Tuesday 30 March 2021

ஒநாய்

நன்றி 🙏(  பகிரப்பட்டது)

🐺ஒரு பிரியாணி விருந்தில்கலந்து கொள்கின்றோம்.

🐺முதலில் அனைவருக்கும் சிக்கன் ப்ரை இரண்டு இரண்டு துண்டுகளை இலையில் வைக்கிறார்கள். 

🥺உங்கள் இலைக்கு வரும் போது வைப்பவர் ஏதோ நினைவில் வேகமாக மிகச்சிறிய துண்டுகளை வைத்து போகிறார். 

😦”நீங்கள் தம்பி இன்னொன்னு வை” என்று சொல்லும் போதே அவர் அவசரத்தில் அந்த இடத்தை விட்டு விலகி வேறு வேலைக்கு போகிறார். 

அதன் பிறகு வரும் பிரியாணியை நீங்கள். 

1. சுவைத்து சாப்பிடுவீர்களா ?
2. சுவைக்காமல் சாப்பிடுவீர்களா ? 

சுவைத்து சாப்பிட்டால் நீங்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கையை அர்த்தமாக வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். 

உங்களுக்குள் இருக்கும் சிகப்பு ஒநாயை புறக்கணித்து நீல ஒநாய்க்கு தீனி போட்டு வளர்க்கிறீர்கள் என்று அர்த்தம்.

சுவைக்காமல் ஏதோ அவமானம் நடந்து விட்டது மாதிரி சாப்பிட்டால் நீங்கள் வாழ்க்கையை வீணடித்து மற்றவர்களையும் கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்குள் இருக்கும் சிகப்பு ஒநாய்க்கு தீனி போட்டு எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஒருவருடைய மிக மோசமான செயலால் இன்னொருவர் பாதிக்கப்பட்டிருப்பார். 

பாதிக்கப்பட்டவர் என்னிடம் பேசும் போது “அவன் புத்திக்கெல்லாம் நல்லா நாசமா போவான் பாரு” என்று சாபமிடுவது மாதிரி பேசினால் ஒருமாதிரி ஆகிவிடுவேன்.

“ச்சே ஏன் அப்படி சொல்றீங்க. விடுங்க. அப்படி சொல்லாதீங்க” என்பேன். இப்படி சொல்லாமல் என்னால் இருக்கவே முடியாது. 

இது அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டது என்று நினைப்பேன். 

அப்பா யாரையும் வெறுத்து பார்த்ததே கிடையாது. 

ஒருமுறை அவசரமான பணத்தேவைக்கு அப்பா அம்மாவின் 12 சவரன் நகையை ஒருவரிடம் அடமானம் வைத்தார். 

அவர் அவசரத்தை பயன்படுத்திக் கொண்டு கொஞ்சம் பணமே கொடுத்தார். பின்னர் அப்பா நகையை மீட்க போன போதெல்லாம் பார்ப்பதை தவிர்த்தார். 

ஆறுமாதங்கள் பிறகு அவருடைய அவசரத்தேவைக்கு இன்னொருவரிடம் அடமானம் வைத்து விட்டதாக சொன்னார். 

பல வருடங்கள் அலைந்தாலும் அப்பாவுக்கு அவர் நகையை கொடுக்கவே இல்லை. 

நினைத்திருந்தால் நாலு ஆட்களை திரட்டி சென்று கேட்டிருக்கலாம். ஆனால் அப்பா அதை நினைத்துக் கூட பார்க்கவில்லை. 

வீட்டில் அம்மா அழுத்தம் கொடுக்கும் போதும் ”பார்ப்போம் பார்ப்போம் தந்திருவாரு” என்றுதான் சொல்லி பார்த்திருக்கிறேனே தவிர அவன் நாசமாய் போவான். நல்லாயிருக்க மாட்டான். பாம்பு கொத்தும் ரீதியில் பேசி பார்த்ததே கிடையாது. 

நாங்கள் மித மிஞ்சிய பணக்கஷ்டத்தில் இருக்கும் போது கூட அப்பா தூங்குவதை கவனிப்பேன். 

மிக நிம்மதியாக தூங்கி எழுவார்.

அவ்வப்போது உடனுக்குடன் பிறரை மன்னிப்பவர்களால் மட்டுமே அப்படி தூங்கமுடியும்.

இது அமெரிக்க பழங்குடியின கதையின்படி

ஒவ்வொரு மனதிலும் இரண்டு ஒநாய்கள் இருக்கிறதாம். இரண்டுக்கும் சண்டை நடக்கும். எப்போதும் ஒரு மோதல் இருந்து கொண்டே இருக்குமாம். 

சிகப்பு ஒநாய் பொறாமை, கோபம். வெறுப்பு, ஆதிக்கம் என்று இருக்கிறது. 

நீல ஒநாயோ அன்பு, அருள், சகோதரத்துவம், மன்னித்தல் என்று இருக்கிறது. இந்த இரண்டு ஒநாய்களும் ஒன்றுக்கொன்று நம் மனதில் மோதிக் கொண்டே இருக்கின்றன.

இவை இரண்டில் எந்த ஒநாய் வெல்லும் ? நாம் எந்த ஒநாய்க்கு தீனி போடுகிறோமோ அதுவே வெல்லும். 

தப்பு சரி, நியாயம் அநியாயம் தாண்டி ஏதோ ஒருவிதத்தில் அதிக வெறுப்பு, பொறாமை, எரிச்சல் கொண்டிருக்கும் போது நாமும் அந்த சிகப்பு ஒநாயாகவே மாறிவிடுவோம். 

அப்படி மாறும் போது வாழ்க்கையில் நிம்மதியே இல்லாமல் போய்விடும். 

ஒன்றுமில்லை ஒரு விழாவுக்கு போகும் போது உங்கள் மனநிலையை கவனித்துப் பாருங்கள். 

நீங்கள் சிகப்பு ஒநாய்க்கு தீனி போடுகிறீர்களா? 
அல்லது நீல ஒநாய்க்கு தீனி போடுகிறீர்களா? என்பதை கண்டுகொள்ள முடியும்.

- என்னை கண்டுகொள்ளவில்லை

- சாப்பாடு நல்லாயில்லை

- ரொம்பத்தான் ஒவரா ஸீன் போடுறாங்க

- நான் விழா எடுக்கும் போது இத விட நல்லா செய்து காட்டுறேன் பாரு.

- நீயா வந்து பேசினா நா பேசுவேன். இல்லன்னா பேச மாட்டேன்.

இப்படி எல்லாம் சிகப்பு ஒநாய்க்கு தீனி போடுபவர்களும் உண்டு.

- எல்லாரும் எவ்ளோ மகிழ்ச்சியா இருக்கங்க ( ரசனை)

- சாப்பாடு அருமை

- விழா கொண்டாட்டம் அருமை

- நாம விழா எடுக்கும் போதும் இப்படி எல்லாரையும் ஹேப்பியா வைச்சிக்கனும்

- அவுங்க தெரியாம இருக்காங்க போல இருக்கு. நாம போய் பேசுவோம்.

இப்படி எல்லாம் நீல நிற ஒநாய்க்கு தீனி போடுபவர்களும் உண்டு.

சிகப்பு ஒநாய்க்கு தீனி போடுபவர்களுக்கு எவ்வளவு புகழ், பணம், பதவி வந்தாலும் வாழ்க்கை துன்பமாகவே இருக்கும்.

நீல நிற ஒநாய்க்கு தீனி போடுபவர்கள் எந்த சூழலிலும் மகிழ்ச்சியாக மன நிம்மதியாக இருப்பார்கள்.

வீட்டில் வளரும் சிறார்களிடம் இந்த இரண்டு ஒநாய்கள் பற்றியும் அடிக்கடி பேசிக் கொண்டிருங்கள்.

ஒருவேளை மாற்றங்கள் நிகழலாம். அவர்கள் மன ஆரோக்கியத்தோடு வளர வாய்ப்பு அதிகமுண்டு.

உங்களுக்குள் இருக்கும் சிகப்பு ஒநாயையும் நீல ஒநாயையும் கண்காணித்து கொண்டே இருங்கள்.