Thursday 29 September 2016

சின்ன சின்ன விஷயங்களுக்கும

இந்த சின்ன சின்ன விஷயங்களுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்களேன்...!

எவ்வளவு வேலைகள் இருந்தாலும் சில விஷயங்களில் நாம் கவனம் செலுத்தியே ஆக வேண்டும். அப்படி மூன்று விஷயங்கள் உங்களுக்காக...

1. செயல் :

அலுவலகத்திலோ வீட்டிலோ தினசரி வேலைகள் போக தினம் புதிதாக ஏதாவது முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா? அட அதுக்கெல்லாம் எங்கங்க நேரம் இருக்கு. காலையில அலாரம் அடிச்சுதலருந்து இரவு அடுத்த நாளுக்கான அலாரம் செட் பண்ற வரைக்கும் ஒவ்வொரு நாளுமே இப்படித்தான் போகுது என புலம்புவர்களே அதிகம். இன்று கொஞ்சம் அந்த எண்ணத்தை குறைத்துக்கொள்ளுங்கள். புதுசா கெத்தா ஸ்டைலா நிறைய விஷயம் பண்ணலாம். வழக்கமாக உங்களைத் தவிர ஊரையே எழுப்பிவிட்டு உங்களை எழுப்பும் அலாரத்துக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்களேன். நாளை என்ன நேரத்துக்கு எழ வேண்டும் என்பதை இன்று இரவே உங்கள் மூளைக்கு ஒரு சின்ன மெசேஜ் தட்டி விட்டு உறங்க செல்லுங்கள். முதல் இரண்டு மூன்று நாட்கள் கொஞ்சம் சொதப்பலாம். ஆனால் அதற்குப்பிறகு தினம் அலாரம் இல்லாமலே நினைத்த நேரத்துக்கு எழ ஆரம்பிக்கும்போது காலையிலேயே நல்ல மனநிலையோடு செயல்பட துவங்குவீர்கள். அலுவலகத்துக்கு, கல்லூரிக்கு என நீங்கள் தினம் தினம் செல்லும் வழி தவிர்த்து புதிய வழியில் செல்வது, புதிய நண்பர்களுடன் உணவருந்த செல்வது என சின்ன சின்ன விஷயங்களிலும் ஒரு குட்டி மாற்றத்தை ஏற்படுத்துங்கள். சில நாட்களிலேயே உங்களுக்கான இடத்திலிருந்து வேற லெவலுக்கு உயர ஆரம்பித்திருப்பீர்கள்.

2. உணவு :

நீங்கள் எந்த வேலை செய்வபராக இருந்தாலும் சரி. உங்கள் வேலைக்கும் தினசரி பணிகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் உணவுக்கு கொடுக்கவில்லையென்றால் முன்னெடுக்கும் எந்த வேலையிலும் உங்கள் கவனத்தையும் முழுமையான ஆற்றலையும் செலுத்த முடியாது. இரவு உணவை முடித்துவிட்டு உறங்க சென்று ஏறத்தாழ சுமார் 10 மணி நேரத்துக்கு பிறகு தான் காலை உணவை எடுத்துக் கொள்கிறோம். அந்த நேரத்தில் காலை உணவை தவிர்த்துவிட்டு டீ/காபி மட்டும் அருந்திவிட்டு செல்வது சரியானதல்ல. இதே போல ஒவ்வொரு நாளின் மதிய உணவுக்கும் நல்ல ஊட்டச்சத்துடன் கூடிய உணவை சாப்பிட எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு சிலருக்கு சசாப்பிட்டவுடன் குட்டித் தூக்கம் போடும் நல்ல பழக்கமிருக்கும். பெரும்பாலானோர் அதைத் தவறென்றே நினைத்திருப்போம். சாப்பிட்டவுடன் அரக்க பறக்க ஓடி வேலையில் முழ்கி விடாமல் கொஞ்சம் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுங்கள். தினமும் இரவு உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டு உறங்க செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளையும் சோர்வில்லாமல் கடந்திட உணவு நல்லது வேண்டும்!

3. பேச்சு :

"உங்களுக்கு பேசத் தெரியுமா?"
இப்படி யாராச்சும் உங்ககிட்ட கேட்டா என்ன செய்விங்க. "யாரை பாத்து என்ன கேள்வி கேட்ட, என்ன பார்த்த எப்படி தெரியுது. நான் எவ்ளோ நல்லா பேசுவேன் தெரியுமா? ஸ்கூல் பேச்சுபோட்டில முதல் பரிசெல்லாம் வாங்கியிருக்கேன்" என அந்த இடத்தில் ஒரு சின்ன பட்டிமன்றமே நடத்தி விடுவோம். இப்படி ஒவ்வொரு விஷயத்திலேயும் நீண்ட விளக்கம் அளித்துக் கொண்டிருக்கும் பொழுது நம் நேரத்தை வீணாக்குவதோடு அல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களின் நேரத்தையும் மறைமுகமாக வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை. நம் வாழ்க்கையில் பெரும்பாலான நேரத்தை பேச்சுக்காகவும் பிறருடனான தகவல் பரிமாற்றங்களுக்காகவே செலவழிக்கிறோம்.

நன்றாக யோசித்துப் பாருங்கள் உங்களை சுற்றி இருப்பவர்களிடம் பேசாமலோ, ஒரு சின்ன உதவியை எதிர்பார்க்காமலோ ஒருவரால் இருந்து விட முடியுமா? நிச்சயமாக முடியாது. ஏதாவதொரு வகையில் பேச்சின் மூலமாகவோ,உடல் அசைவுகளின் மூலமாகவோ தகவல் பரிமாற்றத்தை செய்து கொண்டு தான் இருக்கிறோம். வாட்ஸாப்பில் ஒரு மெசேஜ் தட்டி விடுவது கூட தகவல் பரிமாற்றம் தானே. பேச்சும், தகவல் தொடர்பும் ஒரு தனிக்கலை. ஆனால் பெரும்பாலான நேரங்களில் இந்த கலை பலருக்கு கைகூடுவதே இல்லை என்பதுதான் உண்மை. நாம் பேசும் ஒவ்வொரு சொல்லும் நம்மை அடையாளப்படுத்தக் கூடியவை. எப்பொழுதும் நல்ல விதமான சொற்களையே தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். அது உங்களைச் சுற்றி இருப்பவர்களை உற்சாகப்படுத்துவதோடு உங்களையும் நலன் மனநிலையில் வைத்திருக்கும். ஒரு நாளை இனிமையாய் வைத்துக் கொள்வதற்கு நல்ல மனநிலை தானே முக்கியம்...!

-l

புலன்கடந்த ஆற்றல்

🌹 *கேள்வியும் பதிலும்* 🌹

🌴 *புலன்கடந்த ஆற்றல் என்றால் என்ன?*

🍁நாம் புலன்களுக்கு எட்டாத காரியத்தை செய்யும்போது அதை நாம் சித்து என்றும் புலன்கடந்த ஆற்றல் என்றும் கூறுவோம்.

🍁உதாரணமாக தண்ணீரில் நடப்பது, காற்றில் எழும்புவது, கண்ணை கட்டிக்கொண்டு படிப்பது, எங்கோ நடப்பதை இங்கிருந்தே பார்ப்பது, மனதை படிப்பது இப்படி பல உள்ளது.

🍁இவை எல்லாமே மனித மூளையின் உச்சபட்ச செயல்பாடே ஒழிய வேறில்லை. நம் மூளையின் பயன்பாடு குறிப்பிட்ட எல்லையை தாண்டிவிட்டால் அவை புலன்களுக்கு கட்டுபடாது.

🌴 *அதை எப்படி வளர்த்துக் கொள்வது?*

🍁எண்ண ஓட்டங்கள் குறைய குறைய மூளையின் செயல்திறன் அதிகரித்து கொண்டே போகும்.

🍁Extra Sensory Perceptionஐ எல்லோராலும் வளர்த்து கொள்ள முடியும் ஆழ்ந்த தியானத்தால்.

🌴 *ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது?*

🍁நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

🍁ஆம் நாம் படுத்தபின்  உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள்தான் அவை.

🍁அப்போது நாம் எதைப்பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்.

🍁தயவுசெய்து இனி படுத்தபிறகு அந்த நேரத்தில்  பிரச்சனைகளை பற்றி யோசித்துவிடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகிவிடும்.

🍁உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்துவிட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.

🍁அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்.

🌴 *ஆழ்மன சக்தியை எது எதுக்கு பயன்படுத்த முடியும்?*

🍁நாம் கற்பனை செய்யும் அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது.

🍁சாத்தியமாக வாய்ப்பு இல்லாத எதையும் நீங்கள் யோசிக்கவே முடியாது. அதனால் நல்லவை அனைத்திற்கும் ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாம்.

🍁வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களே.

🍁ஆம் நாம், பூமி,  இயற்கை என அனைத்தும் அந்த நேரத்தில் உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும். பிரம்மம் பூமியில் கலக்கும் அதாவது முகூர்த்தம் ஆகும் நேரமே பிரம்ம முகூர்த்தம், வாழ்க வளமுடன்✋🏼

🍂 *யாஷி பிரசாத்* 🍂

Tuesday 27 September 2016

வல்லவனுக்கு வல்லவன

புதிர் ! புதிர் ! புதிர் !

ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் பரம ஏழை. மற்றொருவன் பணக்காரன். பணக்காரனிடம் அவன் தம்பியாகிய ஏழை ஒரு பசுவைக் கேட்டான். அண்ணன் பசுவைக் கொடுப்பதற்கு முன், "என் நிலத்தில் நீ தினமும் வந்து ஓராண்டு உழைக்க வேண்டும்!'' என்றான்.

அவனும் ஒத்துக் கொண்டான். பசுவை வாங்கிக் கொண்ட இளையவன், தான் ஒத்துக்கொண்டது போல் அண்ணன் நிலத்தில் ஓராண்டு முழுவதும் உழைத்தான். ஓராண்டு முடிந்தது. தம்பி அண்ணனிடம் வேலைக்குச் செல்லவில்லை. மறுநாளே பசுவை திருப்பிக் கேட்டான் அண்ணன்.
"ஓராண்டு உன் நிலத்தில் உழைத்தேன் அல்லவா பசு எனக்குத்தான்!'' என்றான்.

மூத்தவன், "அதெப்படி முடியும்? ஓராண்டு காலம் நீ என் பசுவிடம் பால் கறந்து பலனை அனுபவித்தாய் அல்லவா? அதனால் இரண்டிற்கும் சரியாகிவிட்டது!'' என்றான்.

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒரு பிரபுவிடம் சென்றனர். வழக்கை விசாரித்த பிரபு, அவர்கள் இருவருக்கும் மூன்று புதிர்களைக் கொடுத்து, "இதற்குச் சரியான பதில்களை யார் சொல்கிறீர்களோ அவர்களுக்குத்தான் பசு!'' என்று கூறி புதிரைச் சொன்னார்.

"முதல் புதிர், மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது? இரண்டாவது புதிர், மனிதனுக்கு மிக மகிழ்ச்சியைத் தருவது எது? மூன்றாவது புதிர், அதிக விரைவாகச் செல்வது எது? இந்த மூன்று புதிர்களுக்கும் நாளை விடை கூறுங்கள்!'' என்றார்.

இருவரும் வீட்டிற்கு வந்து மூளையைக் குழப்பி சிந்தித்தனர்.

மறுநாள் காலை பிரபுவைச் சந்தித்தனர். மூத்தவனைப் பிரபு அழைத்து, "என் புதிருக்கு விடை சொல்!'' என்றார். "மேன்மை தங்கிய பிரபு அவர்களே! ஒரு மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது என்று கேட்டீர்கள். அதற்குச் சரியான விடை பன்றிக்கறி. கொழுத்த பன்றிக் கறியைச் சாப்பிட்டால் வயிறு நிரம்பும். பல மணி நேரம் பசிக்காது.

"இரண்டாவது, மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தருவது எது என்று கேட்டீர்கள். அதற்கு விடை பணம். பணம் பெட்டி நிறைய இருக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது தெரியுமா? பணம் குறையக் குறைய மகிழ்ச்சியும் குறையும்.

"மூன்றாவதாக, அதிவிரைவாகச் செல்வது எது என்று கேட்டீர்கள். அதுற்குச் சரியான விடை வேட்டை நாய். வேட்டை நாய்கள் விரைவாக ஓடி முயல்களைக்கூட பிடித்து விடுகின்றனவே!'' என்று சொல்லிவிட்டு பிரபுவைப் பார்த்து, "பசு எனக்குத்தானே!'' என்று கேட்டான்.
"முட்டாளே! நீ சொன்ன அனைத்தும் அபத்தமான பதில்கள்!'' என்றார் பிரபு.

இளையவன் அழைக்கப்பட்டான்.

"நம் வயிற்றை நிரப்புவது பூமி. பூமி தாயிடம்தான் நாம் உண்ணும் தானியங்களும், கிழங்குகளும் கிடைக்கின்றன. அந்த உணவால்தான் விலங்குகளும், பறவைகளும் வாழ்கின்றன. இரண்டாவதாக ஒரு மனிதனுக்கு அதிக மகிழ்ச்சி தருவது தூக்கம். தூக்கத்திற்காக விலையுயர்ந்த செல்வத்தையும் மனிதன் விட்டுவிடுவான்.

"மூன்றாவது, அதிவிரைவாகச் செல்வது நமது சிந்தனை ஓட்டம். அது நாம் விரும்பியபோது விரும்பிய இடத்தில் கொண்டு போய்ச்சேர்க்கும்!''

"இவையே சரியான விடைகள். இந்தப் பசு உனக்கே!''

பசுவைக் கொடுத்தபின் பிரபு கேட்டார். "இந்தப் புதிர்களுக்கு உனக்கு விடை கூறியது யார்?'' என்றார்.

"என் மகள் மரூஸ்யா!''

"அவள் என்ன அவ்வளவு விவேகியா?''

"ஏதோ கொஞ்சம்!''

"என் அளவிற்கு அவளுக்கு அறிவு இருக்கிறதா என்பதை பரீட்சை செய்து பார்த்து விடுகிறேன்!''

பிரபு பத்து அவித்த முட்டைகளை அவனிடம் கொடுத்து, "இதோ இந்த பத்து அவித்த முட்டைகளையும் உன் மகளிடம் கொடுத்து, ஒரு கோழியினால் அடைகாக்க வைத்து, பத்துக் குஞ்சுகளை ஓர் இரவிற்குள் பொரிக்க வைத்து அதே குஞ்சுகளை அதே இரவில் கோழியாக்கி, முட்டை போடவைத்து, பத்து முட்டைகளில் மூன்றை எடுத்து அடையாக்கி நாளைக் காலை உணவிற்கு எனக்குக் கொண்டுவா!'' என்றார்.

தன் மகள் மரூஸ்யாவிடம் சென்று அதை அப்படியே ஒப்புவித்தார் அவளது தந்தை. தன் மகள் இந்தப் புதிருக்கு விடை எப்படிச் சொல்லப்போகிறாள் என்று கவலைப்பட்டார். ஆனால், அவளோ எதிர் புதிர் போட்டாள். தன் தந்தையிடம் வேக வைத்த துவரைகள் அடங்கிய ஒரு பானையைக் கொடுத்து, "இதில் உள்ள துவரையை நிலத்தில் விதைத்து, முற்றியவுடன் அறுத்து எனது கோழிக் குஞ்சுகளுக்கு உணவாக தயாராக வைக்கும்படி கூறுங்கள்!'' என்றாள்.

அவளுடைய தந்தையும் அவ்வாறே பிரபுவிடம் சென்று சொன்னார். துவரையைப் பார்த்த பிரபு அவற்றை நாய்க்குப் போட்டுவிட்டு, சணல் தண்டு ஒன்றைக் கொடுத்து, "இதை ஊறவைத்து காயவைத்து நூறு ஜெகமுள்ள துணி தயாரிக்கச் சொல்!'' என்றார். ஆனால், அவளோ அதற்குப் பதிலாக மிக மெல்லிய குச்சி ஒன்றைக் கொடுத்து, "இதிலிருந்து நூலை நூற்பதற்கு ஒரு ராட்டினமும், கதிரும் செய்து தரும்படிக் கூறுங்கள்!'' என்றாள்.

அவளது அறிவின் ஆழத்தைக் கண்ட பிரபு, "உன் மகளை நாளை என்னை வந்து பார்க்கச் சொல். ஆனால், அவள் நடக்கவோ, சவாரி செய்யவோ கூடாது. வெறுங்காலுடனோ, செருப்புடனோ வரக்கூடாது. பரிசுடனோ, பரிசின்றியோ வரக்கூடாது. இது கடுமையான உத்தரவு!'' என்றார்.

மறுநாள் பனிச்சறுக்கு வண்டியில் வெள்ளாட்டைப் பூட்டி, ஒரு காலில் மட்டும் செருப்பு அணிந்து, முயல் ஒன்றையும், சிட்டுக்குருவி ஒன்றையும் தெரியாமல் எடுத்துச் சென்றாள் மரூஸ்யா. அவள் மிகுந்த புத்திசாலித்தனத்துடன் வருவதைக் கண்ட பிரபு, அவள் மீது நாய்களை ஏவினார். பதிலுக்கு இவள் முயலை வெளியே விட, நாய்கள் முயலைத் துரத்தின.

"இதோ உங்களுக்கு ஒரு சிறிய பரிசு!'' என்று சிட்டுக்குருவியைக் கொடுத்தாள். அது அவரது கையில் சிக்காமல் பறந்துவிட்டது. தான் சொல்லியபடியே வந்துவிட்ட அவளை நினைத்துப் பெருமைப் பட்டார் பிரபு. அப்போது இருவர் வழக்கு ஒன்றைக் கொண்டு வந்தனர்.

"நாங்கள் இருவரும் அடுத்தடுத்து இரு குதிரைகளை ஓர் இரவில் கட்டி இருந்தோம். இரண்டு குதிரைகளும் அன்றிரவே குட்டிகளை ஈன்றன. அவனுடைய குதிரையின் குட்டி இறந்துவிட்டது. என்னுடைய குட்டியைப் பார்த்து அவனுடைய குதிரைக் குட்டி என்கிறான்!'' என்றான் ஒருவன். அடுத்தவனைக் கேட்டதற்கு அவனும் அவ்வாறே பதில் சொன்னான்.

பிரபு இரு குதிரைகளையும் தனித்தனியே கட்டச் சொல்லி, குட்டியை விடச்சொன்னார். குட்டி இரு குதிரைகளிடமும் செல்லாமல் தனியே ஓடிவிட்டது. அந்தத் தீர்ப்பை அவர் மரூஸ்யாவிடம் கேட்டார். மரூஸ்யா குட்டியைக் கட்டச் சொல்லி குதிரைகளை அவிழ்த்துவிடும்படி கூறினாள். அவ்வாறே செய்தனர். தாய்க்குதிரை தன் குட்டியைத் தேடிக்கொண்டு ஓடிவந்தது.

பிரபுவின் தலைக்கனம் குறைந்தது. தன்னைவிட மரூஸ்யா புத்திசாலி என்று ஒப்புக்கொண்டார். அவளுக்கு வெகுமதியளித்துப் பாராட்டினார்.

நீதி: வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

ஏன் அழ வேண்டும்?

💠💠💠💠💠💠💠💠💠

1. உதவி கேட்கப் படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்.

நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.
நம் வழி மிகச் சிறந்த வழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக் கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப் பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம். இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது. ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார்.

மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது. எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் *மனதை அமைதியாக வையுங்கள்*!

2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!

மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப் படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக் குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாகக் காரணமாகிறது. இத்தகைய அவமானப் படுத்துதல் அல்லது இரணப் படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவு படுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக் குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? *மறப்போம்; மன்னிப்போம்*; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.

3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!

இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் - அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் அவருக்கு உதவ முடியாமல் இருக்கலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டு பிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காகக் கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.

4. பொறாமை கொள்ளாதீர்!

வயிற்றெரிச்சல் (பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சில வேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காண முடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது!

நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆக வேண்டும் என்று விதிக்கப் பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கவில்லை என்றால், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!

5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!

உங்கள் சுற்றுப் புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப் போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப் போகும் நிலையையும் காண்பீர்கள்.

6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!

இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப் படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர் கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாகப் பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.

7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!

இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்க வல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களின் புறச் செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடைய மாட்டீர்கள். உலகத்துடனான (பொருள்.முதல் வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக *மன அமைதியை உருவாக்கும்*.

8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்

தியானம் - உள்மன ஆய்வு - மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதி உயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக் கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.

சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம்.  ஒரு வேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.

9. உள்ளத்தை வெற்றிடமாக ஒரு போதும் விடாதீர்கள்!

வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிக்களம்! எல்லாத் தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுது போக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிகப் பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுது போக்குகளில் பெரும் பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் கடவுளின் பெயரை உளப் பூர்வமாக கண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.

10. தள்ளிப் போடாதே; எதற்கும் வருந்தாதே!

"இது என்னால் முடியுமா? முடியாதா?" என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள்.

முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது - மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?

💠💠💠💠💠💠💠💠💠