Tuesday 31 October 2017

பிரச்சினை

வாழ்க்கை பாடம்:
*பிரச்சினையா?*
*அசௌகரியமா?*

அமெரிக்க கப்பற்படையில் மிகப் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒருவர், *’நான் கற்ற பாடம்’* என்ற தலைப்பில் அவர் வாழ்க்கையில் கற்ற பாடத்தைப் பற்றி எழுதியுள்ளார்.

அவர் கப்பற்படையில் சிறிய பதவியில் இருந்த காலம் அது. நடுக்கடலில் இருந்த கப்பலில் ஏதோ சிரமமான வேலை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. *வேலைப்பளு அதிகம்* இருந்த ஒரு நாள், வேறு சில கூடுதல் பணியும் அவர் தலையில் விழ... அவருக்கு கோபம் தாளவில்லை. நேராக தன் *உயரதிகாரியான கப்பலின் கேப்டனிடம் சென்று கோபத்தில் கத்தியிருக்கிறார்.*

‘முதலிலேயே என் பணிக்கு உதவியாளரை தரவில்லை. இப்போது கூடுதல் வேலை வேறு தருகிறீர்கள். *எனக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை (problem) தருகிறீர்களே? எப்படி என்னால் வேலை பார்க்க முடியும்?’* என்கிற ரீதியில் சுமார் கால் மணி நேரம் விடாமல் பொரிந்து தள்ளியிருக்கிறார்.

அவர் பேசியதில் *’பிரச்சினை’* என்ற சொல் பல முறை உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கப்பலின் வயதான கேப்டன் அமைதியாகச் சொன்னாராம்:

*‘நீ பேசும்போது பிரச்சினை’ என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தினாய்.  பிரச்சினை என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா?*

உனக்கு முதுகுத்தண்டு முறிந்து போய் படுத்த படுக்கையாய் இருக்கிறாய். அது குணமாக வருடக்கணக்காகும் என்றால் அது *பிரச்சினை.*

உன் வீடு எரிந்துபோய், இருக்கின்ற எல்லாவற்றையும் இழந்து நீ நடுத்தெருவில் நின்றால் அது *பிரச்சினை...*

*ஆண்டாண்டு காலம் முயன்றால் மட்டுமே சரி செய்ய முடியும் அல்லது சரி செய்யவே முடியாது என்கிற வகையில் வருவது மட்டுமே பிரச்சினை.*

இதுபோன்ற பிரச்சினைகள் மனிதனின் வாழ்க்கையில் ஓரிரண்டு வரலாம். வராமலும் இருக்கலாம்.
மற்றபடி நீ *பிரச்சினை என்ற பெயரில் சொல்கின்ற எல்லாமே அசௌகரியங்கள்* *(inconveniences).*

இதுபோன்ற *அசௌகரியங்கள்* வாழ்க்கையில் நிறைய வரும். *அந்தந்தச் சமயத்தில் இவை பெரிதாகத் தோன்றும்.*
ஆனால் மணிக்கணக்கிலோ, நாட்கணக்கிலோ இவை சமாளிக்கப்பட்டு மறக்கப்படக் கூடியவை. பின்னாளில் யோசித்துப் பார்த்தால் அவை, *அற்ப விஷயங்களாகத் தோன்றும்.*

இப்போது ஆத்திரப்படும் உனக்கே ஆறு மாதம் கழித்து நினைத்துப் பார்க்கையில் இது அவ்வளவு பெரிய விஷயமாய் தோன்றாது. நான் சொல்வதை நன்றாக நினைவு வைத்துக்கொள்.

*நமது வாழ்க்கை முழுவதும் எல்லாக் கட்டங்களிலும் இதுபோன்ற அசௌகரியங்கள் நிறையவே இருக்கும். இதற்கெல்லாம் பிரச்சினை என்ற பெயரிட்டு வாழ்க்கையைப் பார்த்தால் நீ என்றுமே மகிழ்ச்சியாய் இருக்க முடியாது‘* என்று மிகவும் அமைதியாக அறிவுரை கூறியிருக்கிறார்.

அவர் சொன்னது மிகப் பெரிய பாடமாக எனக்கு இருந்தது.

அன்றிலிருந்து நான் எனக்கு சிக்கலை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் வரும்போதெல்லாம் அது *உண்மையான பிரச்சினையா, இல்லை அப்போதைய அசௌகரியமா* என்று என்னையே கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். நம் வாழ்க்கையில் அசௌகரியங்களைத் தான் அதிகம் சந்திக்கிறோம் என்றும் உண்மையில் அவை அவ்வளவு பெரிய விஷயங்கள் அல்ல என்றும் புரிய ஆரம்பித்தது.

*கோபம், வருத்தம் எல்லாம் குறைய ஆரம்பித்து பொறுமையும், அமைதியும் என்னில் பெருக ஆரம்பித்தது"* என்று அனுபவப் பூர்வமாகச் சொல்லியிருந்தார்..

*நாமும் நிதானமாக யோசிப்போம்:*
*நமது பிரச்சினை உண்மையில் பிரச்சினைதானா,*
*இல்லை தற்போதைய அசௌகரியமா என்று!*

நன்றி...நன்றி....நன்றி...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

.

Sunday 29 October 2017

கொண்டாட்டமாக மாற்றுங்கள்.

உண்மையான கொண்டாட்டம் உங்கள் வாழ்க்கையிலிருந்து, உங்கள் வாழ்க்கைக்குள் வர வேண்டும்.

மேலும், உண்மையான கொண்டாட்டம் நாள்காட்டியைப் பொறுத்து அமைவதில்லை.

அதாவது அக்டோபர் முதல் தேதியில் நீங்கள் கொண்டாடுவீர்கள் என அமையாது. இது விசித்திரமானது...

வருடம் முழுவதும் நீங்கள் துயரத்தில் ஆழ்ந்து இருப்பீர்கள்,  அக்டோபர் முதலாம் நாள் நீங்கள் சட்டென துயரத்திலிருந்து விடுபட்டு நடனமாடுவீர்கள்.

அன்று உங்கள் துயரம் போலியானதாக இருக்க வேண்டும் அல்லது நவம்பர் முதல் தேதி போலியானதாக இருக்க வேண்டும்.

இரண்டுமே உண்மையாக இருக்க முடியாது.

மேலும், நவம்பர் முதல் தேதி கடந்து சென்ற பின்னர், நீங்கள் உங்கள் கருங்குழிக்குத் திரும்ப செல்கிறீர்கள்;

ஒவ்வொருவரும் தமது துயரத்திற்குள், ஒவ்வொருவரும் தமது கவலைக்குள் செல்கிறீர்கள்.

வாழ்க்கை ஒரு தொடர்ந்த கொண்டாட்டமாக அமைய வேண்டும். முழு வருடமும் ஒரு தீபங்களின் திருநாளாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் உங்களால் வளரமுடியும்,
மலரமுடியும்.

சிறிய விஷயங்களை கொண்டாட்டமாக மாற்றுங்கள்.

--ஓஷோ--

மனதுக்கு ஏது மருந்து ?

மனதுக்கு ஏது மருந்து ?

ஒரு துயரத்தை தாங்க முடியாமல் சமாளிக்க தவித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு துயரம் இடி போல் விழும்போது என்ன செய்ய முடியும்.....?

மனப்பாரத்தை துலாபாரத்தில் நிறுத்தி  இரண்டையும் எடை போடுவோம் பாருங்கள் .....

அப்போது தெரியும் நம் இதயத்தின் பலம் என்ன என்று...?

ஒரு துயரத்தில் இருக்கும் போது துடிக்கும் நாம்..... ,
இரு துயரத்தை  கையாளும் போது நீதிபதி ஆகிறோம்....

அப்போது ஒரு உண்மை .... புத்தனாக ஞானம் பிறக்கும்.

இதுவும் கடந்து போகும்....

உயிரும் ஒரு நாள் உடலை கடந்து போகும் என்ற உண்மை உணர்வோம்...

பிரச்சினைகளை உருவாக்குவதும் நாமே....

பிரச்சினைகளை களை  எடுப்பதும் நாமே....

ஆகவே தேவையற்றதை நீக்குவோம்.

கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து பார்த்தால் ,
எல்லாமே தேவையற்றது என்ற உண்மை புரியும்.

நாம் யோசிக்க மறுப்பதால்தான், எல்லாமே தேவையானதாகிறது...

மாற்றங்களை நோக்கிய நமது பயணம், தோல் சுருங்கும் வரை தொடர்கிறது....

இதயம் சுருங்கி விரியும் வரை நிகழ்கிறது....

இடையே வரும் இடியும் ,மின்னலும் நமது வாழ்வில் தவிர்க்க முடியாதது...

எதையும் தாங்கும் இதயம் நம்முடன் இருப்பதை உணர்வோம்...

Friday 27 October 2017

மெளனமாக உட்காருங்கள்,

சிக்கலை சிரித்தனுப்புங்கள்.!

மெளனமாக உட்காருங்கள்,
உங்கள் இருத்தலின் துணிவின்மீது ஒரு அசட்டுச்சிரிப்பை வரவழைத்துக்கொள்ளுங்கள்.
ஏதோ உங்கள் முழுஉடலுமே அசட்டுச்சிரிப்பில் இருப்பதைப்போல உணர்ந்து கொள்ளுங்கள். அந்த சிரிப்போடு அசையுங்கள். அது வயிற்றின் மேல்புறத்திலிருந்து முழுஉடலுக்கும் பரவட்டும். – கைகள் சிரிக்கட்டும், அதை ஒரு கிறுக்கத்தனமாக செய்யுங்கள்.  ஒரு இருபதுநிமிடங்கள்
சிரியுங்கள்.  அது உரத்த சிரிப்பாக இருந்தாலும்கூட அதைஅனுமதியுங்கள்..
அது சத்தமில்லாமல் வந்தால், சிலசமயங்களில் அமைதியாக, சிலசமயம் சத்தமாக, எப்படியும் அதை அனுமதியுங்கள்.
ஆனால் ஒரு இருபதுநிமிட சிரிப்பை அனுமதியுங்கள்.

பிறகு மண்ணிலோ அல்லது தரையிலோ
படுத்துக்கொள்ளுங்கள். தரையை பார்த்தபடி, தரையில் படுத்துக்கொள்ளுங்கள்.
சூழல் வெதுவெதுப்பானதாக இருந்தால், உங்கள் தோட்டத்தின் தரையில் செய்யலாம்.. அது நல்லது.  நிர்வாணமாக செய்யமுடிந்தால், அது இன்னும் நல்லது. பூமியோடு தொடர்புகொள்ளுங்கள். அந்தபூமி உங்கள் தாய், நீங்கள்
அதன் குழந்தை என்று நினைத்துக்கொள்ளுங்கள். அந்த நினைப்பிலேயே கரைந்து
செல்லுங்கள்.

இருபதுநிமிடம் சிரிப்பு, இருபதுநிமிடம் பூமிபடர்வு, பூமியோடு ஒரு ஆழ்ந்ததொடர்பு.  பூமியோடு சுவாசம், பூமியாகவே
உணருங்கள்.  நாம் மண்ணிலிருந்துதான் வந்தோம். ஒருநாள் அங்கேதான் போகப்போகிறோம்.
இப்படி ஒரு இருபதுநிமிட போஷாக்கேற்றலுக்குப்பிறகு – காரணம் பூமி உங்களுக்கு நிறையசக்தியைக் கொடுக்கும், – நீங்கள்
இப்போது ஆடும்போது அதற்கு ஒரு பெரியசுவை இருக்கும். இப்படி இருபதுநிமிடங்கள் நடனமாடுங்கள்…
எந்த ஆட்டமானாலும் சரி. இசையை போட்டு நடனமாடுங்கள்.

வெட்பநிலை மோசமாக இருந்தால்,
அறையிலேயே இதைச்செய்யலாம். ஆனால் நல்ல வெளிச்சமாக இருந்தால், வெளியே செய்யுங்கள், அங்கே சில்லென்று இருந்தால் ஒரு போர்வையை போர்த்திக்கொள்ளுங்கள்.
இதைச் செய்ய ஏற்ற வழிகளையும், முறைகளையும் கண்டறியுங்கள், ஆனால் தொடர்ந்து செய்யுங்கள். ஆறு அல்லது எட்டுமாதத்திற்குள் நீங்கள் பெரியமாற்றங்கள் தன்னால் ஏற்படுவதை காண்பீர்கள்.

நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை."

எதிர்மறையானவற்றை மிக எளிதில் நிருபித்து விடலாம்.ஆனால் நேர்மறையானவற்றை நிரூபித்தல் சாத்தியமில்லை.புரியாத தலைப்பாக இருக்கின்றதல்லவா?

தலைப்பினை புரிந்து கொள்ள வேண்டுமென்றால்  தொடர்ந்து படியுங்கள்.

யார் என்னதான் சொன்னாலும், மனசுக்கு திருப்தியே அடையாத இரண்டு கேள்விகள் இருக்கின்றன.

1.கடவுள் இருக்கிறாரா,
இல்லையா?

2.இன்னொரு கேள்வி, இறந்த பிறகு – உயிர் என்ன ஆகிறது?

இந்த கேள்விகளுக்கு யார், என்னதான் சமாதானம் கொடுத்தாலும், நம்ப முடிவதே இல்லை.

முதல் கேள்வி சம்பந்தமாக, ஓஷோ ஒரு கதையை நமக்கு சொல்லி இருக்கிறார் படித்துப் பாருங்கள்..!

குருடன் ஒருவன் ஒரு கிராமத்தில் இருந்தான்.அவன் ஒரு தத்துவவாதியாக மிகவும் வாதாடுபவனாக இருந்தான்.

அவன் கிராமத்தாரிடம் வெளிச்சம் என்பதே கிடையாது.நான் குருடனாக இருப்பதை போலவே நீங்கள் எல்லோரும் குருடர்கள்.

நான் அதை அறிந்து கொண்டேன்,நீங்கள் அதை அறியவில்லை,அதுதான் வித்தியாசம் என்று கூறி வாதிட்டான்.

இதை அவன் கண்கள் உள்ள கிராம மக்களிடம் கூறி கொண்டிருந்தான்.

அந்த கிராமத்து மக்களே ஒன்றும் பேச முடியாத அளவிற்கு அவன் வாதிடுவதில் வல்லவனாக இருந்தான்.

அவனை என்ன செய்வது என்று தெரியாமல் கிராமத்தார் தவித்தனர்.

அவன் அவர்களிடம் நீங்கள் கூறும் வெளிச்சத்தை கொண்டு வாருங்கள்.நான் அதை ருசித்து பார்க்கிறேன்.இல்லை நுகர்ந்து பார்க்கிறேன்.இல்லை,தொட்டு பார்க்கிறேன். அதன் பின்தான் நான் நம்ப முடியும்.என்று கூறினான்.

வெளிச்சத்தை தொடமுடியாது,
ருசிக்க முடியாது.
நுகரவும் முடியாது.
கேட்கவும் முடியாது.

ஆனால் இந்த குருட்டு மனிதனுக்கு உள்ளவையோ இந்த நான்கு புலன்களும்தான்.

ஆகவே அவன் தன்வாதத்தில்
வெற்றியடைந்து விட்டதாக சிரிப்பான்.பாருங்கள் ஒளி என்று கிடையாது.உண்டு எனில் எனக்கு நிருபித்து காட்டுங்கள் என்று கூறுவான்.

புத்தர் அந்த கிராமத்துக்கு வந்த போது அங்குள்ளவர்கள் அவனை அவரிடம் அழைத்து வந்தார்கள்.

அவனது வரலாறு முழுவதையும் புத்தர் கேட்டார்.அதன் பின் அவர் இவனுக்கு நான் தேவை இல்லை.

வெளிச்சத்தை பற்றி இவனிடம் பேசுவது முட்டாள்தனம்.இவனோடு நீங்கள் வாதிட்டால் அவன்தான் வெற்றி பெறுவான்.

அவனால் வெளிச்சம் இல்லை என்பதை நிருபிக்க முடியும்.

எனவே இவனை முதலில் எனது கண் மருத்துவரிடம் அழைத்து சென்று கண் அறுவை சிகிச்சை செய்து கண் பார்வையை கிடக்க செய்து அதன் பிறகு என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கூறினார்.

புத்தருடைய கண் மருத்துவர் அந்த குருடனுக்கு கண அறுவை சிகிச்சை செய்து ஆறு மாத காலத்தில் அவனுக்கு கண் பார்வை கிடைக்கசெய்தார்.

அவணுக்கு கண் பார்வை கிடைத்த பிறகு வெளிச்சத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்து அவன் புத்தர் கால்களில் வந்து விழுந்தான்.

நீங்கள் மட்டும் இல்லையெனில் நான் என் வாழ்நாள் முழுவதும் வெளிச்சத்தை பற்றி விவாதம் செய்தே கழித்திருப்பேன்.

ஆனால் வெளிச்சம்உள்ளது,
இப்போது நான் அதை அறிகிறேன் என்று புத்தரிடம் கூறினான்.

இப்போது புத்தர் அவனிடம் நீ அதை நிருபிக்க முடியுமா?வெளிச்சம் எங்கே உள்ளது?நான் அதை ருசிக்க வேண்டும்,அதை நான் தொட வேண்டும்,அதை நான் நுகர வேண்டும் என்று கேட்டார்.

உடனே அந்த முன்னாள் குருடன் அது முடியாத காரியம் ,வெளிச்சத்தை பார்க்க மட்டும்தான் முடியும் என்பதை இப்போதுதான் நான் அறிகிறேன்.வெளிச்சத்தை தொடவோ,ருசிக்கவோ,நுகரவோ,
கேட்கவோ முடியாது.வேறு வழிகள் இல்லை என்பதை புரிந்த கொண்டேன்,என்னை மன்னித்து விடுங்கள் என்றான்.

ஓஷோ சொல்கிறார்: ஞாபகத்தில் கொள்ளுங்கள் எதிர்மறையானவற்றை மிக எளிதில் நிருபித்து விடலாம்.ஆனால் நேர்மறையானவற்றை நிரூபித்தல் சாத்தியமில்லை.

எனவே தான் நாத்திகன் மிகவும் விவாதிப்பவனாகவும் ஆத்திகன் எப்போதும் தோல்வியுறுபவனாகவும்
இருக்கிறான்.அவன் கடவுள் அல்லது ஆன்மா இருப்பதை நிரூபிக்க முடியாத நிலையில் இருக்கின்றான்.

"இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏

இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?"

"அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென.

கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறோமா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறோமா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கின்றோம்?"

"ஆனாலும் நம்மில் அநேகம்பேர் கடவுளை நம்புகிறோம்?

"நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது 'கடவுள் ‏ இல்லை' என்று.

இதற்கு நம்மிடம் எ‎ன்ன பதில் உள்ளது என்றால் ஒ‎ன்றுமேயில்லை,
நம்பிக்கை மட்டுமே உள்ளது.

வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா? என்றால் நிச்சயமாக உள்ளது."

அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?" என்றால்
நிச்சயமாக இல்லை .

நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை.வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது.

மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன.

ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல.

வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold).

"வெப்பம் ‏இல்லை" என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.".. ‏

இருட்டென்ற ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?"என்ற கேள்விக்கு நம்மில் அநேகம்பேர் கூறும் பதில் இரவு.இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.ஆனால் வெளிச்சம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே இருட்டு என்பது. இருட்டு என்பதே வெளிச்சம் என்ற ஒரு இல்லாமைதான்.(Absence of light is the dark).

நம்மால் வெளிச்சத்தை அளக்க முடியும்குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும்.

ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏

'கடவுள் ‏ இல்லை' என்று கடவுளைப் பற்றிய அறிவியல் சொல்லும் கருத்து பிழையானது.

""பிழை?? இதற்கான விளக்கம்

நம்மில் அநேகம்பேர் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கின்றோம்.

ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது பொதுவான வாதம்.

உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர்.

கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகின்றோம்.
அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகின்றோம்.

அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை  யாராலும் விளக்கமுடியாது.

எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎ன்.

மின்சாரத்தை அளக்கமுடிந்த நம்மால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த  நம்மால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.

இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகின்றோம்.

உண்மையில் "வாழ்வு இனி இல்லை" என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதின்  ‏ ‏ அறிவு பூர்வமான பதில்.

"குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிற இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்.

" நமது கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறோமா?" என்றால் நிறைய பேரின் பதில்
'இல்லை' .

அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை.

எல்லாமே 'ஒருவகையா‎ன' அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது அநேகம்பேரால் ஏற்று கொள்ளபட்ட கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது.

அதை நிரூபிப்பதற்கு அறிவியல் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை.

அறிவியலில்  சரியெனப்படும் கருத்து ஒ‎‎ன்றை ஒருவர் நமக்கு போதிப்பதால்  அவர் ஒரு விஞ்ஞானியா? அல்லது போதகரா?

இவ்வாறு அறிவியல் கருத்தை போதிப்பவரின் மூளையை யாராவது தொட்டுப் பார்த்து அவருக்கு மூளை  ‏இருக்கிறதென உணர்ந்திருக்கின்றோமா‏?
அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கின்றோமா?

அறிவியல் சொல்லும் கருத்துக்களின்படி நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, ஐம்புலன்களான பார்த்தல்,
தொடுதல்,ருசித்தல்,கேட்டல், நுகர்தல்,மூலம் உணர முடியாத ஒன்றை இல்லை என்ற கருத்தின்படி  போதிப்பவருக்கு மூளை இல்லை எ‎ன்று."

"மூளையே இல்லாத ‎போதிப்பவர் நடத்தும் பாடங்களை  நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?

ஆனால் நாம் அனைவரும் போதிப்பவருக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பி கொண்டுதான் இருக்கின்றோம் .

ஏனென்றால் மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏

இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது.

நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை."

பல இணைய தளங்களில் படித்தேன்,படித்தவற்றை பகிர்ந்தேன்!

Friday 13 October 2017

நம்பும் படியே நடக்கும்!

நம்பும் படியே நடக்கும்!
மனம் எதை உண்மையென நம்புகிறதோ அதை உருவாக்க வல்லது!
.
அமெரிக்கப் பத்திரிக்கையாளரும், பேராசிரியருமான நார்மன் கசின்ஸ் (Norman Cousins) கலிபோர்னியா பல்கலைகழகத்தில் மனித உணர்வுகள் உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி ஆராய்ச்சிகளும் நடத்தியவர்.
அவர் ஒரு பேட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடந்த ஒரு கால் பந்துப் போட்டியின் போது நேரில் கண்ட தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். பெருந்திரளாக அந்த விளையாட்டைக் காண வந்திருந்த ரசிகர்களில் சிலர் திடீரென்று நோய்வாய்ப்பட்டனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்த குளிர்பான எந்திரம் ஒன்றிலிருந்து குளிர்பானம் குடித்திருப்பது தெரிய வந்தது. அது தான் காரணமாக இருக்கும் என்று மருத்துவர்கள் நினைத்ததால் உடனடியாக ஒலிப் பெருக்கியில் அறிவித்தனர். யாரும் அந்த குளிர்பான எந்திரத்தில் இருந்து குளிர்பானம் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். அதைக் குடித்தவர்களுக்கு ஏற்பட்டிருந்த உடல்நலக்குறைவின் அறிகுறிகளையும் விவரித்தனர். உடனே அதில் குளிர்பானம் வாங்கிக் குடித்திருந்து அது வரை நோய்வாய்ப்படாதவர்களும் அந்த நோய் அறிகுறிகளை உணர ஆரம்பித்தனர்.
பலரும் மயங்கி விழ ஆம்புலன்ஸ்கள் பெருமளவு அங்கே தேவைப்பட்டன. எல்லோரிடமும் பயம் பரவியது. உள்ளூர் மருத்துவமனைகள் நிரம்ப ஆரம்பித்தன. அதற்குள் அந்த திடீர் நோயிற்குக் காரணம் அந்த குளிர்பானம் அல்ல என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதுவும் அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட பிறகு நோயின் அறிகுறிகளை தங்கள் உடல்களில் உணர ஆரம்பித்தவர்கள் கூட சரியாக ஆரம்பித்தார்கள். மயங்கி விழுந்தவர்கள் கூட திடீரென்று நலமடைந்தார்கள். சிறிது நேரத்தில் ஆரம்பத்தில் நோய்வாய்ப்பட்டவர்களைத் தவிர எல்லோரும் நலமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் முதலில் நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமே உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் அந்த குளிர்பான எந்திரத்தில் இருந்து குடித்ததால் தான் அந்த நோய் ஏற்பட்டது என்று அறிவித்தவுடன் அதில் இருந்து குளிர்பானம் குடித்த அத்தனை பேரிடமும் அந்த நோயின் அறிகுறிகள் காண ஆரம்பித்ததும் பிரச்சினை அந்த குளிர்பான எந்திரத்தில் அல்ல என்பதை அறிவித்தவுடன் அந்த நோயின் அறிகுறிகள் காணாமல் போனதும் மனதினால் சாதிக்கப்பட்டவை. அது தான் அந்த நிகழ்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மனதின் நம்பிக்கைகளின் சக்தி இது போன்ற எத்தனையோ ஆராய்ச்சிகளில் விளக்கப்பட்டுள்ளது. ஹார்வர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர் ஹென்றி பீச்சர் (Dr. Henry Beecher) இது குறித்து விரிவான ஆராய்ச்சிகள் பலவற்றை செய்துள்ளார். அதில் ஒரு ஆராய்ச்சி நம்பிக்கைகள் ஏற்படுத்தும் உடலியல் மாற்றங்கள் குறித்தது. அந்த ஆராய்ச்சியில் 100 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்ட
னர். இரண்டு புதிய மருந்து வகைகளைக் கண்டுபிடித்திரு
ப்பதாகவும் அதன் சக்தி பரிசோதனைக்காக இந்த ஆராய்ச்சி என்றும் அந்த மாணவர்களுக்குச் சொல்லப்பட்டது.
சிவப்பு மாத்திரை (capsule) உடனடியாக அதிக சக்தி தரும் ஊக்க மருந்தாகவும் (super-stimulant), நீல மாத்திரை உடனடியாக அமைதிப்படுத்தும் மருந்தாகவும் (super-tranquilizer) மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் அந்த மாத்திரைகள் மாணவர்கள் அறியாமல் மாற்றப்பட்டிருந்தன. சிவப்பு மாத்திரை அமைதிப்படுத்தும் மருந்தாகவும், நீல மாத்திரை சக்தியை அதிகரிக்கும் மருந்தாகவும் இருக்க அவற்றை மாணவர்களுக்கு உட்கொள்ளக் கொடுத்தார்கள். ஆனால் ஐம்பது சதவீதம் மாணவர்கள் தாங்கள் என்ன மருந்து சாப்பிட்டோம் என்று தவறாக நம்பினார்களோ அதற்கேற்ற விளைவுகளையே தங்கள் உடலில் கண்டார்கள். இது வரை மருந்தே அல்லாத ஒன்றை மருந்தென்று (Placebo Effect) நம்பி அதற்கேற்றவாறு குணமான பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் டாக்டர் ஹென்றி பீச்சர் உண்மையான மருந்தையே கொடுத்து அதற்கு நேர் எதிரான ஒரு விளைவை மனிதன் தன் நம்பிக்கையால் ஏற்படுத்திக் கொள்கிறான் என்று கண்டுபிடித்தது தான் இந்த ஆராய்ச்சியின் சிறப்பு.
யேல் பல்கலைக்கழக பேராசிரியர் (Dr. Bernie Siegel) அன்னியன் திரைப்படத்தில் வருவது போல பல ஆட்களாய் ஒருவரே மாறும் (Multiple Personality Disorders) வியாதியைப் பற்றி பல ஆராய்ச்சிகள் செய்தவர். அப்படி வேறொருவராக மாறும் போது வியக்கத்தக்க வகையில் அவர் உடலும், குணாதிசயங்களும் மாறுவதாக அவர் பரிசோதித்து கண்டிருக்கிறார். அந்த திரைப்படத்தில் வருவது போன்ற மாற்றங்கள் வெறும் கற்பனை அல்ல என்று இதன் மூலம் தெரிகிறது.
இந்த ஆராய்ச்சிகளும், நம்முடைய சில அனுபவங்களும் சொல்லும் மகத்தான உண்மை இது தான் – மனம் எதை உண்மையென நம்புகிறதோ அதை உருவாக்க வல்லது. அந்த நம்பிக்கையின் ஆழத்திற்கேற்ப உருவாக்கத்தின் தன்மையும் இருக்கும். இருட்டில் கையில் பிடித்தது கயிறாக இருந்தாலும் அதை பாம்பு என்று எண்ணி பயக்கும் வரையில் உடலில் ஏற்படும் அத்தனை விளைவுகளும் பாம்பைப் பிடிப்பதால் ஏற்படும் விளைவுகளாகவே இருக்கும். விளக்கைப் போட்ட பின் அது கயிறென்று உணர்ந்த பின் தான் அந்த பயத்தின் மாற்றங்கள் விலகும்.
உடலில் மட்டும் தான் நம் நம்பிக்கையின் விளைவுகள் வெளிப்படும் என்பதில்லை. எல்லாவற்றிலும் நம் நம்பிக்கைகளின் ஆதிக்கம் உண்டு. எதை நம்புகிறோமா அதற்கேற்ற தன்மைகளை நாம் நம்மிடம் உருவாக்கிக் கொள்கிறோம். அடுத்தவர்களிடமும் உருவாக்கி விடுகிறோம்.
மனம் அந்த அளவு சக்தி வாய்ந்தது என்றால் நாம் எப்படிப்பட்ட நம்பிக்கைகளுடன் வாழ்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அல்லவா?
ஆனால் அப்படி நாம் கவனமாக இருக்கிறோமா?
நம்முடைய நம்பிக்கைகளில் எத்தனை நம்மை பலப்படுத்துவனவாக இருக்கின்றன?
எத்தனை நம்பிக்கைகள் நம்மை மெருகேற்றுவனவாக இருக்கின்றன?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களில் தான் நம் வாழ்க்கையின் போக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
நான் அதிர்ஷ்டமில்லாதவன் என்று திடமாக நம்பும் ஒருவன் அப்படி அதிர்ஷ்டம் இல்லாதவனாகவே வாழ்ந்து மடிகிறான். ஒருசில விஷயங்களில் தொடர்ந்து சில முறை தோல்விகளும், சிக்கல்களும் ஏற்படலாம். அதை வைத்து உடனடியாக அதிர்ஷ்டமில்லாதவன் என்று நம்ப ஆரம்பிப்பது அப்படியே நம் வாழ்வைத் தீர்மானித்து விடுகிறது.
அதேபோலத் தான் நல்ல நம்பிக்கைகளும் நம் வாழ்வில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்தவை. ‘எனக்கு கடவுள் பக்கபலமாக இருக்கிறார்’ என்ற நம்பிக்கையில் இருப்பவன் எல்லா சிக்கல்களிலும், பிரச்சினைகளிலும் முடிவில் ஏதாவது ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கிறான். கடவுள் இருக்கிறாரோ, இல்லையோ, கடவுள் அருள் அவனுக்கு உண்டோ, இல்லையோ, அந்த நம்பிக்கை அவனை அந்த மோசமான சூழ்நிலைகளிலிரு
ந்து காப்பாற்றி விடும் என்பது உண்மை.
ஆழமாக எதை நம்பினாலும் அதற்கேற்ற சூழ்நிலைகளையும், தன்மைகளையும் ஈர்க்கக் கூடிய சக்தி நமது ஆழ்மனதிற்கு உண்டு. அதற்கேற்றபடி நம்முடன் பழகுபவர்களின் இயல்புகளை மாற்றும் சக்தியும் நமது ஆழ்மனதிற்குண்டு. அது சரி தவறு என்று பகுத்தறியும் சிரமத்தை அது எடுத்துக் கொள்வதில்லை. அதனால் அந்த சிரமத்தை நாம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். நம் அறிவைப் பயன்படுத்தி நம் நம்பிக்கைகளில் நமக்கு நன்மை அல்லாதவற்றை அவ்வப்போது கண்டு களைந்து எறிந்து விட வேண்டும். நல்ல வலுவான நம்பிக்கைகளையே நம்மிடம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
எனவே வாழ்க்கையில் எல்லா சமயங்களிலும் நல்லதை நம்புங்கள், வலிமையை நம்புங்கள், சுபிட்சத்தை நம்புங்கள். நம்பிக்கையின் படி சில நேரங்களில் நடக்காமல் போகலாம், எதிர்மாறாகக் கூட சில நேரங்களில் நடக்கலாம். அதை விதிவிலக்காக எண்ணுங்கள். உங்கள் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். தொடர்ந்து நல்லதே நடக்கும் என நன்மைகளை மட்டும் எதிர்பாருங்கள். விரைவில் அந்த நம்பிக்கையின் படியே நல்ல பாதைக்கு வாழ்க்கை நிகழ்வுகள் திரும்புவதை நீங்கள் காணலாம்.
நன்றி: என்.கணேசன்
.
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
.
நீங்கள் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
.
பணமே பிரதானம் என எண்ணுபவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கை முறையில் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்பதில்லை. அவர்கள் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியும் எனக் கருதுகின்றனர். உண்மையில் நோய் பற்றிய பயத்தையும், கிருமிகளைப் பற்றிய பயத்தையும், செயற்கையாக உருவாக்கிய நோய்களான நீரிழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம், தைராய்டு... போன்றவற்றை மட்டுமே பெற முடியும். பணத்தால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
.
"பசித்தவனுக்கு மீன்களைக் கொடுத்து உதவுவதைக் காட்டிலும், எப்படி மீன் பிடிப்பது என்பதை கற்றுக் கொடுத்தால், வாழ்க்கையில் முன்னேறுவான்"