது.
முன் பெஞ்சில் குரல் எழுந்தாலே காண்டு ஆகும் கடைசி பெஞ்சு கடவுள்கள்,
வேணாம் சார், நாளை பின்ன எவனாவது விஞ்ஞானி பூமியின் ஆழத்துல துளை போடுற
மிசினை கண்டுபிடிச்சுடுவான், அதனால எங்கயாவது வேற கிரகத்துல ஒளிச்சு
வைச்சுடுங்க என்றனர்.
இதற்கும் எதிர்ப்பு எழுந்தது. சார் மனுச பய சும்மாவே இருக்க மாட்டான் சார்.
ஏதாவது பறக்குற ரதம் செஞ்சு அங்கேயும் போய் ஈசியா எடுத்துடுவான் சார் என
அவையில் சலசலப்பு ஏற்பட ஆரம்பித்தது.
கடைசியில் பிரம்மாவே யோசித்து ஒரு இடத்தில் ஒளித்து வைத்தார். அந்த
சக்தியை மனிதன் கண்டுபிடிக்க மிகவும் சிரமப்படும் இடமாக அது அமைந்தது
ஆம்.. ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும் அந்த அற்புத சக்தியை வைத்து
புன்னகைத்தார் பிரம்மா.