Sunday 14 February 2021

இந்த நொடி

 ஜென் கதை 

நான் நல்லா வாழ்ந்தேன்னு ஒருத்தன் சொல்றான்னா 

அவனோட வயசு என்ன?’ என்று கேட்டார் புத்தர்

அவரது சீடர்கள் யோசித்தார்கள்

‘என்ன கேட்கறீங்க...??? 

சரியாப் புரியலையே'

‘ஒரு நல்ல வாழ்க்கையோட ஆயுள் காலம் என்ன...???

நூறு வயசு..???’ என்றார் ஒரு சிஷ்யர்

ம்ஹூம். இல்லை!’ என்று உடனே மறுத்துவிட்டார் புத்தர்

அப்படீன்னா...??? 90 வயசு...???

அதுவும் இல்லை

80..??? 70..??? 60..??? இப்படிச் சீடர்கள் வரிசையாகப் பல விடைகளைச் சொல்ல

புத்தர் எதையும் ஏற்கவில்லை 

கடைசியாகப் பொறுமையிழந்த அவர்கள் ‘நீங்களே சொல்லுங்க’ என்று அவரிடம் வேண்டிக்கொண்டார்கள்

"ஒரு நல்ல வாழ்க்கை-ங்கறது ஒரு விநாடிப் பொழுதுதான்" என்றார் புத்தர்

‘என்ன சொல்றீங்க குருவே..??? 

ஒரு விநாடியில என்ன பெரிசாச் செஞ்சுடமுடியும்...??? 

குறைந்தபட்சம் முப்பது, நாற்பது வருஷமாவது வாழ்ந்தால்தானே மனுஷ வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருக்கும்..???’

அப்படியில்லை

ஒவ்வொரு விநாடியையும், அதுதான் உங்களுடைய வாழ்க்கையின் தொடக்கம் என்று நினைத்து அனுபவிக்கவேண்டும்

பழையதை நினைத்துக் கவலைப்படக்கூடாது 

கடந்தகாலத்தில் வாழக்கூடாது

அதேநேரம், அந்த ஒரே விநாடியை உங்களுடைய வாழ்க்கையின் முடிவு என்றும் நினைத்துக்கொள்ளவேண்டும்

எதிர்காலக் கற்பனைகளில், 
எதிர்பார்ப்புகளில் அந்த விநாடியை வீணடிக்கக்கூடாது

சுருக்கமாகச் சொன்னால்

நாம் ஒவ்வொரு விநாடியும் புதுசாகப் பிறக்கிறோம்

அதை முழுமையாக அனுபவிக்கிறோம்

அதுதான் நல்ல வாழ்க்கை.

Friday 5 February 2021

அகம்

_*ஒரு ஜாடி முழுவதும் தானியம் நிரப்பி, அதன் மேல் ஒரு எலியை விட்டார்கள்.*_
 
_எலிக்கு தன்னை சுற்றி இவ்வளவு உணவு இருக்கிறது என்று பயங்கர குஷி._

_இனி உணவை தேடி ஓடாமல் சந்தோஷமாய் வாழ்க்கையை கழிக்கலாம் என்று எண்ணி தினமும் தன்னை சுற்றியிருந்த தானியத்தை உண்டது._

_நாளாக நாளாக ஜாடியில் உள்ள தானியம் குறைந்து கொண்டே போய் ஒரு நாள் தீர்ந்தே விட்டது._

_எலி இப்பொழுது ஜாடிக்குள் நிரந்தரமாய் மாட்டிக்கொண்டு விட்டது. அதனால் வெளியேறவே முடியவில்லை._

_இனி தினம் யாராவது  தானியம் போட்டால் மட்டுமே அதற்க்கு உணவு. யாரும் போடவில்லை என்றால் பட்டினியால் சாக வேண்டியதுதான்._

_அப்படியே யாரவது போட்டாலும் போடுவதை மட்டுமே சாப்பிட முடியும். விரும்பியளவு சாப்பிட முடியாது._

_*இந்த கதையில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள்..*_

_(1) குறுகிய கால இன்பங்கள் என்றும் நிரந்தரம் அல்ல. அவை நம்மை அழிவுப் பாதைக்கே கொண்டு செல்லும். அவை நீண்ட கால பொறிகளுக்கு வழிவகுத்து நம்மை நிரந்தரமாக சிக்க வைத்து விடும்._

_(2) சுலபமாக கிடைக்கும் எதுவும் நம்மை அதற்கு அடிமை ஆக்கி, அதற்கு சொகுசாய் நம்மை வாழ பழக்கி, நம் முன்னேற்றத்தை தடுத்து நம் வாழ்வை நாசமாக்கி விடும்._

_(3) நமக்கு தெரிந்த ஒரு கலையை நாம் உபயோகிக்காமல் சோம்பேறியானால், அந்த கலையை நாம் இழக்க நேரிடும்._

_(4) சரியான நேரத்தில் சரியான செயல்களை செய்யாமல் விட்டால், நம் வாழ்க்கையையே இழக்க நேரிடும். நாம் நம் மனதுக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்க முடியாத நிலைக்கு கட்டாயமாக தள்ளப்படுவோம்...!!_

Thursday 4 February 2021

கொண்றங்கி மலை - திண்டுக்கல் மாவட்டம்:

மகத்துவம் பொருந்திய கொண்றங்கி மலை - #திண்டுக்கல் மாவட்டம்: 

அழகிய தோற்றம் கொண்ட  மலையின்  உச்சியில்  மேகங்கள் (கொண்டல்) இறங்கி தவழ்ந்து செல்வதால்  கொண்டல்+இறங்கி = கொண்டலிறங்கி என்பது நாளடைவில் கொண்றங்கி ஆகியது.  இம்மலைக்கு காரணப் பெயராகக்  கொண்றங்கி என்பது பொருத்தமாய் உள்ளது ... இதனால் கிராமத்தின் பெயரான கீரனூர் என்பது கொண்றங்கி கீரனூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையின் உச்சியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 748 மீட்டர் உயரமாகும் ..

மலையின் உச்சியில் ஒரு  அற்புதமான குடைவரை கோவிலில்  (குகையில்)  அருள்மிகு மல்லீஸ்வரர்  என்ற  நாமத்தில் இறைவன் சுயம்பு   லிங்கமாக அருள் புரிகிறார் . இங்கு  அமர்ந்து ஜெபம், தியானம் செய்ய அற்புதமான  அனுபங்களை பெறலாம் ..இம்மலையே லிங்கம் போல இருப்பது  அற்புத  திருக்காட்சியாகும்.

  இம்மலையானது  வேறு எந்த மலையிலும் காண இயலாத  ஒரு தோற்றத்தை உணரலாம் .மலையின் சுற்றளவு மேலே செல்லச் செல்ல குறுகி கூர்மையான கோபுரம் போல காட்சி தருகிறது . மலையில் பாறைகளையே செதுக்கி படிகளாக்கி உள்ளனர் . 

 இம்மலையில் தவசிகள் தவம் புரிந்த அற்புதமான குகை ஒன்றுள்ளது. சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து பேறு பெற்ற மலையாகும்.  பாண்டவர்கள் தவம் செய்த மலையாக சொல்லப் படுகிறது. குறிப்பாக அர்ச்சுனன் தவம் செய்து இறையருள் பெற்றதாய் சொல்லப்படுகிறது .சித்தர்களின் இருப்பினைக் கொண்ட இடம் என்பதை இங்கு  அமர்ந்து   தவம்  செய்வதன்  மூலம் உணரலாம்.
  
பழனி மலையேறும் போது இம்மலை நன்றாக  தெரியும் . இமலையில் இருந்து பழனி முருகப்   பெருமானையும் தரிசிக்கலாம். இறைவன் இங்கிருந்து முருகரை கடைகண்ணில் பார்த்து கவனித்து கொண்டு தான் உள்ளார்.. போகருக்கும் கொண்ட்றங்கி மலைக்கும் தொடர்பு உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன .அமாவாசை - பௌர்ணமி தினங்களில் இம்மலையுச்சியில் அமர்ந்து தவம் செய்ய  மூதாதையர் தொடர்பு கிடைப்பதாக ஓர் செய்தி..

 அடிவாரத்தில் கெட்டி மல்லிஸ்வரர் உடனமர் பிரம்மராம்பா ஆலயம் உள்ளது . மலை ஏற இரண்டு மணிநேரம் ஆகும் .வெயில் மற்றும் காற்று அதிகமாய் இருக்கும் போது சற்று  சிரமமாய் இருக்கும். இரவில் ஏற-இறங்க  இயலாது..ஒருமுறை சென்று  வாருங்கள். ..அற்புதமான அனுபவங்களை பெறுவீர்கள் .. 

 அமைவிடம் : திண்டுக்கல்  மாவட்டம், #ஒட்டன்சத்திரம் வட்டம், ஒட்டன்சத்திரம்  to  தாராபுரம் - வழித்தடம்  மூலனூர் செல்லும் வழியில்  சுமார் 20  கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 461 மீட்டர் உயரத்தில் உள்ளது.


Wednesday 3 February 2021

எண்ணங்கள்

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



*பூதக்கண்ணாடி எண்ணங்கள் எதற்கு..??*

எந்தப் பிரச்சினையையும் 'எக்கார்ட் டாலே' சொன்னது போல, மூன்று வழிகளில் கையாளலாம். பிரச்சினையிலிருந்து விலகலாம். பிரச்சினையை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். பிரச்சினையை மாற்றலாம், சரி செய்யலாம். இவற்றைத் தவிர எதைச் செய்தாலும் பலன் இல்லை. நீங்கள் அதிகம் கவலைப்படும் ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 

கவலையைத் தவிர கோபம், பயம், சுயப் பரிதாபம், வெறுப்பு, பொறாமை, பதற்றம், சந்தேகம் என்று எந்த விதமான எதிர்மறை உணர்வுகள் வந்தாலும் அவை பிரச்சினையை இம்மி அளவு கூட மாற்றப் போவதில்லை. மாறாகப் பிரச்சினை பற்றிய பிம்பம் தான் பெரிதாகிக் கொண்டே இருக்கும்.

*தொலைக்காட்சி..*

தொலைக்காட்சி பார்ப்பது பற்றி நான் எழுதியிருந்த கருத்தைப் பலமாக ஆமோதித்த வாசகர் ஒருவர் 'எக்கார்ட் டாலே' சொன்ன வழிகளைப் பின் பற்றியதாய் கூறினார்.

“ டி.வி பார்ப்பதை முழுவதுமாக கைவிடுவது சாத்தியமில்லை. அதனால், ‘அதிகம் டி.வி பார்ப்பது’ என்பது நம் வீட்டில் இருக்கும் பிரச்சினை என்பதை முதலில் ஏற்றுக் கொண்டு விட்டேன். தொலைக்காட்சியில் வருகிற நெடுந் தொடர்களை அதிகம் பார்க்க வேண்டாம் என்று குடும்பத்தினர் எல்லோரும் பேசி இரண்டு சீரியல்கள் மட்டும் தான் பார்க்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

அதிகாலை நேரம் என்றால் பக்திப் பாடல்கள், இரவு என்றால் மெல்லிசை என வீடு முழுதும் இசையை ஒலிக்கத் திட்டமிட்டுள்ளோம். இது டி.வியிலிருந்து மெல்ல விலகச் செய்து எங்களை மற்ற காரியங்களைச் செய்ய வைக்கும்” எனச் அபாரமாய் சொன்னார் அந்த வாசகர்.

*நிஜமான பக்குவம்..*

இன்னொரு நண்பர் கேட்டார், “சுயக் கட்டுப்பாடு இல்லாமல் பிரச்சினையிலிருந்து தப்பித்தல் நிரந்தரமான தீர்வாகுமா? எது நடந்தாலும் எதிர்மறை எண்ணங்கள் வராமல் இருக்க வழி கிடையாதா?”

சுயக் கட்டுப்பாடு தான் தீர்வு. சந்தேகமில்லை. நமக்கு வெளியில் என்ன நடந்தாலும் ஒரே மாதிரியான மனநிலையில் இருப்பது தான் நிஜமான பக்குவம். ஆன்மிகம் கற்றுத் தருவதும் இதைத் தான். ஆனால், எடுத்தவுடனே அந்த நிலையை அடைவது கடினம். அதனால் தான் ஆரம்பத்திலேயே முக்தி நிலை என்று எந்த மார்க்கமும் சொல்வதில்லை. படிப் படியாகத் தான் பழக்குவார்கள். அது போலத்தான் இதுவும்.

*சூழலைத் தேர்வு செய்தல்..*

மது குடிப்பதை விட்டு விட நினைப்பவர்கள் முதலில் அதைக் குடிக்கும் நண்பர்களிடமிருந்து சற்று விலகியிருப்பது புத்திசாலித்தனம். சூழலைத் தேர்வு செய்தல் ஆரம்ப நிலைக் கட்டுப்பாடு. முடிந்தவரை இதைச் செய்வதில் தவறில்லை. பல கேடுகளுக்கு நம்மைச் சுற்றியிருப்பவர்களின் பண்புகளும் காரணமாகின்றன. ஒரு பிரச்சினையிலிருந்து மீள அந்தச் சூழலை விட்டு விலக நினைப்பது விவேகம்.

ஆனால், பல சமயங்களில் இது இயலாததாய் இருக்கலாம். உங்கள் குடும்ப மனிதர்களை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. திருமணத்திலிருந்து விலகுவது அவ்வளவு எளிதானதல்ல. உங்கள் படிப்பு, தொழில் போன்றவை தரும் சூழல்களைத் தேர்வு செய்வதும் அல்லது விலகிச் செல்லுதலும் கடினமானவை தான்.

*கிடைத்ததை விரும்பு..*

பிரச்சினையாக இருப்பதைச் சீர்படுத்துவதும், மாற்றம் செய்வதும் அடுத்த வழி முறை.

எக்ஸ்னோரா அமைப்பை நிறுவியவர் எம்.பி. நிர்மல். தன் புது வீட்டுக்குக் குடியேறிய போது சுற்றுப்புறம் மிகவும் தூய்மைக் கேடாய் இருப்பது கண்டு மனம் பதறினார். “நல்ல சுற்றுப் புறத்தில் என்னால் வீடு வாங்க முடியவில்லை. ஆனால், கிடைத்த வீட்டின் சுற்றுப்புறத்தை நல்ல விதமாக மாற்ற முடியும்” என்று அப்போது நினைத்துக் கொண்டாராம். அந்தச் சிந்தனை விதையில் துளிர்த்தது தான் எக்ஸ்னோரா அமைப்பு.

“விரும்பியது கிடைக்காத போது கிடைத்ததை விரும்பு” என்பது ஒரு பிரபலமான வாசகம். காதலித்தவர் வாழ்க்கைத் துணையாகக் கிடைக்கவில்லை. ஆனால், மணந்தவரைக் காதலிப்பதில் என்ன தடை?

*ஏற்றால் தான் மாற்றம்..*

துல்லியமாகப் பார்த்தால் ‘ஏற்றுக் கொள்ளுதல்’ ஏற்பட்டால் தான் ‘மாற்றம்’ பிறக்கும். பிரச்சினையை ஏற்றுக் கொள்ளுதல் தான் அதை மாற்றுவதற்கான மன வலிமையையும் தரும்.

“ஆங்கிலம் பேசத் தெரியவில்லையே” என்று தாழ்வு மனப்பான்மை கொள்வதற்குப் பதில் முதலில் அந்த உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள். நமக்குக் கிடைத்த சூழலுக்கும் வாய்ப்புக்கும் ஆங்கிலம் வசப்படவில்லை. அவ்வளவு தான். அதனால், நாம் நம்மைக் குறைவாக எண்ணத் தேவையில்லை. இப்படி ஏற்றுக் கொண்டால் ‘எப்படி ஆங்கிலம் பேசக் கற்கலாம்?’ என்று நம்பிக்கையோடு யோசிக்க முடியும்.

ஆக, சூட்சுமம் இது தான். முதலில் தேவை இல்லாத எதிர்மறை எண்ணங்களையும் உணர்வுகளையும் விலக்குங்கள். பிரச்சினையின் நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். மாற்ற முயற்சி செய்யுங்கள். மாறுதல் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. வெற்றி பெறாவிட்டாலும் அதையும் ஏற்று மீண்டும் மாறுதலுக்கு உட்படுத்துங்கள். இந்தத் தொடர் முயற்சி தான் வாழ்க்கை. இதை விருப்பு, வெறுப்பு இல்லாமல் செய்வது தான் பக்குவம்.

*பூதக்கண்ணாடி எண்ணங்கள்..*

ஒரு செய்கையை விட அந்தச் செய்கை தொடர்பான எண்ணம் தான் உங்களின் உணர்வுகளைத் தீர்மானிக்கிறது.

காதலிக்குக் காத்திருக்கையில் கால் வலிக்கவில்லை. அவளே மனைவியான பின் காத்திருந்தால் கால் வலிக்கிறது. யாருக்குச் சமைக்கிறோம் என்பதைப் பொறுத்து ருசியே மாறுகிறது. பொய் சொல்லி வாங்கிப்போனார் என்று தெரிந்ததும் கொடுத்த நூறு ரூபாய் பெரிய நஷ்டமாகத் தெரிகிறது.

நம்பிக்கையுடன் பூஜைக்குப் பணம் தருகையில் பெருமைப் படுகிறோம். பெரிய மருத்துவமனையில் இதய நோய்க்கு சிகிச்சை செய்தால் பெருமையாக உறவினர்கள் அனைவரிடமும் சொல்வோம். மனச்சிதைவு வந்தால் மூன்றாம் மனிதருக்கு அறியாமல் சிகிச்சை தருவோம்.

பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு முன் அவற்றைப் பற்றிய எண்ணங்களைச் சமாளிப்போம். பிரச்சினைகளைப் பார்க்கும் சில பூதக்கண்ணாடி எண்ணங்கள் நம்மிடம் உள்ளன. அவற்றைக் கையாண்டால் நம் பிரச்சினைகள் பாதிக்கு மேல் காணாமல் போயிருக்கும்..!!

*💗வாழ்க வளமுடன்💗*

*பகிர்வு*

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

Tuesday 2 February 2021

நம்பிக்கை

உங்கள் விருப்பமானவருக்கு கொரியர் செய்துவிட்டு கொரியர் பின்னேயே அலைவதில்லை 
.
நம்பிக்கை இல்லை என்பதால் நீங்களே கொரியர் கம்பெனி வேலையை செய்வதில்லை 
.
ஹோட்டலுக்கு சென்று பிடித்த உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவீர்கள் 
.
நம்பிக்கை இல்லை என்பதால் ஹோட்டலில் சென்று சமைத்து சாப்பிட போவதில்லை
.
பஸ்சில் பயணம் செய்வீர்கள். நம்பிக்கை இல்லை என்பதால் நீங்கள் பேருந்தை நீங்கள் இயக்கபோவதில்லை
.
ஒவ்வொரு நாளும் பெரிய விசயங்களை நீங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் கடந்து விடுகிறீர்கள்.
.
சின்ன விசயங்களில் நம்பிக்கை இல்லை என்று உங்களுக்கு நீங்கள் சொல்லி கொள்கிறீர்கள் 
அவ்வளவு தான்
.
இந்த ஆழமான நம்பிக்கையில் தான் நீங்கள் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறேர்கள்.
.
பெரிய விசயங்களில் வெளிபடுத்தும் நம்பிக்கையை உங்கள் விருப்பங்களை அடைவதையும், உங்கள் பிரச்சனைகளை தீர்க்க வெளிபடுத்தினாலே போதும்
.
நீங்கள் நம்பிக்கை இல்லை என்று புலம்ப காரணம். .
அதை உங்களால் பார்க்க முடியாததால் தான். 
கண்ணுக்கு புலப்படாத நம்பிக்கையை உணர தான் முடியும். அது கண்ணுக்கு புலப்படாத அன்பின் ஆற்றலால் வழிநடத்தப்படுகிறது 
.
ஆழ்மனம் உங்கள் விருப்பங்களை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் உங்களிடம் சேர்க்கிறது.

Monday 1 February 2021

சூழ்நிலை

ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தன.

அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி முதல் மரத்திடம் மழை காலம் தொடங்க இருப்பதால்  நானும் என் குஞ்சுகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது.
முதலில் இருந்த மரம் 
முடியாது என்றது.

அடுத்த மரத்திடம் சென்று கேட்டபோது அது அனுமதித்தது. 

குருவி அந்த இரண்டாவது மரத்தில் கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம், 
அன்று பலத்த மழை, ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்துச் சென்றது .

தண்ணீரில் இழுத்து செல்லும் மரத்தைப்பார்த்து  குருவி சிரித்து கொண்டே சென்னது, 
எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லபடுகிறாய் என்று.

அதற்கு அந்த மரம் கூறிய பதில்,
எனக்குத் தெரியும், 
நான் வலு இழந்து விட்டேன், எப்படியும் இந்த மழைக்குத்  தாங்க மாட்டேன், தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவேன் என்று. 

நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் 
உனக்கு இடம் இல்லை என்றேன்.
என்னை மன்னித்து விடு என்றது. 

கருத்து :--  
உங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றால் தவறாக நினைக்காதீர்கள். 

அவரவர்  சூழ்நிலை அவரவருக்கு மட்டும் தான் தெரியும்.

பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம்..

படித்ததில் பிடித்தது, 
நன்றி 

கதை

 ஒரு கதை .. படித்ததில் ரகசியத்தை உணர்ந்தேன்.........

குஞ்சுப் பறவை ஒன்று சோகமாய் இருந்தது. அதன் தாய்ப் பறவை, ‘‘ஏன் சோகமாய் இருக்கிறாய்’’ என்று கேட்டது. 

குஞ்சுப் பறவை, ‘‘எனக்கு பிறரிடம் எதையும் கேட்பதற்கே கூச்சமாக இருக்கிறது’’ என்றது. 

‘‘தேவையில்லாத வெட்கம் உன் வாழ்க்கையை சிறப்பில்லாததாக ஆக்கிவிடும்’ என்று தாய் எச்சரித்தது. 

குஞ்சு அதைக் கேட்டு, ‘‘சும்மா பொன்மொழியாக சொல்வது எளிது. செய்து காட்டுவது கடினம்’’ என்றது. 

இதைக் கேட்ட தாய்ப்பறவை, தன் குஞ்சுப் பறவையை அழைத்துக் கொண்டு பறந்தது. 

ஏரிக்கரையோரம் சென்று பறந்தபடி, நீரின் அருகே எச்சமிட்டது. ஏரியில் ததும்பிய சிற்றலை, எச்சத்தை நீரில் கரைத்தது. 

தாய்ப்பறவை ஏரியை அழைத்து, ‘‘எனக்கு என் எச்சம் வேண்டும். கொடுத்து விடு’’ என்றது.

 ‘‘அது என்னுள் கரைந்து போய்விட்டது. 

அதைத் திருப்பிக் கொடுக்க முடியாது. 

அதற்கு பதிலாக ஏரிக்குள் இருக்கும் மீன் ஒன்றைத் தருகிறேன்’’ என்றது ஏரி.
 
தாய்ப்பறவை அந்த மீனை எடுத்துக்கொண்டு பறந்தது. ஒரு வீட்டின் முன்னால் வைத்துவிட்டு கொஞ்ச நேரம் மறைந்திருந்தது. 

வீட்டில் இருந்தவர்கள் மீனை எடுத்துச் சென்ற சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டி, ‘‘என் மீன் எங்கே? எனக்கு அது வேண்டும்’’ என்றது

. ‘‘அதைக் குழம்பு வைத்து சாப்பிட்டுவிட்டோம். அதற்கு பதிலாக நாங்களே தயாரித்த தரமான கயிறு தருகிறோம்’’ என்று கொடுத்தார்கள். 

தாயும் குஞ்சும் கயிறை எடுத்துக் கொண்டு பறந்தன. 

வழியில் ஒருவர் கிணற்றருகே கவலையுடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தன. 

அவருடைய கிணற்றில் கயிறு இற்றுப் போய்விட்டதாம். ‘‘கயிறில்லாமல் நீர் இறைக்க முடியாது. நீர் இல்லாமல் போனால் என் வீட்டில் நடக்க இருக்கும் விழா நடக்காது’’ என்று புலம்பினார். 

‘‘நான் கயிறைக் கொடுத்தால் நீங்கள் என்ன தருவீர்கள்?’’ என்று தாய் கேட்டது.

‘‘என்னிடம் இருக்கும் அரிய வகை விதை நெல் ஒரு படி தருகிறேன். 

அது அழிந்து விட்டதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் அது அழியவில்லை. என்னிடம் விதையாக கொஞ்சம் இருக்கிறது’’ என்றார் அவர்.

தாயும் குஞ்சும் விதைநெல்லை சுமந்துகொண்டு வயலுக்கு வந்தன. 

அங்கே அந்நாட்டின் ராஜா விவசாயத்தை கண்காணித்துக் கொண்டிருந்தார். 

அவருக்கு விவசாயத்தில் அதிக ஆர்வம். 

அவர் அருகே விதை நெல்லைப் போட்டுவிட்டு தாயும் குஞ்சும் மறைந்தன. திரும்பி வந்தால் நெல் இல்லை. 

ராஜாவிடம் தாய் கேட்டது, ‘‘என் அரிய வகை விதை நெல் எங்கே?’’

ராஜா திடுக்கிட்டு, ‘‘அந்த அரிய வகை விதை நெல் யாருடையது என தெரியாது. 

நான் அதைப் பயிரிடச் சொல்லிவிட்டேன். அது உன்னுடையதா? அதற்கு பதிலாக நீ என்ன கேட்டாலும் செய்கிறேன்’’ என்றார்.

ராஜாவின் அரியணையில் ஒரு மணி நேரம் அமர்ந்து அரசாட்சி புரியும் உரிமையை தாய்ப்பறவை கேட்டது. 

ராஜாவும் ஒரு மணி நேரம் அதை ஆட்சி செய்ய வைத்தார். 

அதிகாரத்தைப் பெற்றதும் தாய்ப்பறவை, ‘‘எங்கள் பறவை இனங்களுக்கு தேவையான உணவை இனிமேல் ராஜாவே கொடுக்க வேண்டும்’’ என்றொரு ராஜ கட்டளை பிறப்பித்தது. 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குஞ்சுப் பறவை அசந்துவிட்டது. 

ஒன்றுக்குமே உதவாத எச்சத்தில் ஆரம்பித்து நாட்டை ஆளும் அதிகாரத்தைப் கைப்பற்றி, தங்களுக்கான உணவுக்கும் வழி செய்த அம்மாவின் செயல்திறன் பற்றி பெருமைப்பட்டு புகழ்ந்து சொன்னது. 

அதற்கு தாய்ப்பறவை, ‘‘நமக்கு இந்த உணவு வேண்டாம். 

ராஜாவிடம் சொல்லிவிடுவேன்.

 நான் இதைச் செய்து காட்டியது உனக்கு புரிய வைக்கத்தான். 

ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்துகூட, கூச்சப்படாமல் கேட்கும் திறனால் பலவற்றை உருவாக்கிவிட முடியும். 

வெட்கப்படும் உயிரினங்களால் இவ்வுலகில் சிறப்பாக வாழ முடியாது. 

உனக்குத் தேவையானவற்றை கூச்சப்படாமல் உலகத்திடம் வாய்விட்டுக் கேள். 

கொடுப்பதும் கொடுக்காததும் அவர்கள் இஷ்டம். கேட்காமலேயே, ‘கொடுக்க மாட்டார்கள்’ என்று யூகம் செய்யாதே’’ என்றது.

உழைப்போம் !! உயா்வோம்!!

சுமைகளை_சுமக்காதீர்


சுமைகளை_சுமக்காதீர்

வாழ்கையின் அடித்தளத்தை உறுதியாக போடுவதற்கான வழிமுறைகள் என்ன? எந்த அர்த்தமும் இல்லாமல் வாழ்க்கை அடித்து செல்லும் வழியில் செல்லாமல் எதிர்நீச்சலடித்து வெற்றி பெறுவது எப்படி? 

எந்த விடயமும் உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

முக்கியமாக உங்கள் கடந்த காலத்தில் வலிகளை தாங்கி செல்வீர்களானால் உங்கள் எதிர்காலமும் அதே அளவுக்கு வலி மிகுந்ததாக இருக்கும். இருள் படிந்த கடந்த காலம் வெளிச்சமான எதிர்காலத்திற்கு எதிரானதாகும்.

கடந்தகாலத்தில் அவமானப்-படுத்தப்பட்டிருக்கலாம். நம்பிக்கை துரோகம், ஏமாற்றம், தோல்வி எதுவாக இருந்தாலும் முடிந்தது, முடிந்தது என எதிர்காலத்தை குறித்தான எண்ணத்தை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு யாராவது செய்த துரோகத்தை மனதில் வைத்து அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களை பின்னுக்கு தள்ளும். கசப்பான கடந்தகால சுவடுகளை மனதிலிருந்து அழித்துவிடுங்கள்.

உங்களை யாராவது ஏமாற்றி இருக்கலாம். ஆனால் அது உங்கள் தவறல்ல. ஆனால் அதிலிருந்து வெளியேறாமல் கடந்த காலத்தை நினைத்து வெம்பி கொண்டிருப்பது நீங்கள் செய்யும் தவறு தான்.

எடுக்கும் முடிவுகள் உங்களுக்கானதாக இருக்கிறதா இல்லை வேறு யாரையாவது திருப்திப்படுத்தவோ அல்லது சூழ்நிலைக்கு அடிபணிந்து முடிவெடுக்கிறார்களா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையின் தேவை என்ன என்பதை புரிந்து கொண்டு வாழ வேண்டும். பிறரின் வாழ்க்கைக்குள் நீங்கள் சோளக்காட்டு பொம்மை போல் கோமாளி ஆகிவிடாதீர்கள். சூழ்நிலை உங்களை பின்னுக்கு இழுத்தால் நீங்களும் அதற்கு கட்டுப்பட்டு அடித்துச் செல்லப்படாதீர்கள்.

உங்கள் எல்லை இதுதான் என வரையறுத்துக் கொள்ளாதீர்கள். இயலாதது என்று எதுவுமே இல்லை. சாதிக்க முடியாதது என்று எதுவுமே இல்லை. உங்கள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை தான் முக்கியமானது.

உங்களை உங்கள் மனதும்,  கடந்தகால கசப்பான அனுபவங்களும் வேட்டையாடாமல் இருந்தால், பிறரால் உங்கள் முன்னேற்றத்தை தடுக்க இயலாது.

வாழ்க்கையின் உறுதியான அடித்தளத்திற்கு அதிகமான பணம் தேவை என பலரும் நினைக்கிறார்கள். பணத்தை மட்டும் கணக்கிட்டு  எடுக்கும் முடிவுகள் மடமையானதாகவே முடியும். அது தவறான பழக்கங்களையும் பிரச்சனையிலும் கொண்டு சேர்க்கும். 

முழுமனதோடு அர்ப்பணிப்பு உணர்வோடு  பிடித்த வேலையை செய்யும்போது பணமும் பொருளும் தானாக வந்து சேரும். பணத்தை மட்டும் கணக்கிட்டு குறுக்கு வழியை தேர்ந்தெடுத்தால் தோல்வியே மிஞ்சும்.