அகங்காரம் போனால், மகிழ்ச்சி கிடைக்கும்!!!
❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
ஒரு நாட்டின் அரசன் "நான் தான் பெரியவன்" என்ற அகங்காரத்தோடு இருப்பவன். ஒரு நாள் அந்த அரசன் வேட்டைக்கு காட்டுச் சென்றான். அப்போது அவன் தியானம் செய்து கொண்டிருந்த ஒரு துறவியைப் பார்த்தான். துறவி கண்ணை மூடி தியானம் செய்யும் போது அவரிடம் சென்று "நான் பல நாடுகளை வென்று என் நாட்டோடு இணைத்திருக்கிறேன். நான் வென்று வந்த செல்வத்தால் என் கஜானா நிரம்பி வழிகிறது. மேலும் அந்தபுரம் முழுவதும் நான் கவர்ந்து வந்த அழகிகள் இருக்கின்றனர். இருப்பினும் நான் சந்தோஷமாக இல்லை. எனக்கு எப்போது சந்தோஷம் கிடைக்கும்?" என்று கேட்டான்.
தியானம் செய்து கொண்டிருந்த துறவி, தியானம் கலைந்ததால் சற்று கோபமாக "நான் செத்தால் உனக்கு சந்தோஷம் கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு, மறுபடியும் தியானத்தில் ஆழ்ந்தார். அதைக் கேட்ட அரசன் "நான் எவ்வளவு பெரிய அரசன். என்னையே அவமானப்படுத்துகிறாயா?" என்று சொல்லி, துறவியை கொல்ல, தன் இடுப்பில் இருந்த கத்தியை உருவினான்.
அப்போது அந்த துறவி "அட மூடனே, நான் என்றால் என்னை சொல்லவில்லை, "நான்" என்ற அகங்காரம் செத்தால் தான் உனக்கு சந்தோஷம் கிடைக்கும்" என்று சொல்லி விளக்கினார்.
இக்கதையிலிருந்து என்ன தெரிகிறதென்றால், "தேங்காயின் கடுமையான ஓடு உடைந்தால் எப்படி சுவையான இளநீர் கிடைக்கிறதோ, அதேப் போல் நம்மிடம் இருக்கும் அகங்காரம் எனப்படும் ஈகோ உடைந்தால் சந்தோஷம் வெளிப்படும்" என்பது நன்கு புரிகிறது.
நன்றி.