Tuesday 11 July 2017

அழகான வரிகள

*அழகான வரிகள்*.

1, அறிமுகமற்றவர்களின் பார்வையில் நாமெல்லோரும் சாதாரண மனிதர்கள்.

2,பொறாமைக்காரரின் பார்வையில் நாமனைவரும் அகந்தையாளர்கள்.

3,புரிந்து கொண்டோரின் பார்வையில்
நாம் அற்புதமானவர்கள்.

4,நேசிப்போரின் பார்வையில்
நாம் தனிச்சிறப்பானவர்கள்.

5,காழ்ப்புக் கொண்டவர்களின் பார்வையில் நாம் கெட்டவர்கள்.

ஒவ்வொருவருக்கும் என தனியான பார்வை உண்டு.

ஆதலால் -
பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட சிரமப்படாதீர்கள்.

இறைவனின்  திருப்தியே உங்களுக்குப் போதுமானது.

மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு.
இறைவனை திருப்திப்படுத்துதல் என்பது தள்ள முடியாத இலக்கு.

எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!
அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்!👍

Monday 10 July 2017

நோய்களுக்கு எதிராக ஆழ்மன சக்தி

நோய்களுக்கு எதிராக ஆழ்மன சக்தி

மருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணமாக்க முடிவது பண்டைய காலத்தில் இருந்தே உலகில் பல நாடுகளிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து போன்ற தெய்வப்பிறவிகள், மகான்கள், யோகிகள், சித்தர்கள், அபூர்வ சக்தி படைத்தவர்கள் இப்படி குணமாக்கினார்கள் என்று பண்டைய பதிவுகள் சொல்கின்றன. பிற்காலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்ற ஜெர்மன் மருத்துவர் மருந்துகள் இல்லாமல் கும்பல் கும்பலாக ஒரு கட்டத்தில் நோயாளிகளைக் குணப்படுத்தினார் என்பதை இத்தொடரில் 18 ஆம் அத்தியாயத்தில் விவரமாகப் பார்த்தோம்.

இக்காலத்திலும் மருந்தில்லா மருத்துவ முறைகளில் ரெய்கி (Reiki), ப்ரானிக் ஹீலிங் (Pranic Healing) போன்ற சிகிச்சைகள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த சிகிச்சைகள் செய்வோர் எண்ணிக்கையில் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே வெற்றிகரமாக நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் அந்த சிகிச்சைகளைச் செய்வோரில் குறிப்பிட்ட சிலர், நோய்களைத் தீர்ப்பதில் மிகச் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த சிகிச்சையிலும் இப்படி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்துபவர்கள் அறிந்தோ, அறியாமலோ தங்கள் ஆழ்மன சக்தியை பயன்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்.

அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அனெஸ்தீஸியா கண்டு பிடிக்கப்படும் முன்பே இந்தியாவில் மேற்கு வங்கத்தில் டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே (Dr. James Esdaille) என்னும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் 1843 ஆம் ஆண்டு முதல் 1846 ஆம் ஆண்டு வரை சுமார் 400 அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வலி சிறிதும் தெரியாமல் செய்து சாதனை படைத்திருக்கிறார். இந்த அறுவை சிகிச்சைகள் கண், காது, தொண்டை போன்ற உறுப்புகளிலும், உடலில் இருந்து கட்டிகள், கான்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடுப்பதிலும் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த சிகிச்சைகள் மருத்துவ சிகிச்சைகள் தான் என்றாலும் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து இல்லாத காலத்தில் ஆழ்மன சக்தியையே அவர் பயன்படுத்தியதாக டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே கூறினார். இந்த 400 அறுவை சிகிச்சையின் போதும் ஒரு மரணம் கூட நிகழ்ந்து விடவில்லை என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம்.

இந்த ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி ஒருவரைக் குணப்படுத்த முடியும் என்றாலும் முதலில் நாம் நமக்குப் பயன்படுத்தி நம் நோய்களைக் குணப்படுத்துவது எப்படி என்றும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்றும் பார்ப்போம்.

நம் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு இயற்கையாகவே ஆழ்மனதின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆழ்மனசக்தி தான் நாம் உறங்கும் போதும் மூச்சு விடுதல், இதயம் துடித்தல், ஜீரணம் நடை பெறுதல், உடலில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ரிப்பேர் செய்தல் போன்ற முக்கிய வேலைகளை நாம் அறியாமலேயே செய்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் நாம் விழித்திருக்கும் நேரத்தில் நம் கவலைகள், பயங்கள், டென்ஷன், போன்றவற்றால் நம் இதயம், நுரையீரல், வயிறு போன்றவற்றின் செயல்பாடுகளை நாம் கெடுத்துக் கொண்டாலும், நம் உறக்க நேரத்தில் ரிப்பேர் வேலைகளைச் செய்து ஆழ்மனம் முடிந்த அளவு நம்மைக் காப்பாற்றுகிறது. இந்த வேலையை ஓய்வில்லாமல் ஆழ்மனம் செய்கிறது. உடல்நிலை சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக உறங்கியபடியே இருப்பதற்குக் காரணம் கூட ஆழ்மனதின் பொறுப்பில் நம் உடலை விடுவதற்கு வழி செய்யத் தான். இயல்பாக இதைச் செய்யும் ஆழ்மனதை மேலும் முறையாகப் பயன்படுத்தினால் நோய்களை நாம் விரைவாக குணப்படுத்தலாம்.

முதலில் நாம் ஆழ்மனதை அதன் வேலையைச் செய்ய விட வேண்டும். கற்பனைக் கவலைகள் மற்றும் பயங்கள், அவசர வாழ்க்கையின் டென்ஷன் ஆகியவற்றை மேல் மனதில் இருந்து ஆழ்மனதிற்கு அனுப்பும் முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படி அனுப்பிக் கொண்டே இருந்தால் ஆழ்மனம் தன் வேலையை நிறுத்தி நம் பொய்யான பிரச்னைகளின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பும். நம் ஆரோக்கியம் கவனிப்பாரில்லாமல் மேலும் பாழாகும்.

தியானம் மற்றும் உயர் உணர்வு நிலை பெற சொல்லப்பட்ட சிந்தனை மற்றும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் மனம் தானாக அமைதியடையும். அமைதியடைந்த மனம் ஒரு வலிமையான ஆயுதம் என்றே சொல்ல வேண்டும். அமைதியான மனநிலையை அதிகமாக தக்க வைத்துக் கொள்கின்ற போது ஆழ்மனமும் சக்தி பெற்று வழக்கத்தை விட சிறப்பாக உடல் நலத்தைப் பாதுகாக்கும்.

சரி, நமக்கு வந்து விட்ட நோயை அல்லது உடல் உபாதையை ஆழ்மன சக்தியால் நாமே குணப்படுத்திக் கொள்ளும் வழியை இனி பார்ப்போம். முதலில் தலை வலி போன்ற தற்காலிக சிறிய உபாதைகளை நீக்க பயிற்சி செய்து பழகிக் கொள்ளுங்கள். இதில் வெற்றி கண்ட பிறகு சற்று பெரிய, தொடர்ந்து வருத்தும் நோய் அல்லது உபாதைகளை நீக்க நீங்கள் முயலலாம்.

முதலில் மனதை அமைதியாக்கி தனிமையில் அமருங்கள். தலைவலி போன்ற உபாதைகள் இருக்கையில் தியானம் சுலபமல்ல என்றாலும் நீங்கள் தொடர்ந்து தியானம் செய்யும் இடத்திலேயே இதற்கென அமர்வது நல்ல பலனைக் கொடுக்கும். மூச்சுப் பயிற்சி செய்து மூச்சை சீராக்குங்கள். பின் சில வினாடிகள் உங்கள் வலி மீதே முழு சிந்தனையை வையுங்கள். பின் ‘இந்த வலி சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பிக்கிறது’ என்ற எண்ணத்தை உங்களுக்குள் நிதானமாக, அழுத்தமாக சில முறை சொல்லிக் கொள்ளுங்கள். பின் நீங்கள் அந்த தலைவலி இல்லாமல் முழு ஆரோக்கியமாக இருப்பது போல மனதில் காட்சியை உருவகப்படுத்திப் பாருங்கள். அப்படிப் பார்க்கையில் தலைவலி என்கிற எண்ணத்தைப் பலமிழக்க வைத்து ஆரோக்கியம் என்கிற எண்ணத்திற்கு தான் நீங்கள் சக்தி சேர்க்க வேண்டும். அந்தக் குணமாகி இருக்கும் காட்சியை மனத்திரையில் பெரிதாக்கி, வலுவாக்கி, ஒளிமயமாக்கிக் காணுங்கள். ஒருசில நிமிடங்கள் அப்படிக் கண்டு அந்தக் காட்சியை ஆழ்மனதிற்கு கட்டளை போல் அனுப்பி விட்டு எழுந்து விடுங்கள். பின் மனதை வேறு விஷயங்களுக்கு திருப்புங்கள். சில நிமிடங்கள் கழித்து உங்கள் தலைவலி பெருமளவு குறைந்து, அல்லது பூரணமாக விலகி விட்டிருப்பதை நீங்கள் காணலாம். முன்பு விளக்கி இருந்த மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியையும், மனக்கண்ணில் தத்ரூபமாகக் காட்சிகளை உருவகப்படுத்தும் பயிற்சியையும் நீங்கள் செய்து தேர்ந்திருந்தால் விளைவுகள் சிறப்பாகவும், சக்தி வாய்ந்தவையாகவும் இருக்கும்.

சற்று பெரிய உபாதையாகவோ, தொடர்ந்து கஷ்டப்படுத்தும் நோயாகவோ இருந்தால் இது போல சில நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்தப் பயிற்சி செய்ய வேண்டி வரும். அப்படியிருந்தால் உறங்குகின்ற நேரத்தில் இந்தப் பயிற்சியைச் செய்து கொண்டே நீங்கள் உறங்கி விடுவது வேகமாக அதைக் குணமாக்கி விட உதவும்.  முற்றிய கான்சரின் பிடியில் இருந்த சிறுவன் இது பற்றித் தெரியாமலேயே தொடர்ந்து பயன்படுத்திய கற்பனைக் காட்சிகள் அவனை இப்படித் தான் குணமாக்கியது.

நோய்கள் நெருங்காமல் பாதுகாப்பு செய்து கொள்ளவும் ஆழ்மன சக்தி உதவும். அதைச் செய்து கொள்ள சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தபடி உங்கள் உணர்வுத் திறனைக் கூர்மைபடுத்துவதில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படித் தேர்ச்சி பெற்றிருந்தால் நோய்க்கிருமிகள் உங்கள் உடலை நெருங்கிய அந்தக் கணத்திலேயே உங்களால் உணர முடியும். அவை உங்கள் உடலில் தங்கி அஸ்திவாரம் போட்டு பலம் பெற்ற பின் அவற்றை விரட்டுவது சற்று நீண்ட சிரமமான வேலை. அவை நெருங்கியவுடனேயே உறுதியாக, அழுத்தமாக, உணர்வு பூர்வமாக அனுமதி மறுத்து விரட்டி விடுங்கள்.

அரவிந்தாஸ்ரமத்து அன்னை இதனை விளக்குகையில் நோய்க்கிருமிகள் நெருங்குவதை உணரும் அந்த கணத்திலேயே “NO” என்று உணர்வு பூர்வமாக முழு சக்தியையும் திரட்டி மனதில் கட்டளை இடச் சொல்கிறார். இதற்கு உணரும் திறனை கூர்மையாகப் பெற்றிருப்பதும், வலிமையான மனநிலையில் இருப்பதும் மிக முக்கியம். இது வரை சொன்ன ஆழ்மனப்பயிற்சிகளை தொடர்ந்து செய்தவர்களுக்கு இந்த இரண்டையும் இயல்பாகவே அடைந்து விட்டிருப்பார்கள் என்பதால் இது எளிதில் கைகூடும்.

உங்கள் வீட்டிலோ, நீங்கள் வசிக்கும் பகுதியிலோ ஏதாவது ஒரு நோய் ஒவ்வொருவராக பாதித்துக் கொண்டு வந்தால் அந்த நோய் உங்களை நெருங்காதபடி ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒரு பாதுகாப்பு வளையத்தைக் கூட நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். அந்த நோயை எதிர்க்கும் அல்லது வர விடாமல் தடுக்க வல்ல பெரும் சக்தி வாய்ந்த பொன்னிற பாதுகாப்பு வளையம் உங்களைச் சுற்றி இருப்பதாக மனக்கண்ணில் உருவகப்படுத்தி தத்ரூபமாகக் காணுங்கள். ஒரு நாளில் ஓரிரு முறை இப்படி உருவகப்படுத்தி ஆழமாக உணர்ந்து இரவில் உறங்கும் போதும் சிறிது நேரம் உருவகப்படுத்துங்கள். உங்களைச் சுற்றி உள்ள அந்த பாதுகாப்பு வளையத்தை அடிக்கடி உணருங்கள். அந்த நோய் உங்களைக் கண்டிப்பாக பாதிக்காது. ஆனால் இதெல்லாம் சாத்தியமாக பயிற்சிகள் செய்து உங்கள் ஆழ்மனதை சக்தி வாய்ந்த ஆயுதமாக நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம்.

Friday 7 July 2017

காத்திருக்கப் பழகு

காத்திருக்கப் பழகு ... !!!
சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில்
தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்:
"தியானம் செய்.!
நான் அழைக்கும் வரை காத்திரு.!!!"
நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும்.
பசிக்கும் வரை காத்திரு.
உடல் நீர் கேட்கும் வரை காத்திரு.
காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு.
சளி வெளியேறும் வரை காத்திரு.
உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு.
பயிர் விளையும் வரை காத்திரு.
உலையில் அரிசி வேகும் வரை காத்திரு.
கனி கனியும் வரை காத்திரு.
எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு.
செடி மரமாகும் வரை காத்திரு.
செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு.
தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு
தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு.
துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு.
போக்குவரத்து சிக்கலில் இருந்து விடுபடும் வரை காத்திரு.
நண்பர்கள் பேசும் போது தாம் கூற வந்த கருத்துக்களை அவர்கள் கூறி முடிக்கும் வரை காத்திரு.
பிறர் கோபம் தணியும் வரை காத்திரு.
தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு.
இது உன்னுடைய வாழ்க்கை...
ஒட்டப்பந்தயம் அல்ல.!
ஒடாதே
நில்
விழி
பார்
ரசி
சுவை
உணர்
பேசு
பழகு
விரும்பு
உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததால்...
உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது.
உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் திணிக்கப்படுகிறது.
எதிலும் அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே.
உனது அன்பிற்கும் அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவாயா.!
நீ இதற்கெல்லாம் காத்திருந்தால்
உன் உயிர் உன்னைவிட்டு பிரிய நீ விரும்பும்வரை காத்திருக்கும்.
காத்திருக்கப் பழகினால்........
வாழப் பழகுவாய்.!
இறை ஆற்றல் நீ உள்நோக்கி திரும்புவாய் என்று காத்திருப்பதை உணர்வாய்.
எல்லையற்ற அமைதி ஆற்றல் அபரிமிதம் உனக்காக காத்திருப்பதை உணர்வாய்.!

Thursday 6 July 2017

ஆனந்தமாய் வாழ்வது

வாழ்க்கையை ஆனந்தமாய் வாழ்வது உண்மையில் மிக எளிமையானது.

எந்த ஒரு குறிப்பிட்ட கொள்கை கோட்பாடுகளுக்குள்ளும், விருப்பு-வெறுப்புகளுக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் இருந்தாலே போதுமானது.

அப்படி சிக்கிக்கொள்ளாமல் இருக்க இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை என்ற சற்று ஆழமான & தெளிவான புரிதல் மட்டுமே தேவை.

உதாரணமாய்...

ஒரு காலத்தில் தமிழ்த்திரை உலகில் எம்ஜியார் & சிவாஜி கணேசன் என்ற இரு பெரும் நடிகர்கள் கோலோச்சினர்.

இவர்களுக்கென தனித்தனி ரசிகர் மன்றங்களும் இருந்தன.

இருவரின் ரசிகர்களும் ஏதாவதொரு டீக்கடை பெஞ்சில் நிச்சயமாய் சந்தித்துக் கொண்டிருப்பர்.

அப்போது அங்கு என்ன நடந்திருக்கும் என சற்று கற்பனை செய்து பாருங்களேன்.

எம்ஜியார் பெரிதா? சிவாஜி பெரிதா? என வாய்ச்சண்டையில் ஆரம்பித்து அது கைச்சண்டையாய் மாறி போலிஸ், கேஸ் என பிரச்சனை திவிரமாகியிருக்குமா? இல்லையா?

இத்தகைய சண்டைகள் நிகழ்ந்திருக்காது என யாராவது மறுத்துக் கூற முடியுமா?

இப்போது அவர்கள் இருவருமே காலமாகிவிட்டனர்.

அவர்களின் ரசிகர்களிலும் பெரும்பாலோர் காலமாகிவிட்டனர்.

இன்னும் ஒரு இருபது முப்பது ஆண்டுகளில் அவர்களின் ரசிகர்கள் அனைவருமே காலமாகிவிடுவர்.

அவர்களுக்கு முன்னால் புகழ்பெற்ற நடிகர்களாய் இருந்த M.K தியாகராஜ பாகவதர், T. R. மகாலிங்கம், M.K. ராமசாமி போன்றோரை நம் தலைமுறையினர் மறந்து விட்டதைப் போல இன்னும் ஒரிரு தலைமுறைகளுக்குப் பிறகு இவர்களும் மறக்கப்படுவார்கள் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.

அப்படி மறக்கப்படுவது உறுதியென்றானபின் அந்த டீக்கடை பெஞ்சில் நடந்த அடிதடி ரகளையில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா? ஆழ்ந்து சிந்தியுங்கள். 

எதற்காக இந்தக் கொள்கை கோட்பாடுகள், விருப்பு வெறுப்புகளில் மாட்டிக்கொண்டு வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்ள வேண்டும்?

வாழ்க்கை ஒரு விளையாட்டு.  வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்.

சாட்சி பாவமாய் மாறி வாழ்க்கையை வேடிக்கை பார்க்கத்தொடங்கினால் வாழ்க்கையில் கொண்டாட்டத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை எனப் புரிந்துவிடும்.

வாழ்க்கையுடனான என்னுடைய அணுகு முறை இதுதான்.

கொள்கை கோட்பாடுகள், விருப்பு வெறுப்புகள், ஜாதி, மதம், இனம், தேசம்,மொழி என எந்தக் குறுகிய எல்லைகளுக்குள்ளும் என்னை அடைத்துக்கொள்ள விரும்பவில்லை.

நீங்கள் ரஜினி ரசிகரானால் நான் உங்களிடம் கமலைப் பற்றி பெருமையாகப் பேசுவேன் & vice versa

நீங்கள் ராமராஜனை வெறுத்தால் நான் அவரின் சிறப்புகளை பட்டியலிடுவேன்.

நீங்கள் வேதாத்திரி மகரிஷியை போற்றினால் நான் ஜக்கி வாசுதேவை வேண்டுமென்றே போற்றுவேன்.

நீங்கள் கடவுள் இல்லை என்று சொன்னால் நான் உண்டு என வாதிடுவேன்.

உண்டு என்றால் இல்லை என வாதிடுவேன்.

உருவ வழிபாடு தவறு என்று சொன்னால் சரி என ஆயிரம் காரணங்களைச் சொல்ல என்னால் முடியும்.

சரி என்று சொன்னால் தவறு எனச்சொல்ல ஆயிரம் காரணங்கள் உண்டு.

சைவமா? அசைவமா? எது சிறந்தது?

இந்துமதமா? கிறிஸ்துவமா? இஸ்லாத்தா? பௌத்தமா?

யார் எதை ஆதரித்தாலும் எதிர் வாதங்கள் என்னிடம் உண்டு.

நேற்று சைவம் என்று பேசியவன் இன்று அசைவம் என்று பேசுவேன்.

எனக்கு எதுவும் ஒரு பொருட்டில்லை.

ஏனெனில் எனக்கு எல்லாமே ஒரு விளையாட்டுதான். கொண்டாட்டம்தான்.

எனவே வாதங்களில் தோற்றுவிட்டாலும் நான் வருத்தப்படுவதில்லை.

எதுவும் அர்த்தமற்றவை என்பதை நான் தெளிவாய் அறிவேன்.

சுத்த சைவர்கள், ஆளில்லாத ஒரு தீவில் சில நாட்கள் மாட்டிக்கொண்டால் அங்கு கிடைக்கும் மீனைத்தவிர வேறு எதை உண்ண முடியும். அங்கு Survival தானே முக்கியம்.  சைவக் கோட்பாடு காற்றில் பறந்துவிடும்தானே?

அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், பாலுறவு போன்றவை கிடைக்காவிட்டால் நீங்கள் எத்தகைய உயரிய அறநெறிகளை கடைபிடிப்பவராயினும், அவையனைத்தையும் கைவிட்டு ஒரு கொலை பாதகனாய் மாறிவிடுவீர்கள்.

ஒவ்வொரு வாதத்திற்கும் மறுக்கமுடியாத ஒரு எதிர்வாதம் நிச்சயமாய் உண்டு.

அப்படியெனில் இங்கு எது சரி? எது தவறு?

உங்களுடைய எந்தக்கொள்கையும் கோட்பாடுகளும் மரணப்படுக்கையில் வெகு நிச்சயமாய் உதவிக்கு வராது. உடனும் வராது.

ஜாதி, மதங்களைக் கொண்டு இங்கு ஆயிரமாயிரம் போர்கள் எந்தவித அர்த்தமும் இல்லாமல் நடந்தேறியிருக்கின்றன.  நடந்துகொண்டிருக்கின்றன. லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் மிக உக்கிரமாய் நடந்த சைவ, வைணவப் போர்கள் இன்று உங்களுக்கு முட்டாள் தனமாய் தெரிகிறதல்லவா?

"ஓம் நமச்சிவாயா"

எனச்சொல்லாமல்

"ஓம் நமோ நாராயணாய"

எனச்சொன்னதால் பெருமாள் சிலையோடு கட்டப்பட்டு கடலில் தூக்கியெறியப்பட்டான் ஒரு வைணவன்.

என்ன ஒரு மடத்தனம்? இதனால் யாருக்கு என்ன பிரயோசனம்?

இன்று அந்தத் தியாகத்திற்கு என்ன மதிப்பு?

வாழ்க்கையை கொள்கை கோட்பாடுகளுக்காக தியாகம் செய்வதைக் காட்டிலும் ஒரு முட்டாள்தனம் எதுவுமில்லை.

நமக்கு முன்னால் கோடான கோடி மக்கள் இங்கு வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள்.  அவர்கள் எத்தனையோ வேறுபட்ட ஜாதி, மதங்களைச் சார்ந்தவர்கள்.  அவர்கள் வாழ்ந்ததற்கான சுவடுகளே இங்கு இல்லையே.

நாம் வாழ்ந்ததற்கான சுவடுகளும் நிச்சயமாய் இருக்கப்போவதில்லை.

உங்கள் சுவாசம், இதயத்துடிப்பு என எதுவும் நம் கையில் இல்லை.

ஆனால் அகந்தை மட்டும் தலைக்கேறி நிற்கிறது.

தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் இருப்பு ஒன்றே உண்மையானது.

இங்கு நீங்கள் வாழ்க்கையை கொண்டாடுவதைத் தவிர வேறு சாதிப்பதற்கு எதுவுமில்லை.

வாழ்க்கையை ஒரு குதிரைப் பந்தயம் போல வாழ்வதை நிறுத்துங்கள்.

உணர்வு ரீதியாய், உங்களுக்காய் வாழுங்கள்.

ஆடுங்கள். பாடுங்கள். கொண்டாடுங்கள்

#ஓஷோ_மன்சூர்

Tuesday 4 July 2017

அதிகமாக அட்வைஸ் பண்ணுவது அம்மாவா அப்பாவா?’

இன்றைய தேதியில் குழந்தைகளை வைத்துப் பட்டிமன்றம் நடத்தினால், அதற்கு அவர்கள் தேர்வு செய்யும் பொருத்தமான தலைப்பு என்னவாக இருக்கும் தெரியுமா? ‘அதிகமாக அட்வைஸ் பண்ணுவது அம்மாவா அப்பாவா?’ என்பதைத்தான் தேர்வு செய்வார்கள். அந்த அளவுக்கு அட்வைஸ் என்ற குளம் வெட்டி, குழந்தைகளை அதில் அமிழ்த்தி எடுத்துக் கொண்டிருக்கிறோம். அறிவுரைகளினாலேயே பல வீடுகளில் பிள்ளைகளின் பார்வைக்குப் பெற்றோர் எதிரிகளாகத் தெரிகிறார்கள்.
உலகில் எல்லோரும் அடுத்தவருக்கு இலவசமாக அள்ளித்தருவது அட்வைஸ்தான். ஆனால், நாமும் அந்த அறிவுரைகளின்படியே நடந்திருக்கிறோமா என்பதை எவரும் நினைத்துப் பார்ப்பதில்லை.
கதை ஒன்று சொல்லுவார்கள். நீங்களும்கூட அறிந்திருக்கலாம்.
‘‘எப்போது பார்த்தாலும் என் பிள்ளை இனிப்பு அதிகம் சாப்பிடுகிறான்’’ என்ற புகாருடன் தன் மகனை துறவி ஒருவரிடம் அறிமுகப்படுத்தினார் ஒரு பெண்மணி. எட்டில் இருந்து பத்து வயதிருக்கும் அவனுக்கு. துறவி, இருவரையும் பார்த்தார். பின், “நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார். “என்ன சாமி, இப்படிக் கேட்கிறீர்கள்? நீங்கள் ஏதாவது புத்திமதி சொல்லி, அவனை இனிப்பு உண்பதில் இருந்து விடுவிக்க வேண்டும்” என்றார் அப்பெண்மணி. சிறிது யோசித்த துறவி, ஒரு வாரம் கழித்து வரச்சொன்னார். அப்பெண்மணியும் சரியென திரும்பிப் போனார்.
ஒரு வாரம் கழித்து, திரும்பவும் துறவியைக் காண வந்தார் அப்பெண்மணி. இப்போது துறவி அப்பையனை அழைத்து, அவனுக்குப் புரியும் விதத்தில் எளிமையாக, இனிப்பு அதிகமாகச் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பட்டியலிட்டார். “இப்படியான பொருளை கட்டாயம் உணவில் சேர்ப்பது அவசியமா?” என்று கேள்வி எழுப்பினார். ‘இல்லை’ என்பதுபோல சிறுவனும் தலையசைத்தான். “அப்படியெனில் அதிக இனிப்பு உண்பதை உடனடியாக விட முடியாவிட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டு, பின் கைவிடலாம்” என்று கூறினார் துறவி. ஒருவழியாக அவனும் ஒப்புக்கொண்டான்.
“இந்த அறிவுரையை அன்றே சொல்லியிருக்கலாமே சாமி! ஏன் ஒரு வாரம் கழித்து வரச்சொன்னீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார் அச்சிறுவனின் தாயார். “கடந்த வாரம் வரையிலும் நானே அதிகமாக இனிப்புகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதனால் அப்போது உங்கள் மகனுக்கு அறிவுரை சொல்லுவது சரியல்ல என்று சொல்லவில்லை. ஒரு வார காலம் இனிப்பு சாப்பிடுவதை நான் நிறுத்திவிட்டேன். அதனால் இப்போது நான் சொல்லுவது சரியாக இருக்கும் என்பதால் சொன்னேன்.
அதுவும்கூட அறிவுரையாக இல்லாமல், அதிக இனிப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை அவனுக்குப் புரிய வைத்தேன்” என்றார் துறவி.
இதுதான் இன்றைய நிலை, “இன்றைய வளரிளம் பருவத்தினர், அறிவுரைகளைவிட ஆலோசனைகளைத்தான் அதிகமாக விரும்புகிறார்கள்” என்கிறார், குழந்தைகள் மனநல மருத்துவர் தேவகி.
மேலும் அவர், “எப்போதுமே வளரிளம் பருவத்தினர் சந்திக்கும் சங்கடங்களில் முதன்மையானவை இரண்டு. முதலாவது, உடலில் ஏற்படும் மாறுதல்கள். அடுத்தது, உளவியல் குழப்பங்கள். இந்தச் சமயத்தில் இவர்களைக் கொஞ்சம் கவனமாகக் கையாள வேண்டும். இவ்வயதில் அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களே வாழ்நாள் பயணத்தின் முழுமைக்குமான முதல்படியாக இருக்கின்றன. இன்று சமூகம் கொண்டாடும் பல பெரிய மனிதர்கள் எல்லாம், பதின்பருவத்தில் பாதையை முடிவுசெய்து நடக்கத் தொடங்கியவர்கள்தாம். பிள்ளைகளுக்குத் தங்களைப் பற்றிய ஒரு சுய மதிப்பீடு வளர்ந்துவரும் இச்சமயத்தில், கட்டளைகளாக வரும் அறிவுரைகளை இவர்கள் அறவே வெறுக்கிறார்கள். அதேசமயம் ஆலோசனைகளை வரவேற்பவர்களாகவ
ே இருக்கிறார்கள்.
இச்சமயத்தில் கட்டளைகள் இடாமல், அதிக நெருக்கடி கொடுக்காமல், கடிந்து கொள்வதைவிட, பிள்ளைகளின் மனம் அறிந்து பேசுவதே பலன் தரும். ‘தோளுக்குமேல் வளர்ந்தால் தோழன்’ என்ற பழமொழி நம்மூரில் இருக்கிறதல்லவா! பிள்ளைகளுக்கு ஒன்றும் தெரியாது என்று புறக்கணிக்காமல், பெற்றோர்கள் மனம் விட்டுப் பேசுவது நல்லது” என்கிறார், மருத்துவர் தேவகி.
வளரிளம் பருவத்தில் பிள்ளைகளுக்கு முதலில் எதிரியாகத் தோன்றுவோர் பெற்றோர்தாம். அதற்கு அவர்கள் கொட்டும் அறிவுரை மூட்டைதான் முக்கியக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. அறிவுரைக்கும் ஆலோசனைக்கும் நூலிழைதான் வித்தியாசம் என்பதைப் பெற்றோர் உணரவேண்டும்.
உங்கள் வீட்டுத் தொட்டியில் செடி வளர்க்கிறீர்கள். தொட்டிச்செடிக்க
ு சொட்டுச் சொட்டாக நீர் விடவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். அது தினமும் நீங்கள் செய்யும் வேலை. ஒருநாள் பிள்ளையிடம் அதைப் பணிக்கிறீர்கள். “சின்ன டம்ளர்ல தண்ணீர் எடுத்து ஊற்று, போதும்! பெரிய மக்குல அள்ளிக் கொட்ட வேண்டாம். என்ன புரியுதா? சொதப்பினா, செடி எல்லாம் நாசமாகப் போயிடும். ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்திருக்கேன்..” என்று தொடங்கி தவளையாய்க் கத்தினால், அது கட்டளை வழியாகச் சொல்லப்படுகின்ற அறிவுரை.
இதையே, “தொட்டியில செடி வளர்வதால், சின்ன ஒரு டம்ளர் தண்ணீரே போதும். நிறைய தண்ணீர் ஊற்றினா, செடி அழுகிடும். இல்லாட்டி மண்ணு இளகி, செடியோட வேர் எல்லாம் வெளியில வந்துடும். செடியோட வேர் வெளியே வந்துட்டா, அப்புறம் செடி வளருமா?” என்று கேள்வி கேட்பது, அவர்களையும் அப்பணியில் ஈடுபடுத்தி சிந்திக்க வைக்கும்.
இன்றைய பிள்ளைகளுக்குப் புரியாதது என்று எதுவும் கிடையாது. அவர்களை மதித்து, நாம் அவர்களுடன் உரையாடத் தயாரானால், பிள்ளைகளுக்குப் பெற்றோரைவிட நல்ல நண்பர்கள் யாரும் இருக்க முடியாது.
அறிவுரை சொல்லப் போறீங்களா? இதோ பிடியுங்கள் ஆலோசனைகளை..!
வளரிளம் பருவத்தினருக்கு அம்மா, அப்பாவைவிட சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, பள்ளி ஆசிரியர், ஆசிரியை, தோழன், தோழி என்று யாராவது ஒருவரை மிகவும் பிடித்துப் போயிருக்கும். பெற்றோர் சொல்ல வேண்டியதை, அவர்களின் வாயிலாகச் சொல்லச் சொல்லலாம். அப்போது பிள்ளைகள் காதுகொடுத்துக் கேட்க வாய்ப்புகள் அதிகம்.
‘சின்னப் பையன்.. இவனுக்கு என்ன தெரிந்துவிடப் போகிறது? எல்லாவற்றையும் நாம்தான் செய்யவேண்டும்’ என்ற எண்ணமிருக்கும் பெற்றோரே, பிள்ளைகளுக்கு அதிகம் கட்டளை இடுபவர்களாக இருக்கிறார்கள். அதனால், வளர்ந்துவரும் பிள்ளைக்கும் எதுவும் புரியும் என்பதை உணர்ந்து உங்கள் எண்ணங்களை, தோழமையாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வளரிளம் பருவத்தில் பிள்ளைகள் தங்களின் அழகுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் உடுத்தும் ஆடைகளைப் பற்றி, பெற்றோருக்கு மாற்றுக் கருத்து இருந்தால், நாசூக்காக எடுத்துச் சொல்லலாம். மாறாக, மோசமான விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும்.
இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று சொல்லுவதைவிட, இதை இப்படிச் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சொல்லும்போது, பிள்ளைகள் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறோம் என்பதைப் பெற்றோர் உணர வேண்டும்.
ஒரு செயலின் நன்மை தீமை பற்றி பிள்ளைகளுக்குப் புரியும்வண்ணம் எடுத்துச் சொல்லுவது நல்ல பயனைத் தரும்.